Last Updated : 29 Feb, 2024 06:13 AM

2  

Published : 29 Feb 2024 06:13 AM
Last Updated : 29 Feb 2024 06:13 AM

மக்களவை மகா யுத்தம்: பாஜக தொடுக்கும் உளவியல் தாக்குதல்

“வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையைத் தாண்டி, கிடைக்கும் வாய்ப்புகளைத் தவறவிடாமல் பார்த்துக்கொள்வதிலும் பாஜக அக்கறை காட்டுகிறது. குறிப்பாக,நிதீஷ் குமாரை மீண்டும் கூட்டணிக்குள் கொண்டுவந்ததன் மூலம் பாஜகவுக்கு உடனடிப் பலன் ஏதும்இல்லை.

ஆனால், இண்டியா கூட்டணிக்கு இதன்மூலம் உளவியல்ரீதியில் நெருக்கடியை உருவாக்கியிருக்கிறது பாஜக” என்கிறார் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர். இண்டியா கூட்டணிக்குஉற்சாகமளிக்கும் விஷயங்கள் நடக்கத் தொடங்கியிருந்தாலும், அந்தத் தற்காலிக சந்தோஷங்களையும் தவிடுபொடியாக்குவதில் தீவிரம் காட்டுகிறது பாஜக.

கட்சி மாறும் வாக்குகள்: உத்தரப் பிரதேசத்தில் பாஜக நிச்சயம் ஏழு மாநிலங்களவை உறுப்பினர்களைப் பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சமாஜ்வாதியின் ஏழு எம்எல்ஏ-க்களின் உதவியுடன், எட்டாவது மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும் அக்கட்சி வென்றெடுத்திருக்கிறது.

ராமர் கோயில் திறப்பு விழாவைப் புறக்கணித்த சமாஜ்வாதி கட்சித் தலைமை, பிற கட்சி உறுப்பினர்கள் குழுவாக அக்கோயிலுக்குச் சென்றபோதும் அதில் பங்கேற்காமல் தவிர்த்தது. இது தங்களுக்கு உவப்பளிக்கவில்லை என்று அதிருப்தி எம்எல்ஏ-க்கள் கூறியிருக்கிறார்கள். அவர்களில் ஒருவரான, மனோஜ் பாண்டே, சமாஜ்வாதி கட்சியின் தலைமைக் கொறடாவாக இருந்தவர்.

தேர்தலுக்கு முன்னதாகத் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்ட மனோஜ் பாண்டே, பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்த நிலையில், விரைவில் அக்கட்சியில் ஐக்கியமாகிவிடுவார் எனப் பேசப்படுகிறது. இப்படி ராமர் கோயில் திறப்புவிழாவை இந்துக்களைக் கவர்வதற்காக மட்டுமல்லாமல், எதிர்க்கட்சி உறுப்பினர்களை ஈர்ப்பதற்கான தூண்டிலாகவும் பாஜக பயன்படுத்துகிறது.

பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி ரித்தேஷ் பாண்டே சமீபத்தில் பாஜகவில் ஐக்கியமாகியிருக்கிறார். சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏ ராகேஷ் பாண்டேயின் மகன்தான் ரித்தேஷ் பாண்டே. அம்பேத்கர் நகர் மக்களவைத் தொகுதி எம்.பி.யாக (2009-14) இருந்தவர் ராகேஷ். இந்த முறை அத்தொகுதியை வேறொருவருக்கு வழங்க அகிலேஷ் முடிவெடுத்த நிலையில் தந்தையும் மகனும் அதிருப்தியில் இருந்திருக்கிறார்கள்.

இந்த நிலையில், மகனை பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து தூக்கியிருக்கிறது பாஜக. தந்தையின் கோபம் மாநிலங்களவைத் தேர்தலில் எதிரொலித்திருக்கிறது. கட்சி மாறி வாக்களித்துவிடக் கூடாது என வலியுறுத்தி அகிலேஷ் ஏற்பாடு செய்த விருந்தில் கலந்துகொள்ளாமல் தவிர்த்தவர்களில் ராகேஷ் பாண்டேயும் ஒருவர். எதிர்பார்த்ததுபோல் அவரும் அகிலேஷுக்குத் துரோகம் இழைத்துவிட்டார்.

இதன் மூலம் காங்கிரஸுக்கு உளவியல்ரீதியாக இன்னொரு அழுத்தத்தையும் பாஜக தருகிறது. ஆம், மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்த ஆர்ஜேடி எம்எல்ஏ-க்களில் மூவர் சோனியா காந்தி குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமான ரேபரேலி, அமேதி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.

