Published : 01 Jun 2016 09:43 AM
Last Updated : 01 Jun 2016 09:43 AM

சகஜமாகிப் போன நம் வன்முறை

கொடுங்கோன்மை என்ற விஷயத்தில் இந்தியாவைப் பொறுத்தவரை ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ஒரு போலீஸ்காரர் போதும், இந்தியாவின் எல்லாக் கொடுங்கோன்மைக்கும் உதாரணமாக. அவர்தான் உள்ளூர் தாதா, உள்ளூர் பிரதமர், நீதிபதி. நம் சமூகத்தில் ஆட்சி நிர்வாகம் என்ற விஷயம் தொடங்கும் இடமும் முடியும் இடமும் காவல் நிலையம்தான்.

சட்டமும் கொடுங்கோன்மையின் ஒருவித வடிவமே. அதற்கும் நீதிக்கும் உள்ள தொடர்பு மிகக் குறைவே. இந்தியாவின் ஒவ்வொரு மூலைமுடுக்கிலும் கொடுங்கோன்மைகளைப் பெற்றிருக்கும் நமக்குத் தனியாகச் சர்வாதிகாரிகள் வேண்டுமா? நடுத்தர வர்க்கத்தினருக்கு வேண்டுமானால், இந்தியா நம்பிக்கையை விதைக்கக் கூடிய ஜனநாயக நாடாக இருக்கலாம். இங்கே அவர்களின் கனவுகள் நனவாக வாய்ப்பு இருக்கலாம். ஆனால், பழங்குடியினரும் நாடோடிச் சமூகத்தினரும் தலித் மக்களும் சாதாரணப் பெண்களும் இந்தியாவைப் பல்வகையான சர்வாதிகாரத்தனங்களின் தொகுப்பாகவே புரிந்துகொள்வார்கள்.

வன்முறையின் புதிய உச்சம்

சட்டமும் சட்ட மீறல்களும் கைகோத்துக்கொண்டிருக்கும் நிலையில், அவர்கள் எதிர்கொண்டிருக்கும் கொடுங்கோன்மை யைவிட மிகவும் பீதியூட்டுவது எது தெரியுமா? வன்முறையின் தன்மையும், வன்முறை என்பது மிகவும் சகஜமான ஒன்றாக ஆனதும்தான். நக்ஸல்களின் கலகங்கள், மதக் கலவரங்கள், சாதி அட்டூழியங்கள் போன்றவற்றின்போது கும்பல்கள் சேர்ந்து நிகழ்த்தும் கூட்டு வன்முறைகளை எப்போதாவது நாம் பார்த்திருக்கிறோம், அவற்றைப் பற்றிப் படித்திருக்கிறோம். நான் இங்கே அவற்றைப் பற்றிப் பேசவில்லை. அதற்குப் பதிலாக, மூர்க்கமும் சித்திரவதையும் தினசரி விஷயமாக ஆகி, புதிய உச்சத்தை அடைந்திருக்கும், வன்முறையின் ‘சகஜத்தன்மை’ குறித்தே நான் பேச விரும்புகிறேன்.

குடிமக்கள் யார், தேசம் வழங்கும் உரிமைகள் யாருக்கெல்லாம் உண்டு என்றும், அப்படி இல்லாதவர்கள் யார் என்றும் போலீஸ் வரையறுத்து முத்திரை குத்தும் செயலிலிருந்தே வன்முறை ஆரம்பித்துவிடுகிறது. இந்த உலகத்தில் பழங்குடியினருக்கும் நாடோடிகளுக்கும் இடமே கிடையாது. சத்தீஸ்கர், பிஹாரின் சில பகுதிகள், காஷ்மீர், சிறப்பு ஆயுதப்படை சட்டத்தால் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும் மணிப்பூர் போன்றவற்றின் மக்கள் தங்களின் உரிமைகளைப் பேசமுடியுமா? நமது நடுத்தரவர்க்கத்து மக்கள்தான் உரிமைகளைப் பற்றியும், பசுமைத் தீர்ப்பாயங்கள், தேசிய மனித உரிமை ஆணையம், நீதிமன்றங்கள் போன்றவற்றை அணுகும் செல்வாக்கைப் பற்றியும் பீத்திக்கொள்ள முடியும்.

