Published : 19 Feb 2016 10:02 AM
Last Updated : 19 Feb 2016 10:02 AM

மீனவர்களின் 10 பிரதான கோரிக்கைகள் என்ன?

1. பழவேற்காடு ஏரி, பக்கிங்காம் கால்வாய், மன்னார் கடல் பகுதிகளைச் சூழலியல் சீர்கேடுகளிலிருந்து பாதுகாக்கப் போர்க்கால நடவடிக்கை.

2. கடல் மீன்வளத்தைச் சீராகப் பராமரிக்க பாலாறு முதல் தாமிரபரணி வரையிலான அனைத்துத் தமிழக ஆறுகளின் உபரிநீரும் போதுமான அளவு கடலில் கலக்கவிட வேண்டும். ஆற்றுப்படுகைகளிலும், கடற்கரைகளிலும் மணல் மற்றும் கனிம மணல் கொள்ளை முற்றிலுமாகத் தடை செய்யப்பட வேண்டும்.

3. சுற்றுச் சூழலுக்குத் தீங்கு விளைவிக்கிற, கடற்கரை உவர்நீர் இறால் பண்ணைகளை மூடிவிட வேண்டும்.

4. கடற்கரையில் மீன்பிடித் துறைமுகங்கள், மீன்பிடித் தங்குதளங்கள், வணிக முனையங்கள், கடல் அரிப்புத் தடுப்புச் சுவர்கள் உள்ளிட்ட அடிப்படை மீன்பிடிக் கட்டுமானத் தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.

5. அந்தமான் கடல் பகுதியில் தமிழக விசைப் படகுகள், மீன்பிடிக்க நவீன தொழில்நுட்பமும், வழிகாட்டுதலுடன் பாதுகாப்பும் வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும்.

6. மன்னார் பல்லுயிர்ச் சூழலியல் பகுதியில் விசை மீன்பிடிப் படகுகளின் இயக்கத்தைத் தடை செய்ய வேண்டும். தமிழ்நாட்டுக் கடலில் ரெட்டைமடி, சுருக்குமடி வலை பயன்பாட்டை உடனே தடை செய்ய வேண்டும்.

7. எங்கள் ஆழ்கடல் மீன்வளங்களைக் கொள்ளையிட்டு, கடலைச் சீரழிக்கும் பன்னாட்டு மீன்பிடிக் கப்பல்களின் உரிமங்களைத் திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

8. ஒருங்கிணைந்த நடுவண் கடல் மீன்பிடிச் சட்டம் கொண்டுவர மத்திய அரசை வற்புறுத்த வேண்டும். பாரம்பரிய மீன்பிடிப் படகுகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ள 3 கடல் மைல் எல்லைக்குள் விசைப் படகுகள் மீன் பிடிப்பதை முற்றாகத் தடை செய்ய வேண்டும்.

9. தூத்துக்குடி ஸ்டெர்லைட், கடலூர் சிப்காட், எண்ணூர் பேசின் பிரிட்ஜ் அனல் மின்நிலையம் போன்றவற்றால் ஏற்பட்டுள்ள கடல் சீர்கேட்டைத் தணிக்கை செய்து, கடல் சூழலைக் காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

10. 10 ஆண்டுகளுக்கு முன்பே காலாவதியாகிவிட்ட, கல்பாக்கம் அணுமின் நிலையத்தை நிரந்தரமாக மூட வேண்டும். கூடங்குளம் அணு மின் திட்டம் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தமிழகக் கடல் சூழலைக் கெடுக்கும் வகையில் கூடங்குளத்தை மேலும் மேலும் அபாயகரமாக்கும் முயற்சிகளைக் கைவிட வேண்டும். மேலும், தமிழகக் கடற்கரையில் 100 அனல்மின் நிலையம் அமைக்கும் முயற்சியை மாநில அரசு கைவிட வேண்டும். அதற்குப் பதில், சோலார் மின் உற்பத்தி போன்ற சுற்றுச் சூழலுக்குக் கேடு விளைவிக்காத திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x