ரேபரேலி மாவட்டத்தின் ஊஞ்சாஹார் தொகுதி உறுப்பினர்தான் மனோஜ் பாண்டே. காங்கிரஸுடனான தொகுதிப் பங்கீட்டை சமாஜ்வாதி கட்சி, ஒருவழியாக இறுதிசெய்திருக்கும் நிலையில் இது இண்டியா கூட்டணிக்கே அதிர்ச்சியளிக்கும் விஷயம்தான்.

இமாச்சலப் பிரதேசத்தில் ஆளுங்கட்சியாக இருக்கும் காங்கிரஸால், மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வியை மாநிலங்களவைத் தேர்தலில் வெற்றிபெற வைக்க முடியவில்லை.

காரணம், 3 சுயேச்சை உறுப்பினர்களுடன் சேர்ந்துகொண்டு 6 காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்ததுதான். இத்தனைக்கும் அவர்களில் 3 காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் அன்று காலையில்தான் அவருடன் அமர்ந்து உணவருந்தியிருக்கிறார்கள்.

தொடர் விமர்சனங்கள்: காங்கிரஸ் - ஆம் ஆத்மி கட்சி கூட்டணியைக் கடுமையாக விமர்சிக்கும் பாஜக, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு எதிராக அர்விந்த் கேஜ்ரிவால் முன்வைத்த ஊழல் புகார்களைச் சுட்டிக்காட்டுவதுடன், ராஜீவ் காந்திக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதைத் திரும்பப் பெற வேண்டும் என்று கேஜ்ரிவால் சொன்னதையும் மறக்காமல் நினைவூட்டுகிறது.

சோனியா காந்தியின் நம்பிக்கைக்குரியவராகத் திகழ்ந்த அகமது படேலின் பரூச் தொகுதியை (குஜராத்) இந்த முறை ஆம் ஆத்மி கட்சிக்குக் காங்கிரஸ் ஒதுக்கியிருக்கும் நிலையில், அவரது மகன் ஃபைசல் படேல் அந்தத் தொகுதியில் தானே போட்டியிடப்போவதாகக் கலகக் குரல் எழுப்பியிருக்கிறார்.

இத்தனைக்கும் 1977, 1980, 1984 ஆகிய மூன்று தேர்தல்களில்தான் அகமது படேல் வென்றிருந்தார். அதன் பின்னர் பாஜகதான் அந்தத் தொகுதியை நீண்டகாலமாகத் தன்வசம் வைத்திருக்கிறது. எனினும், இதைப் பயன்படுத்திக்கொள்ளப் பார்க்கும் பாஜக, “இது இளவரசரின் பழிவாங்கல்” எனப் பகடி செய்கிறது. அகமது படேலுக்கும் ராகுல் காந்திக்கும் இடையில் கசப்புணர்வு நிலவியதாகப் பேசப்படும் நிலையில் அதை வைத்து அரசியல் செய்கிறது.

போதாக்குறைக்கு, இதன் மூலம் காங்கிரஸ்-ஆஆக கூட்டணி முறியுமா என பாஜக ஆதரவு ஊடகங்கள் ஆரூடம் சொல்ல ஆரம்பித்துவிட்டன. ராகுலின் நீதி யாத்திரைப் பயணம் குஜராத்தை எட்டுவதற்கு முன்னர் அம்மாநிலக் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் நரன் ரத்வா பாஜகவுக்குத் தாவிவிட்டார். இவர் அகமது படேலின் நம்பிக்கைக்குரியவராக இருந்தவர்.

இந்தக் களேபரங்கள் போதாதென, பிப்ரவரி 27 அன்று பிஹாரில் பட்ஜெட் கூட்டத்தொடரின்போது இரண்டு காங்கிரஸ் எம்எல்ஏ-க்களும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) எம்எல்ஏ ஒருவரும், ஆளுங்கட்சி வரிசையில் அமர்ந்து இன்னொரு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்கள். முன்னதாகத் துணை முதல்வர் சாம்ராட் செளத்ரி அவர்கள் மூவரையும் தனது அறைக்கு அழைத்துப் பேசியிருக்கிறார்.

அதற்கும் முன்னதாக - பிப்ரவரி 12 அன்று, (மீண்டும் பாஜகவுடன் கைகோத்த) நிதீஷ் குமார் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொண்டபோது ஆர்ஜேடி எம்எல்ஏ-க்கள்மூவர் அவருக்கு ஆதரவாக வாக்களித்தனர். பாஜக பணத்தாசை காட்டி தங்கள் எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்குவதாக ஆர்ஜேடி குற்றம்சாட்டியது.

