Published : 03 Dec 2015 01:28 PM
Last Updated : 03 Dec 2015 01:28 PM

வரமும் சாபமும்

‘அழிவுக்கு யார் பொறுப்பு ?’ நல்ல கட்டுரை. தங்களது பொறுப்புகளை உணராத மக்கள் பிரதிநிதிகள், அன்றாட வயிற்றுப்பாட்டைத் தீர்க்கவே நேரமில்லாத அப்பாவி மக்கள், அதிகாரத்தின் துணையோடு ஆணவத்தில் மிதக்கும் அதிகார வர்க்கம் இவர்களின் ஓட்டுமொத்த அலட்சியமே கடலூரைச் சூறையாடியது.

மக்களின் மரணத்தை வெறும் இழப்பீடாகப் பார்க்கும் அரசு நிர்வாகம், ஏதாவது கிடைத்தால்போதும் என்ற நிலையில் உள்ள பரிதாப மக்கள்... பங்கு வைக்கப்போகும் நிதியில் தங்களின் பங்கு என்ன… என்று எதிர்பார்த்துக் காத்திருக்கும் மக்கள் பிரதிநிதிகள். இது போன்றவர்கள் வாழும் நாட்டில் விவசாயத்தைப் பொறுத்து மழை ஒரு வரம். அப்பாவி மக்களைப் பொறுத்து அதுவே ஒரு சாபம். வேறு எதைச் சொல்ல...?

- கே.எஸ் முகமது ஷூஐப், காயல்பட்டினம்.

தண்ணீர் சொன்ன உண்மை

‘அழிவுக்கு யார் பொறுப்பு?’ கட்டுரை எத்தனை அழுத்தமான பதிவோ அதுபோன்றே இந்தக் கட்டுரைக்கான ஒளிப்படமும் எடுக்கப்பட்டுள்ளது. கடலூரின் வெள்ளப்பெருக்கில் உடைமைகளை, உறைவிடத்தை இழந்து நிற்கும் ஒரு பாமரப் பெண். அவரின் பின்புறத்தில் இத்தனை ஆண்டுகள் ஆண்ட, இனி வரும் காலங்களில் ஆளப்போகிற இரண்டு மாபெரும் கட்சிகளின் சின்னங்கள் இருப்பது பலவற்றை உணர்த்துகின்றன.

இந்தக் காட்சிகளை அரசியல் கட்சிகள் எதிர்காலத்தில் மாற்றும் என்பதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லையே. சோற்றுக்கும் காசுக்கும் என்றுமே தேவைக்குக் குறையாமல் வைத்துக்கொள்வதுதான் இந்த அரசியல் சதுரங்க விளையாட்டின் அடிப்படை இலக்கணம். கடைசி வரைக்கும் பகடைக் காய்களாகவும், பலிகடாக்களாகவும் பரிதவிக்கப்போவது அப்பாவி மக்களே.

- எஸ்.எஸ். ரவிக்குமார், கிருஷ்ணகிரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x