Last Updated : 14 Apr, 2017 11:20 AM

 

Published : 14 Apr 2017 11:20 AM
Last Updated : 14 Apr 2017 11:20 AM

மாணவர்களின் தலைவர் அம்பேத்கர்

அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் சிறப்புக் கட்டுரை

அம்பேத்கரின் ஜெய் பீம் முழக்கம் இன்றைய மாணவர்களின் உரிமையை மீட்டெடுக்கும் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைகழகம், ஹைதரபாத் பல்கலைகழகம் என நாட்டின் பல்வேறு முதன்மை பல்கலைகழகங்களில் மாணவர்களின் மீது ஏவப்படும் அடக்குமுறைகளுக்கு மாணவர்களின் தரப்பில் ஒட்டுமொத்த குரலாக அம்பேத்கர் ஒலித்து கொண்டிருக்கிறார்.

அம்பேத்கர் என்ற தலைவரை இந்திய சமூகங்கள் பல நேரங்களில் புறக்கணித்த சமயங்களில் இன்று சமவுரிமையை பெறுவதற்காக மாணவர்கள் அம்பேத்கரை தங்களது தலைவனாக தன்னெழுச்சியாகவே ஏற்றுக் கொண்டுள்ளனர்.

அம்பேத்கரின் போராட்டங்கள் ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்காகவே ஆரம்ப காலத்தில் பார்க்கப்பட்டாலும் அம்பேத்கரின் போராட்டமும் அவரின் தத்துவமும் குறிப்பிட்ட சமூகத்தினருக்காக மட்டுமே அமையவில்லை என்பது மாணவர்கள் உணர்த்தும் வரலாற்று உண்மை.

அம்பேத்கார் அனைத்து மக்களின் சமவுரிமைக்காக போராடினார். அதற்கு அவர் கையில் எடுத்ததுதான் அனைவருக்குமான கல்வி. அம்பேத்கரின் இந்த போராட்ட அணுகுமுறைதான் மாணவர்கள் அம்பேத்கரை தங்களது போராட்ட தலைவராக ஏற்க வழி செய்துள்ளது.

அம்பேத்கர் இந்திய சமூகத்துக்கு தேவை

சென்னைப் பல்கலைக்கழக மாணவர் முகில் தங்கம்: நான் அம்பேத்கரை சமூகத்துக்கான தலைவராக பார்க்கிறேன். அம்பேத்கர் முன்வைத்த கொள்கைகள் அனைத்துமே இந்திய சமூகத்துக்கு தேவையான கொள்கைகள். அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் அவரது கொள்கைகள் கார்ல் மார்க்ஸிற்கு இணையானவராகவே அம்பேத்கர் என்னால் பார்க்கப்படுகிறார்.

சாதிய பிரச்சனைகள், மத பிரச்சினைகள், மறுக்கப்படும் சம உரிமை ஆகியவற்றுக்கான தீர்வு அம்பேத்கர் எழுத்துகளில் இருக்கிறது. ஆனால் அம்பேத்கரை ஒரு குறிப்பிட்ட சாதிய தலைவராக தொடர்ந்து இந்த சமூகம் நிலைநிறுத்துவது இந்தியாவின் சாதிய மன நிலையைத்தான் தொடர்ந்து பிரதிபலிக்கிறது. இன்றும் கூட அம்பேத்கர் பிறந்த நாள் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரால் மட்டுமே கொண்டாடப்படுகிறது.

இந்திய தலைவர்களான காந்தி, நேரு, நேதாஜி இன்னும் பல தலைவர்களுக்கு ஏற்றுக் கொள்ளும் முற்போக்குவாதிகள் அம்பேத்கரின் எழுத்துகளை படிக்ககவும் இல்லை, அம்பேத்கரை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயாராகவும் இல்லை என்பதே உண்மை.

மனித மாண்பை மீட்டெடுத்தல் இதுவே அம்பேத்கரின் அடிப்படையான கருத்து இந்த கருத்துதான் பல தடைகளை தாண்டி அம்பேத்கரை மாணவர்களிடத்தில் கொண்டு சேர்த்திருக்கிறது.

கல்வி சமவுரிமையே அம்பேத்கரின் முக்கிய பார்வை

சமூக ஆர்வலர், வழக்கறிஞர் மு. வெற்றிசெல்வன்: அம்பேத்கர் போராட்ட நோக்கங்கள் பலவாக இருந்தாலும் கல்வி சமவுரிமையே அவர் அடிப்படையாக தனது போராட்டங்களில் முன்வைத்தார். அதனை அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பு சட்டங்களிலும் காணலாம்.

மாணவர்கள் அம்பேத்கரை எளிதாக உள்வாங்கிக் கொள்ள இதுவே மூல காரணம் என்று நினைகிறேன்.

தமிழகத்தில் பெரியார் சுயமரியாதை இயங்கங்கள் தோன்றிய ஆரம்ப காலக்கட்டத்திலிருந்தே அம்பேத்கரின் அறிமுகம் தமிழகத்தில் பரவலாக கிடைத்து விட்டது. 90-களில் மண்டல் கமிஷன் போராட்டத்துக்கு பிறகு பிற்படுத்தப்பட்டவர்களும் அம்பேத்கரை தங்களுக்கான தலைவராக ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தனர். அதனைத் தொடர்ந்து மாணவர்களிடத்தில் அம்பேத்கரை பற்றிய வாசிப்பு அதிகரிக்க ஆரம்பித்தது. அம்பேத்கரின் கருத்துகள் புதிய கோணத்துடன் பார்க்கப்பட்டன. இப்போது உள்ள மாணவர்கள் அனைவரும் 90-களின் பிற்பகுதியில் பிறந்தவர்கள் என்பதால் அவர்களால் அம்பேத்கரின் கருத்துகளுடன் தங்களை எளிதாக தொடர்பு படுத்திக் கொள்கின்றன. இவ்வாறு அம்பேத்கர் மாணவரிகளிடத்தில் போராட்ட நாயகனாக உருவாகியிருக்கிறார்.

இந்து குணசேகர்- தொடர்புக்கு: indumathy.g@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x