Published : 13 Dec 2015 12:13 PM
Last Updated : 13 Dec 2015 12:13 PM

போதும், உங்கள் அன்பு மழை!

அள்ளித் தரும் அன்பு வாசக உள்ளங்களே, உங்கள் தாராள உள்ளத்தின் விசாலத்தை அளவிட முடியவில்லை. கடலூர், விழுப்புரம், புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்கு நீங்கள் நீட்டிய உதவிக் கரங்கள், இப்போது சென்னை வரைக்கும் நீண்டிருக்கிறது. என்னவெல்லாம் உதவிகள் வேண்டும் என்று நாங்கள் சொல்லச்சொல்ல அனுப்பிக்கொண்டே இருந்தீர்கள்... இருக்கிறீர்கள்! இளைஞர்கள், மாணவர்கள், இல்லத்தரசிகள், சமூக அந்தஸ்துமிக்கவர்கள் என பாரபட்சமில்லாமல் சுமார் 250 தன்னார்வலர்கள் உங்கள் உதவிப் பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு அயராமல் கொண்டு சேர்க்கிறார்கள்.

அதே சமயம், தமிழகத்திலிருந்தும் அண்டை மாநிலங்களிலிருந்தும் வரும் உதவிப் பொருட்களை எந்தக் கட்டணமும் இல்லாமல் கொண்டு வந்து சேர்க்கும் மகத்தான சேவையை முழு மகிழ்ச்சியுடன் செய்தது கேபிஎன் டிராவல்ஸ் நிறுவனம், உங்களிடமிருந்து நீளும் ஆயிரமாயிரம் உதவிப் பொருட்களால் நிரம்பி வழிகின்றன நமது நிவாரண முகாம்கள். என்னதான் நாங்கள் வேக வேகமாக நிவாரணப் பொருட்களை கொண்டுபோய் சேர்த்தாலும் அதைவிட வேகமாக நீள்கின்றன உங்கள் உதவிக்கரங்கள். நெஞ்சம் நெகிழ்கிறது வாசகர்களே.

நீங்கள் அனுப்பியதைக் கொண்டு, பாதிக்கப்பட்டவர்களின் குறுகியகால தேவைகளை முடிந்த அளவு பூர்த்தி செய்துள்ளோம். அடுத்த கட்டமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நீண்டகால தீர்வுகள் என்ன என்பது குறித்து கள ஆய்வுகள் நடக்கின்றன. கொட்டிய மழையும் கொஞ்சம் ஒய்ந்திருக்கிறது. எனவே, உங்கள் உதவிக்கரங்களுக்கும் சற்றே ஒய்வு கொடுங்கள். இதுவரை நீங்கள் அளித்துள்ள பொருட்களை விநியோகித்து முடிக்க இன்னும் ஒரிரு வாரங்கள் ஆகலாம். அரசிடமிருந்து மக்களுக்கு மெல்ல மெல்ல உதவிகள் கிடைக்கின்றன. நீங்கள் அனுப்பிய உதவிகள் போதும், எங்களுக்கு அனுப்பி வைக்க கேபிஎன் நிறுவனத்தில் பொருட்களை ஒப்படைக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். எங்கள் கடமையை உங்கள் சார்பாக சரிவர நிறைவேற்ற அவகாசம் அளியுங்கள். போதும் உங்கள் அன்பு மழை.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் 'தி இந்து'வின் இந்த மகத்தான முயற்சியில் பொருட்களை சேகரித்து கொண்டு வந்து சேர்ப்பதில் ஒய்வின்றி பணியாற்றிய கேபிஎன் நிறுவனம் மற்றும் அதன் ஊழியர்களை நன்றியோடு நினைவு கூருகிறோம். மேலும், 'தி இந்து'வின் சேவையில் இணைந்து பங்களிப்பு செய்த ஏர்செல், என்டிஎல் டாக்ஸி நிறுவனங்கள், மகரிஷி வித்யா மந்திர் அமைப்பினருக்கும் எங்களின் மனம் நிறைந்த நன்றியை பகிர்ந்து கொள்கிறோம்.

குறிப்பு: இதுவரை பல வழிகளில் மேற்கொண்ட நிவாரணப் பணிகள் பற்றிய முழு விவரங்களை விரைவில் உங்களுடன் பகிர்ந்துகொள்வோம்.

-ஆசிரியர்