Published : 27 Sep 2016 09:55 AM
Last Updated : 27 Sep 2016 09:55 AM

எது இறையாண்மை?

தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் வழங்க வேண்டியதன் நியாயத்தை உறுதியுடன் எடுத்துரைத்திருக்கிறார், ‘தமிழகம் அடையும் பயன் என்ன?’ என்னும் கட்டுரை மூலம் பெ.மணியரசன். அக்கட்டுரை, தமிழகம் எதிர்கொள்ளும் பல்வேறு சிக்கல்களையும் பட்டியலிடுகிறது. மாணவப் பருவத்திலிருந்து ‘இந்தியா எனது தாய்நாடு - இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தோர்’ என்று வளர்கிறோம்.

ஆனால், கள நிலவரமோ வேறு விதமாக இருக்கிறது. தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகள் பெரும்பாலும் நமது அண்டை மாநிலங்களால் உருவாக்கப்படுவதும், அதனைத் தீர்த்துவைக்க வேண்டிய இந்திய ஆட்சியாளர்கள் பாராமுகமாக இருப்பதும் தெளிவாகத் தெரிகிறது. ‘இறையாண்மை என்பது, ஒருவனைப் பலியிட்டு மற்றவருக்குப் படையலிடுவதல்ல. மாறாக, வளங்களைச் சமமாகப் பகிர்வதே’ என்பதை இந்திய ஆட்சியாளர்கள் உணர்வார்களா?

- அரசன் கதிர், மின்னஞ்சல் வழியாக.



கைதிகளின் உளவியல்

முன்னாள் சிறைத் துறை டிஜிபியின் ‘அறிவியல்பூர்வமாகத் தற்கொலையைத் தடுக்க முடியும்’ என்னும் பேட்டியை வாசித்தேன். தற்கொலை செய்துகொள்ள முயல்பவர்களை முன்கூட்டி அறிய முடியும் என்பது உண்மையே. ஆனால், அதனைக் கண்டறிய முறையாக உளவியல் பயிற்சி பெற்றவர்களை நியமிக்க வேண்டும். உளவியலாளர்கள், உளவியல் சிகிச்சையாளர்கள், உளவியல் மருத்துவர்கள் எனப் பல வகையினர் இருக்கிறார்கள். இதில், நடத்தை மாற்ற நுண் முறைகளையும், சிந்தனை மாற்றுச் சிகிச்சை, லோகோ தெரபி மற்றும் சோதனைகளைப் பற்றி அறிந்தவர்களைப் பணியில் நியமிக்க வேண்டும். இல்லையென்றால், இந்த யோசனை பலனளிக்காது போய்விடும்.

- டாக்டர் ஜி.ராஜமோகன், உளவியல் சிகிச்சைப் பேராசிரியர் மற்றும் முன்னாள் சிறைத் துறை ஆலோசகர்.



அரசின் கடமை

அகில இந்திய அளவில் அரசுப் பள்ளிகளும், பொதுவாகவே அரசு நிறுவனங்களும் திட்டமிட்டு ஊனப்படுத்தப்படுவதாகத் தோன்றுகிறது. ‘நீட்’ தேர்வு அவசியம் என்றால், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களைத் தயார் செய்வதும் அரசின் கடமை. ஒன்று, பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும் அல்லது சிறப்புப் பயிற்சிகள் பள்ளியிலேயே கொடுக்கப்பட வேண்டும்.

மைய அரசு பொதுவான தேர்வுகளைக் கொண்டுவருவதை குறைகூற முடியாது. மாநில அரசுதான் அதற்கேற்றவாறு கல்வி முறையில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். தமிழக அரசு தொடர்ந்து மௌனிக்குமானால் தமிழ்ச் சமூகம் கட்டாயம் பேச வேண்டும். ஏழு லட்சம் அரசுப் பள்ளி மாணவர்களில் 24 பேர் மட்டுமே இந்த முறை தேர்வானது கல்வி முறையின் தரத்தை அல்லவா காட்டுகிறது?

- எஸ்.தங்கவேல், மாடம்பாக்கம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x