Published : 12 Aug 2015 10:39 AM
Last Updated : 12 Aug 2015 10:39 AM
முசிறியைச் சேர்ந்த சுவாதி, தனக்கு வந்த கோவை வேளாண் பல்கலைக்கழக அழைப் பிதழைச் சரியாகப் பார்க்காமல், தவறுதலாக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்குச் சென்று தவிப்புடன் நின்றபோது, பாண்டியன், சரவணன், ஜெய்சங்கர், பரமசிவம் ஆகியோர் மாணவி சுவாதிக்கு உதவி புரிந்ததோடு, இந்த விவரத்தை கோவை வேளாண் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கும் தெரிவித்து, அவர்களை விமானம் முலம் சென்னையிலிருந்து கோவைக்கு அனுப்பி உதவியிருக்கும் செயலை எண்ணும்போது, ‘மனிதன் என்பவன் தெய்வமாகலாம்’ என்ற பாடல் வரிகளே நினைவுக்குவருகின்றன.
- நன்னிலம் இளங்கோவன், மயிலாடுதுறை.
***
சுவாதிக்கு உதவியவர்களின் மனிதாபிமானம்பற்றி வாசித்தபோது, மனம் மகிழ்ச்சியால் நிறைந்தது. மனித நேயத்தால் அந்த ஏழை மாணவிக்கு உதவிய அவருக்கும், விதிகளைவிட மனிதநேயமே முக்கியம் என்பதை நடைமுறைப்படுத்திக்காட்டி, மாணவியின் எதிர்காலத்தை வளமிக்கதாக்க உதவிய கோவை வேளாண் பல்கலைக்கழகத் துணை வேந்தருக்கும் பதிவாளருக்கும் நன்றி.
இங்கு கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன. ‘கருணை பொங்கும் உள்ளம்… அதுவே கடவுள் வாழும் இல்லம்.’ இத்தகைய அன்பின் வெளிப்பாடுகள் நம்பிக்கையும் மனநிறைவும் அளிக்கின்றன.
***
- தா. சாமுவேல் லாரன்ஸ்,மின்னஞ்சல் வழியாக…
***
சுவாதியைக் கோவைக்கு விமானம் மூலம் அனுப்பி உதவி புரிந்து நண்பர்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. ‘நல்லார் ஒருவர் உளரேல், அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை’ என்ற வாக்குக்கு ஏற்ப மழை பொழிவது, இவர்களைப் போன்றவர்களால்தான்! யாரோ எப்படிப்போனால் எனக்கென்ன என இருக்காமல், பேருதவி புரிந்த அம்மாமனிதர்கள் இருக்கும் திசை நோக்கி வணங்குகிறேன்.
- ந.ச.நடராசன்,வாலாசாப்பேட்டை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT