Published : 09 Mar 2018 10:23 AM
Last Updated : 09 Mar 2018 10:23 AM

ஜனநாயகத்தை ஆபத்துக்குள்ளாக்கும் சிலைத் தகர்ப்புகள்!

ரேயொரு நிமிடம் பரபரப்பு, அடுத்த விநாடி லெனினின் சிலை மண்ணில் சாய்ந்தது; திரிபுராவின் பெலோனியாவில் அவரது சிலை மண்ணில் விழுந்தபோது காவி உடை அணிந்திருந்தவர்கள் 'பாரத் மாதா கீ ஜெய்' என்று கோஷமிட்டனர். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடமிருந்தும் உள்நாட்டுத் தளைகளில் இருந்தும் பாரதம் விடுபட வேண்டும் என்று வாழ்த்தியவர் லெனின் என்பதை அவர்கள் முக்கியம் என்று கருதவில்லை; சமத்துவம் நிரம்பிய பாரதம் ஏற்படப் பல தலைமுறை இந்தியர்களுக்கு ஆதர்சமாக அவர் திகழ்ந்ததையும் பொருட்படுத்தவில்லை. 25 ஆண்டுகள் செவ்வாட்சிக்குப் பிறகு இடதுசாரி முன்னணி அகற்றப்பட்டது; அந்த அரசுக்கு ஆதர்சமாகத் திகழ்ந்தவர் அவர் என்பதே அவருடைய சிலையைத் தகர்க்க அவர் களுக்குப் போதுமானதாக இருந்தது.

திரிபுராவிலேயே இன்னொரு இடத்தில் சிறிது நேரத்துக்கெல்லாம் இன்னொரு லெனின் சிலை பீடத்திலிருந்து தகர்க்கப்பட்டது. சிலையிலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட தலை, கால்பந்துபோல உதைக்கப்பட்டது. இந்திய ஜனநாயகத்துக்கு என்ன நேர்ந்தது என்ற கேள்விகள் எல்லோர் மனங்களிலும் எழுந்தன.

‘ஓங்கித் தள்ளு' இயக்கம்

வெறுப்பு, பகை, வன்முறை ஆகியவற்றை ஊட்டி வளர்க்கப்பட்ட இயக்கத்தின் முந்தைய செயல்கள் அப்படியே திரைப்படம் போலக் காலவரிசைப்படி கண்களில் விரிகின்றன. 1992 டிசம்பர் 6, அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு, 2002 மார்ச் 1, அகமதாபாத் காவல் துறை ஆணையர் அலுவலகத்துக்கு வெளியே இருந்த வாலி தக்கானி சமாதி இடிப்பு, அதற்குப் பிறகு தொடர்ந்து ஆறு நாட்களுக்கு குஜராத்தில் சிறுபான்மைச் சமூகத்தவரின் 272 வழிபாட்டிடங்கள் தகர்ப்பு, 2014 கிறிஸ்துமஸுக்கு முன்னால் டெல்லியின் தில்ஷத் பாக் பகுதியில் புனித செபாஸ்டியன் தேவாலயம் சேதம் ஆகிய சம்ப வங்கள் நினைவுக்குவருகின்றன.

‘ஒரே தள்ளு - பலமாக' (ஏக் தக்கா - ஜோர்சே) என்ற அறைகூவல் அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பின் போது எதிரொலித்தது. அப்படி நடந்த எல்லா சம்பவங் களையும் ‘ஓங்கித் தள்ளு இயக்கம்’ என்று வகைப்படுத்தலாம்.

எதிர்விளைவுகள்

சங்கப் பரிவாரங்களின் இச்செயலுக்கு நாடு முழுக்கக் கண்டனக் குரல்கள் எழுந்தன; அதிர்ச்சியும் கோபமும் ஒருங்கே தெரிவிக்கப்பட்டன. இடித்தவர்களும் பின்னணியில் இருந்தவர்களும் வன்மையாகக் கண்டிக்கப்பட்டனர். ‘லெனின் இன்று - பெரியார் நாளை’ என்று உடனே பதிவிட்ட பாஜக தேசியச் செயலாளர் அதை மின்னல் வேகத்தில் அழித்துவிடும் அளவுக்குத் தமிழ்நாட்டில் பலத்த எதிர்ப்புகளும் கண்டனங்களும் எழுந்தன. பெரியாரின் சிலைகள் புல்டோசர்களையே வளைத்து எறியும் அளவுக்கு வல்லமை கொண்டவை.

உலகக் கருத்துகளுக்கு மதிப்புக் கொடுப்பவரான பிரதமர், திரிபுராவில் நடந்த சம்பவம் ஏற்றுக்கொள்ள முடியாதது என்ற தனது அதிருப்தியை மத்திய உள்துறை அமைச்சகத்துக்குத் தெரிவித்தார். அதுவும் உடனடியாக! இதற்காக அவரைப் பாராட்ட வேண்டும். இப்படிப்பட்ட சம்பவங்களைக் கண்டித்திருக்கும் திரிபுரா புதிய முதல்வரும் பாராட்டுக்குரியவர். பிரதமரின் கண்டிப்புக்குப் பிறகு, சிலை தகர்ப்பில் ஆர்வம் காட்டியவர்களும் நிதானத்துக்கு வந்திருப்பார்கள் என்று நம்பலாம்.

ஆனால் கண்டனம் போதுமானதா?

சில கேள்விகளுக்கு விடை தேவை: தாங்கள் நினைத்தால் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற ஆணவம் பாஜக ஆதரவாளர்களுக்கு ஏன் வருகிறது? எதைச் செய்தாலும் நம்மை யாரும் ஒன்றும் செய்ய மாட்டார்கள் என்ற துணிச்சல் எப்படி ஏற்படு கிறது? அப்படியே அரசு வழக்கு தொடுத்தாலும், 'செய்ய நினைத்த வேலையைச் செய்துமுடித்து விட்டோம்' என்று அவர்களுக்கு ஏற்படும் திருப்திதான் இவற்றுக்கெல்லாம் காரணமா?

பசு குண்டர்களின் செயலைப் பிரதமர் கடந்த ஆண்டு கண்டித்தார் (அந்தக் கண்டனத்தையும் உடனடியாகத் தெரிவிக்கவில்லை). ஆனால், மாடுகளை ஓட்டிச் செல்கிறவர்களைப் பசு குண்டர்கள் தாக்குவது நின்றுவிட்டதா? அச்சமின்றிக் கால்நடைகளைக் கொண்டுசென்று விற்க முடிகிறதா? இந்தக் கேள்வி களுக்கான பதில்கள் நமக்கே தெரியும். ஏன்? ஒரே தள்ளில் செய்துமுடிக்கும் கலாச்சாரம் பரவிவிட்டது; சிலை தகர்ப்புக்கு வலுவான முறையில் உள்துறை அமைச்சகத்துக்குத் தனது கண்டனங்களைத் தெரிவித்த பிரதமர், அதே போன்றதொரு கண்டனத்தை எல்லாவற்றுக்கும் மீண்டும் ஒருமுறை வலுவாகத் தெரிவித்தால்தான் இத்தகைய போக்கு ஓயும். ஒரு சர்வதேசத் தலைவரின் சிலை தகர்க்கப்பட்டது என்பதற்காக அல்ல; ஜனநாயகத்துக்கு விரோதமான ஆக்ரோஷமும், முரட்டுத்தனமும் தொடர்ந்து வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது என்பதற்காகத்தான் பிரதமர் அதைக் கண்டிக்கக் கோருகிறோம்.

மிரட்டிப் பணிய வைக்கிறவர்கள் ஜனநாயகவாதி களல்ல. ஜனநாயகம் என்பது அச்சுறுத்துவது அல்ல; ஜனநாயகத்தையே அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கு வதும், அச்சுறுத்துகிறவர்களுக்கு வாக்குரிமை அளிப்பதும் தடுக்கப்பட வேண்டும்.