ஆனால், “மகாகட்பந்தன் கூட்டணி வீழ்ச்சியடையப்போவதை உணர்ந்து அவர்களாகவே எங்கள் பக்கம் வருகிறார்கள்” என்றும் “மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக இன்னும் பலர் வருவார்கள்” என்றும் அலட்டிக்கொள்ளாமல் சொல்கிறது பாஜக.

ஜார்க்கண்ட்டில் ஒரே காங்கிரஸ் மக்களவை எம்.பி-யானகீதா கோரா பாஜகவில் சேர்ந்துவிட்டார். அவர் மீது பணமோசடி,சொத்துக் குவிப்பு வழக்குகள் இருப்பது கவனிக்கத்தக்கது. அருணாச்சலப் பிரதேசத்தின் காங்கிரஸிலிருந்தும், தேசிய மக்கள் கட்சியிலிருந்தும் தலா இரண்டு எம்எல்ஏ-க்கள் பாஜகவுக்குத் தாவியிருக்கிறார்கள். பட்டியல் நீள்கிறது.

தொடரும் குழப்பம்: பாஜகவின் முதலாம் வேட்பாளர் பட்டியலில் மோடி பெயர் அறிவிக்கப்படும் என்றும், வாராணசியில் அவர் நிற்பார் என்றும் தகவல்கள் வெளியாகின்றன. ராகுல் தனது வயநாடு தொகுதியில் மீண்டும் நிற்பாரா என்பதே சந்தேகத்துக்குரியதுதான் என்ற தகவல் சில நாள்களாகவே சுற்றிவந்த நிலையில், அந்தத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆனி ராஜா இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்) சார்பாக நிற்பதாக அறிவிக்கப்பட்டுவிட்டது.

அதுமட்டுமல்ல, “காங்கிரஸ் எதிர்க்க வேண்டியது பாஜகவைத்தான். எதற்கு ராகுல் இங்கு வந்து எங்களுக்கு எதிராகப் போட்டியிட வேண்டும்?” என்று மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் பிருந்தா காரத் கேட்கிறார். ஆனால், கேரளக் காங்கிரஸார் ராகுல் அங்குதான் போட்டியிட வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

அமேதியிலும் இதே குரல்கள்தான். ஆனால், ராகுல் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. இதையெல்லாம் நன்கு பயன்படுத்திக்கொள்ளும் பிரதமர் மோடி, காங்கிரஸும் இடதுசாரிகளும் கேரளத்தில் எதிரிகளாகக் காட்டிக்கொண்டு, பிற இடங்களில் சிறந்த நண்பர்களைப் போல செயல்படுகின்றன எனச் சாடுகிறார்.

விவசாயிகளின் போராட்டம், உத்தரப் பிரதேசக் காவலர்பணியிடப் போட்டித் தேர்வில் நடந்த முறைகேடு, வேலைவாய்ப்பு கோரி பிஹாரில் இளைஞர்கள் நடத்தும் போராட்டங்கள் என பாஜகவுக்குப் பாதகம் சேர்க்கும் பிரச்சினைகள் நிறையவே இருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்திக்கொள்ள காங்கிரஸும் பிற கட்சிகளும் முயற்சிக்கவே செய்கின்றன.

ஆனால், அக்கட்சிகளின் மனவலிமையைச் சோதிக்கும் அளவுக்குத் தொடர்ந்து குடைச்சல் கொடுக்கிறது பாஜக. கூட்டணிக்காகப் பல கட்சிகளுடன் இன்னமும் பாஜக பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டுதான் இருக்கிறது. எனினும், காங்கிரஸ் மீது மட்டும் ஏன் கணைகள் பாய்கின்றன என்பது முக்கியமான கேள்வி.

என்னதான் 370 நிச்சயம் என்று சொல்லிக்கொண்டாலும், பாஜக தனது பலவீனத்தைச் சரிசெய்யவே இப்படியான வலைவீச்சில் ஈடுபடுகிறது என்றும் சிலர் சொல்கிறார்கள். எல்லாவற்றையும் தாண்டி, ஒற்றுமையாக, கட்டுக்கோப்பாக இல்லாவிட்டால் இண்டியா கூட்டணியின் வெற்றிவாய்ப்பு கேள்விக்குரியதுதான்.

- தொடர்புக்கு: chandramohan.v@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x