Published : 16 Jul 2015 10:40 AM
Last Updated : 16 Jul 2015 10:40 AM
தகவல் அறியும் உரிமையும் மக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்று என்பதை ‘நீங்கள் பதில் சொல்ல வேண்டியவர்கள் இல்லையா?’ தலையங்கம், அரசியல் கட்சிகளுக்கு உணர்த்தியுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களின் நிதி நிர்வாக முறைகளைத் தகவல் அறியும் சட்ட வரம்புக்குள் கொண்டுவர எதிர்ப்புத் தெரிவிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.
இந்தச் செயல்பாடு, தங்களின் நிதிநிர்வாகத் தவறுகளை மூடி மறைக்க முயல்கின்றன என்பதைத்தான் காட்டுகிறது. அரசியல் கட்சிகளின் நிதிநிர்வாகத்தில்கூட வெளிப்படைத்தன்மை உறுதிசெய்யப்படுவது சாத்தியமில்லை என்றால், ஊழலற்ற சமூகத்தை எப்படிக் கட்டமைக்க முடியும். ஊழல், லஞ்சம், கருப்புப் பணம் இவற்றையெல்லாம் ஒழிப்போம் என்று மக்களிடம் உறுதியளிக்கும் அரசியல் கட்சிகள், இதைச் செய்வதைத் தங்களுடைய நிதிநிர்வாக முறைகளில் சட்டப்படியான வெளிப்படைத்தன்மையை உருவாக்கிக்கொள்வதிலிருந்து தொடங்க வேண்டும். இதை ஏற்றுக்கொள்ளாத எந்தக் கட்சியும் மக்களாட்சி சமூக அமைப்புக்கான அரசியல் கட்சியாக இருக்க முடியாது.
அரசியல் கட்சிகள் தங்களை முதலில் ஒரு சமூக அமைப்பின் அங்கமாகக் கருத வேண்டும். ஒரு சமூக அமைப்பின் நெறிகளைத் தங்களுக்குள்ளும் உள்ளீடாக மாற்றிக்கொள்ள வேண்டும். உச்ச நீதிமன்றமும் இதுகுறித்துக் கேள்வி எழுப்பியுள்ளதால், அதன் மூலமாகவும் நல்லதொரு முடிவு கிடைத்தால் மகிழ்ச்சி.
- சு. மூர்த்தி,காங்கயம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT