Published : 14 Dec 2015 09:11 AM
Last Updated : 14 Dec 2015 09:11 AM

ரஷ்யா, துருக்கி: உறவு துளிர்க்கட்டும்!

ரஷ்ய இணைய இதழ்

*

ரஷ்யப் போர் விமானத்தை துருக்கி சுட்டு வீழ்த்திய சம்பவம் நடந்து இரண்டு வாரங்களுக்கு மேலாகி விட்டது. இதுவரை இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவு இன்னும் சுமுகமடையவில்லை. தொடக்கத்தில் இரண்டு நாடுகளும் இப்பிரச்சினை குறித்து அத்தனை கடுமையாகப் பேசிக்கொள்ளவில்லை. ஆனால், வெகு விரைவி லேயே, பொருளாதாரத் தடை உட்பட கடினமான முடிவுகள் எடுக்கும் அளவுக்கு இரு நாடுகளும் பரஸ்பரம் கடும் எதிர்ப்பைப் பதிவுசெய்தன.

நட்பு நாடுகள் இரண்டும் இப்படி மோதல் போக்கைக் கடைப்பிடித்துவருவது ஏற்றுக்கொள்ள முடியாதது. அதுமட்டுமல்லாமல், இந்தப் போக்கு இரண்டு நாடுக ளுக்கும் எந்தப் பலனையும் தரப்போவதில்லை. இந்த விஷயத்துக்காக இரண்டு நாடுகளின் மக்கள் வலியை உணர்வது அர்த்தமற்றது. சரி, இதுபோன்ற சம்பவம் இன்னும் 5 அல்லது 10 ஆண்டுகளில் மீண்டும் நடக்கும் என்று எதிர்பார்க்க முடியுமா? இல்லை. பிறகு எதற்கு இந்த ஒரு விஷயத்தை வைத்து இரண்டு நாடுகளும் பகைமை பாராட்ட வேண்டும்?

ரஷ்ய விமானத்தை துருக்கி சுட்டு வீழ்த்தியிருக்க வேண்டாம். தங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளை ரஷ்ய விமானிகளால் புரிந்துகொள்ள முடியாமல் போயி ருக்கலாம். இது மனிதத் தவறாகத்தான் இருக்க வேண்டும். அப்படியான பட்சத்தில் அந்த எச்சரிக்கை தொடர்ந்து வெளியிடப்பட்டிருக்க வேண்டும். அந்த விமானத்தை வழிநடத்தி எல்லையிலிருந்து வேறு பகுதிக் குக் கொண்டுசென்றிருக்கவும் துருக்கியால் முடியும். இன்றைய காலத்தில் அநேகமாக எல்லா நாடுகளும் தங்கள் வான்வழி எல்லையில் பிற நாட்டு விமானங்களின் அத்துமீறலை எதிர்கொள்கின்றன. அப்படி வரும் விமானங்களைச் சுட்டு வீழ்த்த சர்வதேசச் சட்டம் அனுமதிக்கிறது என்றாலும், அப்படிச் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

கடந்த வாரம் ‘இஸ்தான்புல் ஸ்ட்ரெய்ட்ஸ்’ கால்வாய் பகுதியில், நீரிலும் நிலத்திலும் செல்லும் ரஷ்யக் கப்பலில், தோளில் வைத்துச் சுடும் ஏவுகணையை ரஷ்ய வீரர் வைத்திருந்த காட்சி வெளியானது. இது மாண்ட்ரெக்ஸ் மாநாட்டுத் தீர்மானத்துக்கு எதிரானது என்று துருக்கி வெளியுறவுத் துறை மற்றும் அந்நாட்டு ஊடகவியலாளர்கள் சிலர் விமர்சித்தனர். எனினும், இதுதொடர்பாக எந்த நடவடிக்கையையும் துருக்கி எடுக்கவில்லை. ரஷ்ய வீரரின் அச்செயல் தங்களுக்கு அச்சுறுத்தல் தரக்கூடியது என்று துருக்கி குற்றம்சாட்டியிருக்க முடியும். ஆனால், அந்நாடு அப்படிச் செய்யவில்லை. இதைப் போலவே முந்தைய நிகழ்வின்போதும் துருக்கி நடந்துகொண்டிருந் திருக்கலாம். நடந்து முடிந்த விஷயங்களை இனி மாற்ற முடியாது.

அடிப்படையில், ரஷ்யாவும் துருக்கியும் வரலாற்று ரீதியாக நீண்ட பாரம்பரியங்களைக் கொண்ட நாடுகள். ரஷ்யாவைப் பொறுத்தவரை மேற்குலக நாடுகளுக்கும் முஸ்லிம் உலக நாடுகளுக்குமான பாலமாக துருக்கி விளங்குகிறது. எனவே, சர்வதேச அளவில் அவ்வப்போது நடக்கும் ஒரு சம்பவத்தை வைத்து இப்படியான முடிவுக்கு இரண்டு நாடுகளும் வருவது சரியல்ல.

இந்நிலையில், இந்தச் சூழலைச் சரிசெய்வதற்கு இரண்டு நாடுகளின் தலைவர்களும் முன்வர வேண்டும். துருக்கியுடன் வர்த்தகம் மற்றும் பொருளாதாரரீதியான உறவை மட்டுமல்லாமல் தனிப்பட்ட நல்லுறவை வளர்க்க கடினமாக உழைத்த ரஷ்ய அதிபர் புதினை, ரஷ்ய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் கடுமையாகப் பாதித்துவிட்டது. அதேபோல், ரஷ்யர்களின் உறவை இழப்பது என்பது துருக்கி மக்களுக்கும் வருத்தம் தரும் விஷயமாகவே இருக்கும். எனவே, நிலையைச் சரிசெய்வதற்கு துருக்கி அதிபர் எர்டோகனும், பிரதமர் அஹ்மத் டேவ்டாங்லுவும் இவ்விஷயம் தொடர்பாக மீண்டும் வருத்தம் தெரிவிக்கலாம். விஷயம் எல்லை மீறுவதற்கு முன்னர் நிலைமை சீராக வேண்டிய அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட வேண்டும்.

தமிழில் சுருக்கமாக: வெ. சந்திரமோகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x