Published : 10 Jul 2015 10:44 AM
Last Updated : 10 Jul 2015 10:44 AM
குழப்பங்களை ஏற்படுத்தி அதில் அரசியல் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தற்போது ஆட்சி செய்யும் பாஜக-காரர்களுக்கு அடிக்கடி ஏற்படுகிறது.
அதன் சமீபத்திய உதாரணம்தான் ராஜஸ்தான் ஆளுநர் கல்யாண் சிங்கின், ‘தேசிய கீதத்தில் மாற்றம் செய்ய வேண்டும்’ என்ற கோரிக்கை.
உண்மையில், இங்கிலாந்து நாட்டின் மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் இந்தியாவுக்கு வருகை தந்தபோது, அவரை வரவேற்றுப் பாடப்பட்ட நெடிய பாடலில் உள்ள ஒரு பகுதியே நமது தேசிய கீதம். இன்று நம்மால் பாடப்படும் தேசிய கீதம், ‘இந்தியாவின் ஒவ்வொரு பகுதியும் இந்தியத் தாயே உன்னை வாழ்த்துகிறது. நீ வாழ்க! வாழ்க! வாழ்க!’ என்ற அர்த்தத்தில்தான் பாடப்படுகிறது.
கல்யாண் சிங்கின் அறிக்கை ஒரு குறிப்பிட்ட சமயத்தினரை எதிர்ப்பதாக உள்ளது. அக்பர், ராணி விக்டோரியா, ஒளரங்கசீப் ஆகிய வரலாற்று மாந்தர்களை ஏன் வம்புக்கு இழுக்க வேண்டும்? இவர்களை இவ்வாறு சீண்டுவதன் மூலம் யாரை வம்புக்கு இழுக்கின்றனர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
நீங்கள் அக்பர், ராணி விக்டோரியா, ஔரங்கசீப் ஆகியோரைப் பேரரசர்களாக ஏற்காவிட்டாலும் அவர்கள் வாழ்ந்த காலத்தில் பேரரசர்கள்தான். நண்பர்களே! தயவுசெய்து வரலாற்றை மாற்ற நினைக்காதீர்கள். உங்கள் வெறுப்பூட்டும் அரசியல் செயல்பாடுகளைக்கூட இந்த வரலாறு பதிவுசெய்துகொண்டுவருகிறது என்பதை உங்கள் கவனத்துக்குக் கொண்டுவருகிறேன்.
- பேராசிரியர் முனைவர் செ. சேவியர்,மின்னஞ்சல் வழியாக…
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT