Published : 14 Nov 2018 09:17 AM
Last Updated : 14 Nov 2018 09:17 AM
வணக்கம். எல்லாரும் தீபா வளி நல்லபடியாக கொண் டாடி யிருப்பீங்க. இதில் பல பேர் ‘சர்கார்’ படம் பார்த்திருப்பீங்க. மிஸ் பண்ணவங்க ‘சர்கார்’ சர்ச்சைகளை டி.வி-யில் பார்த் திருப்பீங்க. அந்த சர்ச்சை முடிந்து புயல் வரைக்கும் வந்துட்டோம். அமெரிக்காவில் இருந்து வர்ற ஒருத்தரோட கதையாக ‘சர்கார்’ படம் இருந்த தால், இந்த நேரத் தில் அது தொடர்பாக எனக்கும் ஒரு நிகழ்வு நினைவுக்கு வருது.
இதுவரை இரண்டு முறை நிகழ்ச்சிகளுக்காக அமெரிக்கா போய்ட்டு வந்திருக்கிறேன். அப் படி போனபோது நண்பர் ஒருவர் கொடுத்த டின்னர் விருந்தில் ஒரு மருத்துவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவருக்கு 60 வயது இருக்கும். நம்ம ஊர் மாதிரி திரும்பின தெருக்களில் எல்லாம் அமெரிக்காவில் கிளினிக் வைத்து, கல்லா கட்ட முடியாது. அதற்கென நிறைய விதிமுறைகள் உள்ளன.
எல்லா வசதி, வாய்ப்புகள் இருந்தாலும் அங்கே ஒருவர் மருத்துவர் ஆகிறார் என்றால், அவர் பெரும் புத்திசாலித்தனம் மிக்கவராகவும், அனுபவம் கொண்டவராகவும் இருக்க வேண்டும். நான் யதேச்சையாக சந்தித்த அந்த மருத்துவர் நியூயார்க் நகரில் உள்ள சிறந்த மருத்துவர்களில் ஒருவராவார்.
நான் இந்தியாவில் இருந்து வந்திருக்கும் ஒரு ஆர்ஜே மற்றும் நடிகர். இரண்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்திருக்கிறேன் என்று நண்பரால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டதால், அந்த மருத்துவர் என்னிடம் இயல்பாக பேசினார்.
நியூயார்க் நகரில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவப் பணியாற்றிவரும் அந்த மனிதர், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு, ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள ஒரு நாட்டில் வசித்த அமைச்சர் ஒருவருக்கு மருத்துவம் பார்க்க சென்றிருக்கிறார். அந்த அமைச்சர் அங்கே பெரும் செல்வந்தர். அவர் திடீரென ஒரு நோயால் பாதிக்கப்பட்டதால் இந்த புகழ்
பெற்ற மருத்துவரை அமெரிக்காவில் இருந்து தனி விமானம் மூலம் அங்கே மருத்துவ சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
நாட்டில் உள்ள மக்கள்தான் வறுமையில் இருப்பார்கள். அமைச்சர்கள்தான் செல்வந்தர்களாக இருப்பார்கள் என்பது நமக்குத் தெரிந்த விஷயம்தானே. அந்த மாதிரிதான் பெரும் பதவியில் இருக்கும் அந்த ஆப்பிரிக்க நாட்டு அமைச்சருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது.
தொடர் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதால் அமெரிக்காவில் இருந்து இந்த மருத்துவர் நான்கு முறை ஆப்பிரிக்காவுக்குச் சென்று திரும்பியிருக்கிறார். இனிமேல் அந்த அமைச்சர் குண மாகிவிடுவார் என்று தெரிந்த ஐந்தாவது முறை, அவருக்கு சிகிச்சை அளித்துவிட்டு அந்த நாட்டை சுற்றிப் பார்ப்போம் என திட்டமிட்டு ஒரு பயணத்தை மேற்கொண்டிருக்கிறார். அமைச்சருக்கு வந்த அந்த நோய் அந்த நாட்டில் பொதுமக்கள் பலருக்கும் வந்திருப்பது அப்போதுதான் மருத்துவருக்குத் தெரிய வந்துள்ளது. அவர்களுக்கு போதுமான பொருளாதார வசதி, வாய்ப்பு இல்லாததால் அந்த நோய்க்கான உரிய மருத்துவம் பார்க்காமல் இருப்பதும் தெரிய வந்துள்ளது. மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளான அந்த மருத்துவர், அமெரிக்காவில் படித்துவரும் தனது டீன் ஏஜ் மகன்கள் இருவரை விட்டு விட்டு மனைவியை மட்டும் அழைத் துக்கொண்டு ஆப்பிரிக்காவுக்கே பறந்துவிட்டார். அங்கே 5 ஆண்டு காலம் தங்கியிருந்து பொதுமக் களுக்கு இலவச மருத்துவ சேவைகளை வழங்கியிருக்கிறார்.
அவருக்கு கிடைத்த ஒரு விடுமுறை நேரத்தில் அமெரிக்கா வந்திருந்த அவரைத்தான் நான்
அப்போது சந்தித்தேன். இப்படி ஒரு மனிதரை சந்தித்ததையும், அவரிடம் பேசிக்கொண்டிருப்பதை யும் நினைத்த அந்தக் கணம் என் உடல் சிலிர்த்தது. மதிப்பு மிக்க விஷயங்களைக் கேட்கும் போதும், அதுபோன்ற மனிதர் களை சந்திக்கும் போதும், அதற்கு மொழி புரியணும்னு இல்லை.
அதன் வலியை நாமும் உணர வேண்டும்னு இல்லை. அதையெல்லாம் கடந்து ஒரு உணர்வு பாயும். அந்த மாதிரிதான் எனக்கும் இருந்தது.
சீரும் சிறப்போடும் அமெரிக்காவில் வாழும் ஒரு மருத்துவர், தனி விமானம் மூலம் சிகிச்சைக்கு அழைக்கப்படும் ஒரு மனிதர், இப்படி ஓரிடத்துக்குப் போய் மக்களின் நிலையை உணர்ந்து தன் கஷ்டத்தை பார்க்காமல் மருத்துவம் செய்கிறார் என்றால் அவர்தான் ரியல் ஹீரோ.
இந்த மருத்துவர் மாதிரி, இதற்கு முன் இந்தத் தொடர் வழியே நான் குறிப்பிட்ட பள்ளி மாண வன் உள்ளிட்ட சிலரைப் பற்றி சமீபத்தில் பேட்டிக்காக செய்திச் சேனல்களில் கேட்டனர். இந்தத் தொடரின் முதல் வாரத்தில் சொன்னதைத்தான் இப்போதும் சொல்கிறேன். இங்கே பதிவு செய்வது எதுவுமே தனிப்பட்ட ஒரு மனிதர் சார்ந்த விஷயம் அல்ல. அந்த மனிதரோட நல்ல பண்புதான் இந்தத் தொடர். நாம் எல்லோருமே அந்த மாதிரி மனிதர்கள்தான். அந்த பண்பு நம் ஒவ்வொருவரது உடம்பிலும் மனதிலும் எங்கேயோ இருக்கிறது. அதை வெளியே கொண்டு வர வேண்டும். அவ்வளவுதான்.
உங்களைப் பார்த்து ‘நீங்கள் சச்சின் மாதிரி கிரிக்கெட் விளை யாடுவீங்க, ஹரிஹரன் மாதிரி பாடு வீங்க, ஏ.ஆர்.ரஹ்மான் மாதிரி இசையமைப்பீர்கள்’ என்று நான் சொன்னால், உடனே சிரிச்சிடு வீங்க. அதுவே... பசி, கஷ்டத்தை தீர்க்கும் மனிதர்களின் பண் பையும், ஏதாவது ஒரு விதத்தில் அடுத் தவர்களுக்கு உதவியாக இருக்கலாம் என்பதை நம்மாலும் பிரதிபலிக்க முடியும்னு சொன்னா ஒப்புக்கொள்வீங்க.
இத்தொடரில் வரும் மனி தர்கள் அனைவரும் நம்முள் இருக்கும் மனிதத்தின் இன்னொரு பிரதிபலிப்பே. ஆகவே இம்மாதிரி மனிதர்களை வெளியே தேட வேண் டாம். நமக்குள்தான் இருக்கிறார் கள் என்பதால் இவர்கள் யார் என்று ‘காட் ப்ராமிஸாக' நான் சொல்ல மாட்டேன்.
- நிமிடங்கள் ஓடும்...
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT