Published : 19 Jul 2017 10:50 AM
Last Updated : 19 Jul 2017 10:50 AM

இப்படிக்கு இவர்கள்: கற்றுக்கொள்ள வேண்டிய படிப்பினைகள்!

கற்றுக்கொள்ள வேண்டிய படிப்பினைகள்!

ஊடகவியலாளர் திரு.வீரபாண்டியன், காமராஜர் குறித்துப் பகிர்ந்துகொண்ட நினைவுகளையும், அதில் அப்பள வியாபாரிகளின் நலன் கருதி, காமராஜர் மதிப்புக் கூட்டு வரியினை நீக்கம் செய்த செய்தியையும் படித்தேன். இன்றைய அரசு பேசிவரும் சுதேசிப் பொருளாதாரத்துக்கும், ‘மேக் இன் இந்தியா’ கொள்கைக்கும் கிஞ்சித்தும் சம்பந்தமின்றி, சாமானிய மக்கள் குடிசைத் தொழில் மூலம் தயாரிக்கப்படும் பொருளுக்குக்கூட அதிக வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற வரிகள் அத்தொழிலை மேலும் நலிவடையச் செய்யும். இதை ஆட்சியாளர்கள் உணரத் தவறிவிட்டனர். காமராஜரிடம் ஆட்சியாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய படிப்பினைகள் நிறையவே இருக்கின்றன.

-செ.த.ஆகாஷ், மாணவர், தஞ்சாவூர்.

ஆளுநர் அரசியல்

‘முதல்வர்கள் இடத்தை ஆளுநர்கள் பிடிக்கலாமா?’ தலையங்கம் (ஜூலை 7) படித்தேன். இந்திய அரசியலமைப்பில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களால் தெரிவுசெய்யப்படுபவரே முதல்வர். ஆளுநர் மத்திய அரசால் நியமனம் செய்யப்படுபவர். பதவியின் முக்கியம் அல்லது மதிப்புகள் மூலம் யார் அதிகாரம் மிக்கவர் என்று பார்த்தால், முதல்வரே முக்கியமான பொறுப்புடையவர். எனவே, பொறுப்பானவரை மக்கள் பணியாற்ற தடங்கல் செய்யும் ஆளுநரின் போக்கு முற்றிலும் கண்டிக்கத்தக்கது. ஆளும் பாஜக அரசு, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களை ஆளவிடாமல் ஏன் தனது மரியாதையை இழக்க வேண்டும்?

-எஸ்.சொக்கலிங்கம் கொட்டாரம்.

புறக்கணிப்பே மரணம்!

‘முதியவர்களை அரவணைக்க வேண்டாமா அரசு?’ கட்டுரை, வயதைச் சுமந்து நிற்கும் முதியோர் நிர்க்கதியாகும் நிலை பற்றி கவலைகொள்ளச் செய்தது. வயதானவர்கள் எண்ணிக்கை அதிகமாகும்போது பொருளாதாரத்தில் கீழ்நிலையில் உள்ள மக்கள் அவர்களைக் கைவிடும் அவலம் அதிகமாகும். அவமதிப்பு, உறவுகளால் கைவிடும் நிலை, புறக்கணிப்பும் அதிகரிக்கும். 2007ல் மத்திய அரசு மூத்த குடிமக்கள் நலம் மற்றும் பராமரிப்புச் சட்டத்தின்படி, நீதிமன்றம் வாயிலாகவும், ஆர்.டி.ஓ. வாயிலாகவும் உரிமைகளைப் பெற முடியும் என்றாலும், பிள்ளைகளே தம் பெற்றோருக்கு கெளரவமிக்க வாழ்வைத் தந்தால் அதைவிட அரவணைப்பு வேறில்லை. ஏனெனில், புறக்கணிப்புதான் உண்மையான மரணம்!

- ப.மணிகண்டபிரபு, திருப்பூர்.

தனிப் பெருந்தலைவர்!

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை உயிரோட்டத்துடன் வைத்திருக்கும் ஒரே பெயர் காமராஜர். காங்கிரஸ் ஆட்சியைக் கடுமையாக எதிர்த்து வந்த பெரியாரே கூட, காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு முழு ஆதரவு அளித்தார். காமராஜரின் எளிய வாழ்வு இன்றைய சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தாண்டி அனைவரும் பின்பற்ற வேண்டியது. தேசியக் கட்சிகளின் மாநிலத் தலைமை அனைத்தும் டெல்லிக்குக் கட்டுப்பட்டவை என்பதை மீறி, தேசிய நீரோட்டத்தில் தனித்தன்மை மிக்க தலைவராகத் திகழ்ந்தார். கர்மவீரர், பெருந்தலைவர் என்பதைக் கடந்து தமிழக அரசியல் வரலாற்றிலும் மக்கள் மனதிலும் என்றும் அவர் தனிப்பெருந்தலைவரே!

- த.ரா.பாலாஜி, சின்னசேலம்.

மனதை மயக்கும் தொடர்கள்

தி இந்துவில் வெளிவரும் ‘கடவுளின் நாக்கு’, ‘பார்த்திபன் கனவு’, ‘கடலம்மா பேசுறேன் கண்ணு’ ஆகிய தொடர்களை வாசித்துவருகிறேன். மனித வாழ்வின் அடிப்படைத் தாத்பரியங்களைக் கூறி, பொருத்தமான புத்த ஜாதகக் கதையும் கூறியிருந்தார் எஸ்.ராமகிருஷ்ணன். சமுதாயத்தின் சீர்கெட்ட சிந்தனை ஓட்டத்தை ‘நான் பெரிய ஆளாக வளர்ந்து, பெரிய வில்லனாகிடுவேன்’ என்ற குழந்தைகளின் வார்த்தைகள் வாயிலாக வெளிச்சம் போட்டுக் காட்டியிருந்தது அருமை. ‘பார்த்திபன் கனவு’ தொடருக்கு கல்கியின் எழுத்து நடையும், ஓவியர் பத்மவாசனின் கோட்டோவியங்களும் சிறப்பு.

- சேவியர் மெத்தோடியஸ், தூத்துக்குடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x