மேல்நாட்டுக் கோட்பாடுகளின் வியாக்கியானங் களையெல்லாம் தாண்டி, ஏதோ ஆழமான விரிசல் ஒன்று நமது ஜனநாயகத்தில் ஏற்பட்டிருக்கிறது. இதைத் தெளிவாகப் புரிய வைக்க சமீபத்திய சில சம்பவங்கள் போதும். கொடுங்கோன்மையைச் செயல்படுத்தும் நிர்வாக அலகுதான் காவல் நிலையம் என்பதை அவை புரியவைக்கும்.

மூர்க்கங்களின் கதை

சத்தீஸ்கரைச் சேர்ந்த கவாசி ஹித்மியின் கதை. 2008 ஜனவரியில் நடந்தது இது. தங்களது துண்டு நிலத்தில் உழைத்துப் பிழைக்கும் பழங்குடிப் பெண் அவர். பக்கத்து ஊர் சந்தைக்குப் சிலருடன் போயிருக்கிறார். ரிப்பன்களும் வளையல்களும் வாங்குவதற்காகச் சந்தையில் சுற்றித் திரிந்துவிட்டு, ஒரு குழாயடியில் தண்ணீர் குடிப்பதற்காக கவசி குனிந்தபோது அவளை ஒரு கை பிடித்து இழுத்திருக்கிறது. திரும்பிப் பார்த்தால் ஒரு போலீஸ்காரர். அவளைப் பிடித்து இழுத்துக்கொண்டு, சந்தைக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வேனுக்கு அவர் சென்றிருக்கிறார். அவளின் கைகால்களைக் கட்டி வேனுக்குள் போட்டு போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றார். அதற்கப்புறம் அந்தப் பெண், நாகரிகமாகச் சொல்வதென்றால், ‘காவலர்களின் மனைவி’யாக ஆனாள். ஒவ்வொரு காவல் நிலையமாக மாற்றி மாற்றி அவளைப் பாலியல்ரீதியில் துன்புறுத்தினார்கள். அவள் இறந்துவிடக் கூடும் என்று சில போலீஸ்காரர்கள் அஞ்சியதால், விஷயம் வெளியே தெரிந்துவிடாமல் தடுப்பதற்காக அந்தப் பெண்ணைக் கைதுசெய்தார்கள். அதற்குப் பிறகு சத்தீஸ்கர் பொதுமக்களுக்கான சிறப்புப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒரு பொய்க் குற்றச்சாட்டு அவள் மீது சுமத்தப்படுகிறது. மத்திய ரிசர்வ் படையினர் 23 பேர் கொல்லப்பட்ட குற்றம் தொடர்பாக வழக்கில் அந்தப் பெண் மீது குற்றம் சுமத்தினார்கள். மாஜிஸ்திரேட்டும் அவளை ஜக்தல்பூர் சிறையில் அடைத்தார்.