காந்தி என்னை மன்னிக்க வேண்டும்

நம்முடைய அரசியல் சட்டப்படி - தேர்தல் பிரச்சாரத்திலும் தேர்தலிலும் அச்சுறுத்தும் குண்டர்கள் பங்கேற்கத் தடை ஏதும் இல்லை; ஏன்? "கடவுள் என்பது விவரிக்க முடியாத புதிரான சக்தி; உணரலாம், ஆனால் ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடியாது" என்று கடவுளைப் பற்றி காந்தி விவரித்ததுதான் இந்த அச்சுறுத்தல்காரர் களுக்கும் பொருந்துகிறது - இதற்காக காந்தி என்னை மன்னிக்க வேண்டும்! 'ஓங்கித் தள்ளும் (சிலை தகர்ப்பு) இயக்கம்' ஜனநாயகத்தின் மேற்பார்வையில், அரசுகளின் தலைக்கும் மேலே நடந்திருக்கிறது; இது நடந் தது என்பது தவறு, நடக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறது,

நடப்பதற்குச் சூழல்கள் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளன. 'மேலிடத்து உடந்தையில்லாமல், விதிமீறல்கள் நடக்காது!’ இதைப் போன்ற விதிமீறல்களும் இருந்த தில்லை. இந்தக் கலாச்சாரத்தை அரசு நிர்வாகத்தின் சட்டம்-ஒழுங்கு இயந்திரத்திடம் மட்டும் விட்டுவிட முடியாது.

பெரியார் சிலை மீதான தாக்குதலும் அவமதிப்புகளும் மேற்கொள்ளப்பட்டால் பதிலடிகளும் தொடர்ச்சி யாக இடம்பெறக்கூடும்; கொல்கத்தா நகரில் சியாம பிரசாத் முகர்ஜியின் சிலையின் முகம் கரிபூசப்பட்டது. இது பெரும் வெடிப்பை ஏற்படுத்தும் செயல், இதை அரசியல் தலைமையால்தான் தணிக்க முடியும்.

அரசியல் தலைமையின் கடமை

வெறும் சட்டம்-ஒழுங்குப் பிரச்சினையாக அணுகுவது பதிலாக இருக்க முடியாது. இச்சம்பவங்கள் நம்முடைய ஜனநாயக இழைகளையே அறுத்துவிடக்கூடிய ஆபத்து மிகுந்தவை. திரிபுராவில் நடந்த அவமானகரமான செயல் வேறு எங்கும் நடந்துவிடாமல் தடுக்க அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட வேண்டும்.

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் அறிக்கை அச்சமின்றியும் வெளிப்படையாகவும் இருக்கிறது. “கார்ல் மார்க்ஸும் லெனினும் எனக்குத் தலைவர்கள் அல்லர்; ரஷ்யர்களுக்கு முக்கியமானவர்கள். வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு தலைவர்கள் முக்கியமானவர்கள். இந்த உலகம் பல்வேறு நாடுகளால் ஆனது. ஒரு மாநிலத்தில் நீங்கள் ஆட்சிக்கு வந்துவிட்டீர்கள் என்பதற்காக மார்க்ஸ், லெனின் போன்ற தலைவர்களின் சிலைகளைத் தரைமட்டமாக்கும் உரிமை உங்களுக்கு வந்துவிடவில்லை" என்று மம்தா கூறியிருக்கிறார்.

மிக உறுதியான வார்த்தைகள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் திரிணமூல் காங்கிரஸும் பழைய வன்முறைச் சம்பவங்களை நினைவுபடுத்திக்கொள்ளலாம். அந்தச் செயல்களுக்குக் காரணம் நாங்கள் அல்ல – அவர்கள்தான் என்று இருவருமே பரஸ்பரம் குற்றஞ்சாட்டிக்கொண்டவர்கள். அவர்களும் அனைத்துக் கட்சி யினரும் ஜனநாயகத்துக்கு ஏற்பட்டுள்ள புதிய அபாயத்தை உணர வேண்டும்; ஜனநாயகத்தில் இந்தியாவுக்குள்ள நம்பிக்கையைப் பறைசாற்ற வேண்டும், சிலைத் தகர்ப்பு அரசியலைத் தகர்க்க வேண்டும்!

- கோபாலகிருஷ்ண காந்தி, முன்னாள் ஆளுநர்.

சுருக்கமாகத் தமிழில்: சாரி,

© தி இந்து ஆங்கிலம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x