Published : 03 Oct 2017 09:51 AM
Last Updated : 03 Oct 2017 09:51 AM

உடல் வளர்த்தேன்.. உயிர் வளர்த்தேனே 17:வளரும் குழந்தைகளை வளப்படுத்தும் ஆசனம்

பெண் குழந்தைகள் போலவே ஆண் குழந்தைகளும் 12-14 வயதில் வளர்ச்சியடையத் தொடங்குவர். இந்தக் காலகட்டத்தில் எப்படி ஒரு பெண் குழந்தைக்கு தாயின் அரவணைப்பும், வழிகாட்டுதலும் தேவையோ, அதேபோல, ஆண் குழந்தைகளுக்கு தந்தையின் அன்பும், வழிகாட்டுதலும் மிகவும் முக்கியம்.

இந்தப் பருவத்தில் ஆண் குழந்தைகளுக்கு கவனச் சிதறல் அதிகம் இருக்கும். உடலும் உணர்வுகளும் வளர்ச்சியடையும் காலம். உணர்வுப்பூர்வமாக அதிகம் தொந்தரவுக்கு ஆட்படும் இந்த பருவத்தில்தான் பெற்றோரின் கவனிப்பும், ஆதரவும் அவர்களுக்கு அவசியம் தேவை. மனமானது பக்குவப்படாத நேரத்தில், அவர்களுக்காக தாய் தந்தையர் செலவிடப்போகும் நேரத்தின் மதிப்பு அளவிட முடியாதது. எனவே, தங்கள் பிள்ளைகளுக்காக அதிக நேரம் ஒதுக்கி, வாழ்க்கையின் அடுத்தடுத்த கட்ட வளர்ச்சிகள் குறித்து நிறைய மனம்விட்டுப் பேசுவது பொறுப்புள்ள தந்தையின் கடமையாகும். இந்த உரையாடல் அப்பா - மகன் இடையே ஆரோக்கியமான உறவு உண்டாக வழிவகுக்கும்.

தனக்கான உலகத்தை, வாலிபன் கட்டமைக்கும் காலகட்டம் இது. தந்தையும் மகனுடன் ஒரு ஆத்ம நண்பனாக மாறி அந்த உலகத்துக்கு வண்ணம் கூட்ட முயற்சிக்க வேண்டும். ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், மகனுடன் சேர்ந்து தந்தையும் யோகா பயிற்சிகளைச் செய்வதால் பிள்ளைகளுக்கும் உடல் ஆரோக்கியத்தின் மேல் விருப்பம் வரும்.

குழந்தைகளைத் தினமும் அதிகாலையில் எழுந்திருக்கப் பழக்க வேண்டும். மொட்டை மாடியிலேயோ, பால்கனியிலோ உட்கார வைத்து 15-25 முறை மூச்சை பொறுமையாக இழுத்துவிட்டு, அந்தக் காலைநேரக் குளிர்ச்சியை, சுத்தமான காற்றை அவர்கள் அனுபவிக் கச் சொல்லலாம். அவர்களுடன் நடைபயிற்சி, ஜாகிங் செய்ய நேரம் ஒதுக்கினால், தந்தையும் மகனும் சேர்ந்து இருக்கக்கூடிய நேரம் அதிகமாகும். இந்தப் பயிற்சியும், பெற்றோர் காட்டுகிற அக்கறையும் வாலிப வயதில் ஏற்படும் கவனச் சிதறல்களையும், மனம் அலைபாய்வதையும் கட்டுப்படுத்தி மனம் பக்குவமடைய செய்யும்.

ஆண் குழந்தைகளுக்கு 12-14 வயதில் மனம் மற்றும் உடல் வளர்ச்சி ஏற்பட ஆரம்பித்து விடும். சின்ன வயதில் கொழுகொழுவென்று இருந்த குழந்தைகள்கூட, டீன்ஏஜ் எனப்படும் அந்த காலக்கட்டத்தில் சற்று மெலிந்து உயரமாக வளர்ந்துவிடுவார்கள். ஆண் குழந்தைகள் வளர்ச்சியடையும்போது உறுப்புகளும் வளர்ச்சியடைவதால் ரத்த ஓட்டம் அதிகரித்து, உயரமாக வளர ஆரம்பிப்பார்கள்.

ஆண் குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு சர்வாங்காசனம் மிகவும் சிறந்தது. இதோடு தனுராசனம், புஜங்காசனம், நடராஜ ஆசனம் ஆகியவற்றையும் செய்யலாம். நெஞ்சு, தோள்பட்டை, புஜம் ஆகியவை நன்கு விரிந்துகொடுத்து, ரத்த ஓட்டம் பாய்வதற்கும், உடல் நல்ல பொலிவோடும், அழகோடும் இருப்பதற்கும், சர்வாங்காசனம் மிகவும் நல்லதொரு ஆசனம்.

சர்வாங்காசனம் எப்படி செய்வது?

முதலில், இரு கைகளையும் தொடைக்கு அடியில் வைத்துக்கொண்டு, இரு கால்களையும் பொறுமையாக இடுப்புக்கு மேலே 90 டிகிரி கோணத்தில் தூக்க வேண்டும். இடுப்புக்கு மேலே மெதுமெதுவாகத் தூக்கும்போது, இரு கைகளின் முட்டி யும் உடம்பை ஒட்டி இருக்க வேண்டும். இரு கால்களையும் இடுப்புக்கு மேலே தூக்கி, இரு உள்ளங்கைகளும் இடுப்புக்கு பின்பக்கம் வைக்க வேண்டும். பின்னர், முழங்கையை தரையில் ஊன்றிக்கொண்டு மெதுவாக கால்களைத் தூக்கும்போது 90 டிகிரி அளவுக்கு செங்குத்தாக வைக்க வேண்டும். உடல் எடை முழுவதும் இப்போது தோள் மற்றும் புஜத்தில் இருக்கும்.

இதனால், நமது பின் கழுத்து, முகுளம், தலை, இதயம், நுரையீரல் போன்ற பகுதிகளுக்கு ரத்த ஓட்டம் நன்றாகச் செல்லும். இதனால் உள்ளுறுப்புகளை நன்றாக இயங்க வைக்கும்.

இப்போது இடுப்பை பொறு மையாக இறக்கிக் கொண்டுவந்து, கால்களை இறக்கி அகலமாக வைத்துக்கொள்ள வேண்டும். கைகளையும் உடலைவிட்டு நன்றாகத் தள்ளிவைத்து பொறுமையாக மூச்சை இழுத்துவிட வேண்டும்.

படுத்துக்கொண்டு சர்வாங்காசனம் செய்யும்போது தலை, கழுத்து, நெஞ்சுப் பகுதிக்கு ரத்த ஓட்டம் அதிகம் பரவும். உடல் சுறுசுறுப்பாக இருக்கும்.

ஆசனத்தை செய்து முடித்து, நாம் பதற்றப்பட்டு எழுந்து உட்கார்ந்தால், அந்த ரத்த ஓட்டம் வேகமாக கீழ் நோக்கி இறங்கும் என்பதால் மயக்கம் வர வாய்ப்பு உள்ளது.

எனவே, பொறுமையாக நிதானித்து பழைய நிலைக்கு திரும்புவது அவசியம். முதுகு, கழுத்துவலி, இதயக் கோளாறு இருப்பவர்கள் இந்த ஆசனத்தை செய்யக் கூடாது.

- யோகம் வரும்...

எழுத்தாக்கம்:

ப.கோமதி சுரேஷ்

படங்கள்: எல்.சீனிவாசன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x