சிறையிலும் அவள் கொடூரமான சித்திரவதைகளுக்கும் பாலியல் வன்முறைக்கும் உள்ளானதால், அவளுக்குக் கருப்பை இறக்கம் ஏற்பட்டது (இருக்கும் இடத்தை விட்டுக் கருப்பை கீழே இறங்குதல்). வலி தாங்க முடியாமல் தானே கருப்பை அகற்றம் செய்துகொள்ளலாம் என்று சக சிறைவாசியிடம் பிளேடு கேட்டிருக்கிறாள். அதனால் ரத்தப்போக்கும், அந்தப் பெண்ணின் அலறலும் மேலும் அதிகமாக.. மற்ற கைதிகள் சிறை அதிகாரிக்குத் தகவல் கொடுத்திருக்கின்றனர். அந்த அதிகாரி அவளைப் பொதுமருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார். அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு, அந்தப் பெண் மறுபடியும் சிறைக்கு அனுப்பப்பட்டிருக்கிறார். ஆதிவாசி ஆசிரியரான சோனி சோரியும் அந்தச் சமயத்தில் சிறையில் இருந்திருக்கிறார். அவர்தான் ஹித்மியின் ரட்சகராக மாறியிருக்கிறார். சோரியும் காவல் கொட்டடியில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டவர்தான். அவருடைய விடுதலைக்குப் பிறகு, மனித உரிமைச் செயல்பாட்டாளர்களிடம் ஹித்மியின் நிலையைப் பற்றி சோரி தெரிவித்திருக்கிறார். அவர்களும் அவளுக்கு வேண்டிய சட்ட உதவியைச் செய்தார்கள். ஒருவழியாக, 2015 மார்ச் பிற்பகுதியில், ஹித்மி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று சொல்லி நீதிமன்றம் அவளை விடுதலை செய்தது.

இதுபோன்ற சம்பவங்கள் இலக்கிய விமர்சகர் கணேஷ் என். தேவியால் வெளியுலகத்துக்குச் சொல்லப்பட்டிருக்கின்றன. குஜராத்தில் போலீஸின் எளிய இலக்குகளாகப் பழங்குடியினர் ஆளாவது பற்றியும்; போலீஸ்காரர்கள் தங்கள் இஷ்டத்துக்குப் பழங்குடியினரைக் கைதுசெய்து, தங்கள் இஷ்டத்துக்கு விடுவிப்பது குறித்தும் பல உண்மைச் சம்பவங்களை அவர் நமக்குச் சொல்கிறார்.

எழுத்தாளரும் செயல்பாட்டாளருமான மாகாஸ்வேதா தேவி பிஹாரிலும் மேற்கு வங்கத்திலும் நடைபெறும் வன்முறைகளைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறார். இவற்றில் பெரும்பாலானவை பழங்குடிகள் மீது நடத்தப்படும் வன்முறைகள். கபடவேடம் போடும் சமூகம் நம்முடையது. பழங்குடியினரையும் பூர்வகுடி மக்களையும் மேலைநாட்டினர் அழித்தொழித்தது பற்றி நம் அறிஞர்களும் அறிவுஜீவிகளும் விலாவாரியாகப் பேசுவார்கள். ஆனால், நம் மக்கள் மீது அதுபோன்ற வன்முறையை நாமே நிகழ்த்துவது குறித்து வாய் திறக்க மாட்டார்கள். சட்டத்தின் பார்வைக்கே இது போன்ற வன்முறைகள் பெரும்பாலும் வருவதில்லை என்பது வருந்தத் தக்க விஷயம்.

இயல்பானதா நம் சமூகம்?

இன்னொரு உதாரணம். கேரளத்தில் பெரும்பாவூரில் ஏப்ரல் 28 அன்று ஜிஷா என்ற தலித் பெண், சட்ட மாணவி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். அவர் மீது மிகக் கொடூரமான வன்முறை நிகழ்த்தப்பட்டிருப்பதாக அவரது பிரேதப் பரிசோதனை தெரிவிக்கிறது. அதைவிட மோசம், காவல் துறையின் அலட்சியப் போக்குதான். 2012-ல் புதுடெல்லியில் மாணவி ஒருவர் மீது மிகவும் கொடூரமாக நிகழ்த்தப்பட்ட கூட்டுப் பாலியல் வன்முறையோடு ஜிஷா விவகாரமும் ஒப்பிடப்படுகிறது.

