

தவெக ஆட்சி அமைத்து 100 நாள்களுக்கு மேல் ஆகிவிட்டது. அதையொட்டி ஊடகர்களும் ஆர்வலர்களும் ஆட்சியின் நிறைகுறைகளை அலசிவருகிறார்கள். நிறை கண்டவர்களில் மிகுதியும், புதிய ஆட்சியில் ஊழல் குறைந்துவிட்டது என்றும், இப்போது அரசு அலுவலர்கள் கையூட்டு வாங்குவதில்லை என்றும் குறிப்பிடுகிறார்கள். இது நல்லது.
வரவேற்கத்தக்கது. எனில், ஊழலை ஒழிக்க இன்னும் செய்ய வேண்டியவை உண்டு. ஊழல் என்பது அரசு அலுவலகங்களில் தொடங்குவதில்லை; அங்கேயே முடிவதுமில்லை. அது நம் நாட்டில் நிறுவனமயம் ஆக்கப்பட்டிருக்கிறது. செல்வமும் செல்வாக்கும் உள்ள பெரிய மனிதர்களால் அது இயக்கப்படுகிறது.
ஒவ்வொரு துறையிலும் அதன் ஊற்றுக்கண் வேறுபடும்; செயல்படும் முறைகளும் மாறுபடும். அவற்றை இனங்கண்டு அகற்றுவதற்கான செயல்திட்டம் வகுக்கப்பட வேண்டும். நாம் இந்த உரையாடலுக்கு ரியல் எஸ்டேட் துறையை எடுத்துக்கொள்ளலாம்.
இரண்டு மதிப்புகள்
ஒருவர் ஒரு மனையிடத்தை வாங்குகிறார் என்றால், அதைச் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவுசெய்வார். பத்திரத்தில் அவர் குறிப்பிடும் மதிப்பு, அந்த நிலத்தின் வழிகாட்டி மதிப்பாக (guideline value) இருக்கும். இப்போது இந்த மதிப்பு தமிழ்நாடு பதிவுத் துறையின் இணையத்தளத்திலும் (TNREGINET) ஏற்றி வைக்கப்படுகிறது.
தவிர, பத்திரத்தில் காட்டப்படும் மதிப்பில் 7% முத்திரைக் கட்டணமாகவும் (stamp duty), 4% பதிவுக் கட்டணமாகவும் (registration charges), ஆக 11% அரசுக்குச் செலுத்த வேண்டும். பரிமாற்றம் இந்த இடத்தில் முடிவதில்லை.
நமது நாட்டில் சொத்துக்களின் சந்தை மதிப்பு (market value) பதிவுத் துறை ஆவணங்களில் குறிப்பிடப்படும் வழிகாட்டி மதிப்பைவிட அதிகமாக இருக்கும். இது ஊருக்கு ஊர், இடத்துக்கு இடம் மாறுபடும். 10 மடங்கு வரைகூட அதிகமாக இருக்கும்.
விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக மாறுகிற சில இடங்களில் இந்த வித்தியாசம் இன்னும் அதிகமாகக்கூட இருக்கும். ஒரு சொத்தை விற்பவர் அதன் சந்தை மதிப்பை ஒட்டிய விலைக்கே விற்பார்.