Published : 22 Jun 2016 09:20 AM
Last Updated : 22 Jun 2016 09:20 AM

துறைகளில் நடந்தது என்ன?- சமூக நீதி: சாதனைகள்; சோதனைகள்

பாஜக என்றால் மேல்சாதியினருக்கு ஆதரவான கட்சி என்ற எண்ணம்தான் வரும். ஆனால், அதன் வரலாற்றில் முதன்முறையாக மோடி என்ற பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் பிரதமராகியது எதிர்பார்ப்பைத் தூண்டியது. தேர்தல் பிரச்சாரத்தின்போது மோடியும் “தலித் - பழங்குடிகளின் வாழ்க்கையை அடியோடு மாற்றி நல்ல நிலைக்குக் கொண்டுவருவோம்” என்று வாக்குறுதி அளித்தார். அவரது இரண்டாண்டுகள் எப்படி?

சாதனைகள்:

தலித் - பழங்குடி மக்கள் மேல் வன்கொடுமைகள் புரிபவர்களைத் தண்டிப்பதற்கென்றே வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உள்ளது. அதன் செயல்பாடு திருப்தியாக இல்லாததால் அதனை மேலும் பலப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை இருந்தது. அதை 2015-ல் மோடி அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது. மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கத்தின் கடைசி நாட்களில் இது அவசரச் சட்டமாக அறிவிக்கப்பட்டது. அதனை ஆரம்பத்தில் மோடி அரசு காலாவதியாக விட்டுவிட்டது. விமர்சனங்கள் எழுந்ததால் மீண்டும் கொண்டுவந்து அதை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிவிட்டது.

அம்பேத்கரின் 125-வது பிறந்த நாள் கொண்டாட்டம் நாடு முழுவதும் ஒரு வருட காலம் கொண்டாடப்பட்டுள்ளது. அம்பேத்கர் மறைந்த பிறகு, மத்திய அரசு அவருக்குச் செய்த மரியாதைகளில் வேறு எப்போதும் நடைபெறாத அளவுக்குச் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

தலித் மக்களிடமிருந்து உருவாகிற தொழில்முனை வோர்களுக்கு உதவும் வகையில் ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுவாக, தமிழகம் உள்ளிட்ட தென்னிந்தியாவில்தான் சில தொழிலதிபர்கள் தலித் மக்கள் மத்தியிலிருந்து உருவாகியுள்ளனர். இந்த நிலைகூட வடஇந்தியாவில் இல்லை. எனவே, சில ஆயிரம் தொழில்முனைவோர்களையாவது உருவாக்கலாம் என்ற முனைப்போடு இந்தத் திட்டம் உருவாகப்பட்டுள்ளது.

சோதனைகள்:

தலித்துகள் பெரும்பாலும் விவசாயக் கூலிகளாக வாழ்கின்றனர். அவர்களுக்கு நிலம் வழங்கி சொந்தக் காலில் நிற்கச்செய்தால்தான், மோடி வாக்களித்தபடி தலைகீழ் மாற்றங்களைக் கொண்டுவர முடியும். அந்த திசையில் மோடி இன்னும் எதுவும் செய்யவில்லை. தலித் - பழங்குடிகளின் பொருளாதார வளர்ச்சிக்கான சிறப்புக்கூறுத் திட்டத்தையும் பழங்குடிகள் துணைத் திட்டத்தையும் முறையாக அமலாக்க ஒரு சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. அதை மோடி அரசும் நிறைவேற்றவில்லை.

‘கையால் மலமள்ளுவோர் பிரச்சினையை ஒழிப்போம்’ என்று பேசியது பாஜக. அதுவும் செயல்பாட்டுக்கு வரவில்லை. கையால் மலமள்ளுவோரின் தேசிய அமைப்பு ‘சபை கரம்சாரி அந்தோலன்’. அது நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான எடுப்புக் கழிவறைகளை ஒழிக்கவேண்டும். கையால் மலமள்ளுவோருக்கு முழுமையான மறுவாழ்வு அளிக்கவேண்டும். கையால் மலம் அள்ளும்வகையில் ரயில்களில் உள்ள கழிவறைகளை ஒழிக்கவேண்டும் என்று கோரியுள்ளது. கையால் மலமள்ளுதல் தடை செய்யப்பட்ட 1993 ம் ஆண்டு முதலாக செப்டிக் டாங்குகளில் இறங்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவையும் மத்திய அரசு இதுவரை அமலாக்கவில்லை.

சென்னையின் ஐஐடி நிறுவனம் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் செயல்பட்ட அம்பேத்கர் மாணவர் அமைப்போடு பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி மோதல் போக்கை கடைப்பிடித்தது. மத்திய அரசும் அதற்கு துணைநின்றது. அதன் விளைவாக ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் ரோஹித் வெமுலா எனும் தலித் ஆய்வு மாணவர் இறந்தார். நாடு தழுவிய அளவிலான பல கல்வி நிறுவனங்களிலும் அம்பேத்கர் மாணவர் அமைப்புகள் அச்சுறுத்தப்பட்டுள்ளன.

பாஜக என்றால் மேல்சாதியினருக்கு ஆதரவான கட்சி என்ற எண்ணம்தான் வரும். ஆனால், அதன் வரலாற்றில் முதன்முறையாக மோடி என்ற பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் பிரதமராகியது எதிர்பார்ப்பைத் தூண்டியது. தேர்தல் பிரச்சாரத்தின்போது மோடியும் “தலித் - பழங்குடிகளின் வாழ்க்கையை அடியோடு மாற்றி நல்ல நிலைக்குக் கொண்டுவருவோம்” என்று வாக்குறுதி அளித்தார். அவரது இரண்டாண்டுகள் எப்படி?

எண் களம்: இரண்டாண்டில் ஏற்றுமதி : ஒப்பீடு




FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x