Published : 12 Jun 2018 11:03 AM
Last Updated : 12 Jun 2018 11:03 AM

மகன் கொலை வழக்கில் கைதான எழுத்தாளர் செளபா மரணம்

மகன் கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த எழுத்தாளர் செளபா உடல்நலக் குறைவால் நேற்று காலமானார்.

மதுரை டோக் நகரைச் சேர்ந்தவர் செளபா என்கிற சவுந்தரபாண்டியன்(55). இவரது மனைவி லதாபூரணம். இவர் கோவில்பட்டி அரசு கல்லூரி முதல்வராக உள்ளார். காதல் திருமணம் செய்து கொண்ட இவர்கள், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பிரிந்து வாழ்ந்தனர். இவர்களுடைய ஒரே மகன் விபின்(27). கணவன், மனைவி பிரிந்து வாழ்ந்ததால் மகனை சரியாகவும், கண்டிப்புடனும் வளர்க்க முடியவில்லை. இத னால் செல்லப்பிள்ளையாக கட்டுப்பாடில்லாமல் வளர்ந்த விபின், போதைக்கு அடிமையானார். ஒரு காலகட்டத்தில் எழுத்தாளர் சௌபாவால் தனது மகனை கட்டுப்படுத்த முடியவில்லை.

மகன் கொலையில் கைது

வழக்கம்போல, கடந்த ஏப். 30-ல் மகனுக்கும், தந்தைக்கும் வாக்குவாதம் நடந்தது. அப் போது ஆத்திரத்தில் சுத்தியலால் மகனை அடித்துக் கொன்றதாகவும், கொலையை மறைக்க திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூரில் உள்ள தனது தோட்டத்துக்கு எடுத்துச்சென்று உடலை எரித்ததாகவும் சௌபா கைது செய்யப்பட்டார். இதற்கு உடந்தையாக இருந்த தோட்டத்து ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். சௌபாவுக்கு நீரிழிவு நோய் இருந்துள்ளது. அதற்கு தொடர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர், கடந்த 22-ம் தேதி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை யில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று அதிகாலை 1 மணி அளவில் மரணமடைந்தார்.

இதுகுறித்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் மருதுபாண்டியன் கூறியதாவது: சௌபாவுக்கு காலில் ஏற்கெனவே புண் இருந்துள்ளது. சிகிச்சைக்கு வந்தபோது நீரிழிவு நோய் முற்றி புண் இருந்த இடது கால் அழுகியது. இதனால் அறுவை சிகிச்சை மூலம் கால் அகற்றப்பட்டது.

தொடர்ந்து அவருக்கு மூளை பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் கடந்த 10-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். கடந்த 2 நாட்களாக மூச்சுத் திணறல், நெஞ்சு அடைப்பு ஏற்பட்டது. மூளை பாதிப்புடன் நுரையீரலும் செயலிழக்கத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் மயக்க நிலைக்குச் சென்றார். நச்சுக் கிருமிகள் ரத்தத்தில் கலந்தன. சிகிச்சை பலனளிக்காமல் நேற்று அதிகாலை இறந்தார் என்றார்.

சௌபா ஒரு சிறைக் கைதி என்பதால், சிறை கண்காணிப்பாளர் புகாரின்பேரில் அரசு மருத்துவமனை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். நீதிபதி அனுமதிக்குப் பிறகு சௌபாவின் உடலுக்கு பிரேத பரிசோதனை நடந்தது.

மகனை கொலை செய்த கோபத்தால் சௌபாவை அவர் இறக்கும் வரை அவரது மனைவி லதாபூரணம் சிறையிலோ, மருத்துவமனையிலோ சென்று பார்க்கவில்லை. ஆனால், சௌபா இறந்த தகவல் கிடைத்ததும், நேற்று காலை அவரது உடலைப் பெற லதாபூரணம் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு வந்தார். அவரும், அவரது உறவினர்கள் சிலரும், சௌபா உடலை பிரேதப் பரிசோதனை செய்வதற்கும், உடலை பெறுவதற்கும் முன் ஏற்பாடுகளை செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x