இத்தகைய வன்முறைகளைப் புரிந்துகொள்வதில் சட்டத்துக்கு இருக்கும் எல்லையைப் பற்றி ஒரு வகையில் நம்மால் உணர முடிகிறது. இன்னொரு வகையிலோ, இதுபோன்ற கொடூரங்களை இந்தச் சமூகம் பார்க்கத் தவறுவது எதனால் என்று நாம் கேள்வி கேட்கிறோம். மேலும், இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் மிகவும் அதிகரித்துக்கொண்டிருப்பதால், இதெல்லாம் வழக்கத்துக்கு விரோதமானது என்று சொல்லி நிராகரித்துவிடுகிறோம். இதையெல்லாம் இயல்பானது என்று கருதவோ இவற்றை அலட்சியப்படுத்தவோ சமூகம் செய்யுமானால், நம் சமூகமே இயல்பானதுதானா என்று ஆச்சர்யம் நமக்கு ஏற்படுகிறது.

உரிமைகளுக்கும் ஜனநாயகத்துக்கும் அப்பால் செல்லும் கேள்வி இது. சமூகம் என்பது எதுவோ அதை உருவாக்கக்கூடிய அடிப்படைகளை நோக்கி ஆழமாகச் செல்லும் கேள்வி இது. இதுபோன்ற நிகழ்வுகள் பற்றி ஊடகங்கள் செய்தி வெளியிடும்போது குமட்டிக்கொண்டுவருகிறது, மனதோ திமிறிக்கொண்டு எழுகிறது. எனினும், ஊடகங்கள் இதுகுறித்து அடுத்தடுத்து அக்கறை காட்டுவதில்லை என்பதையும் உணர முடிகிறது. சமூகத்தின் நினைவில் இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து குவிந்துகொண்டே வருவதால், இவற்றை மக்களால் ஜீரணிக்க முடியாமல் போவது போல்தான் தெரிகிறது. இது போன்ற சம்பவங்களை உள்வாங்கும்போது நாம் இவற்றை நிராகரிப்பதும், அலட்சியம் செய்வதும் ஒருங்கே நிகழ்கிறது. ஒரு பேராசிரியராக இது போன்ற சம்பவங்களை வகுப்பறையில் விவாதித்தபோதெல்லாம் பல முறை எனது மாணவர்கள் அழுதது என் நினைவுக்கு வருகிறது. சமூகமோ பாராமுகம் காட்டுகிறது.

மேற்கின் பாடங்கள்

ஒரு தேசமாக, இந்தியா மிகவும் வன்முறையானது. எனினும் இது போன்ற சம்பவங்களை அது அலசிப்பார்க்க விரும்பவில்லை. ரனை ஜரார்டு, ஹனா ஆரென்ட் போன்ற மேலைநாட்டு அறிஞர்களெல்லாம் வன்முறையின் வேர் நோக்கிச் சென்று, நம் வாழ்க்கையில் சகஜமான ஒன்றாக வன்முறை எப்படி ஆகியிருக்கிறது என்பதைப் பார்த்திருக்கிறார்கள். அவர்களுடையது போன்ற சிந்தனைகள் நம்மிடையே வேண்டும். சமூக அறிவியலிலும், நமது தார்மிகக் கண்ணோட்டத்திலும் பல திறப்புகளை அந்த சிந்தனைகள் செய்ய வேண்டும். வன்முறையைப் பற்றி விளக்குவதாக, இந்தியச் சமூகத்தில் சட்டத்தின் எல்லைகளை விளக்குவதாக அவை இருக்க வேண்டும். இதுபோன்ற அறம் சார்ந்த, தத்துவார்த்த சிந்தனைத் திறன் இல்லையென்றால் எந்த ஜனநாயகமும் நீடிக்க முடியாது.

- ஷிவ் விஸ்வநாதன், ஜிண்டால் சட்டக் கல்லூரியின் பேராசிரியர்.
தி இந்து ஆங்கிலம் - சுருக்கமாகத் தமிழில்: தம்பி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x