Last Updated : 18 Dec, 2016 01:15 PM

 

Published : 18 Dec 2016 01:15 PM
Last Updated : 18 Dec 2016 01:15 PM

கலைமுகம்: மரங்கள் தந்த தரிசனம்

தமிழகச் சூழலில் பெரிதும் அறியப்படாதவர் அவர். ஆனால், நீண்ட காலமாக ஓவிய, சிற்பத் துறைகளில் பணியாற்றிவரும் மூத்த ஓவியர்; சிறந்த கலை வரலாற்று ஆசிரியை; பல ஓவியர்களுக்குத் துணை நின்ற அந்த ஆளுமை, லீலா கணபதி.

History of Arts மேடம் என்று ஓவியக் கல்லூரி மாணவர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர். அவர் சென்னையில் 1939-ல் பிறந்தவர். ஸ்டெல்லா மேரிக் கல்லூரியில் கலை வரலாறு மற்றும் வண்ணக்கலை பயின்றவர். சிற்பி ராய் சௌத்ரியின் மாணவரான கலாசாகரம் ராஜகோபாலிடம் கதகளி நடனமும் வைத்தீஸ்வரன் கோவில் மகாதேவப் பிள்ளை அவர்களிடம் பரதமும் பயின்றவர். பள்ளியில் ஓவிய ஆசிரியராகத் தனது பணியைத் தொடங்கிச் சென்னை ஓவியக் கல்லூரியில் கலை வரலாற்று ஆசிரியராக நீண்ட காலம் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

ஆற்றுப்படுத்தும் ஆசிரியர்

தனக்குத் தெரிந்த அனைத் தையும் மாணவர்களுக்குப் புரிய வைக்கும் முனைப்புடன் வகுப்பெடுப் பார். உலகில் உள்ள அனைத்து முக்கியமான அருங்காட்சியகங்களுக்கும் சென்று வரலாற் றுச் சிறப்பு மிக்க ஓவியச் சிற்பங்களை உள்வாங்கியவர். மேற்கு லக, நவீன கால ஓவியம் குறித்தும் ஓவியர்கள் குறித்தும் வகுப் பறையிலும் வகுப்பறைக்கு வெளியே வும் உரையாடியவர். அவ்வோவி யங்களின் வண்ணம், கட்டமைப்பு பற்றிய தகவல்களை வரலாற்றுப் பின்னணியுடன் இணைத்து விளக்கு வார். இந்திய மரபோவியங்கள், சிற்பங்கள் மீது தனிக் கவனம் கொண்டவர்.

சிற்பம், ஓவியம், நாட்டியம், இசை ஆகியவை அனைத்துக்கும் ஒன்றையொன்று பிரிக்க முடியாத வகையிலான தொடர்பு உள்ளது. அந்தக் கட்டமைப்பின் சாரத்தைப் புரிந்துகொள்ளும் முகாந்திரமான உடல் மொழியுடன் கூடிய ஓவிய / சிற்ப விளக்க உரையை வழங்கு வதே இவரது வகுப்பறையின் சிறப்பு. அதிர்ந்து பேசாத, மென் மையான சுபாவம் கொண்டவர். மூர்க் கமான பல மாணவர்களைத் தனது அணுகுமுறையால் சாந்தப்படுத்தி யவர். மாணவர்கள் வரலாற்றுடன் சேர்த்து ஆங்கிலத்தையும் கற்றுக் கொள்ள வேண்டும்; அது அவர்களது எதிர்காலத்துக்கு முக்கியமானது என எப்போதும் கூறுவார்.

தான் வகுப்பெடுக்கும் வகுப் பறை முன்னாள் முதல்வர் ராய் சௌத்ரியின் ஸ்டுடியோ என்பதில் அவருக்கு இனம்புரியாத ஒரு பெருமிதம் இருந்தது. சமூக அவலங்கள் குறிப்பாகப் பெண்கள் மீது ஏவப்படும் வன்முறைகள் மீது அவருக்கு எப்போதும் கோபம் உண்டு. அதை அவர் ஓவியங்களில் காட்சிப்படுத்தியிருக்கிறார். சுற்றுச் சூழல், சமூக விழிப்புணர்வு ஆகி யவை குறித்த ஓவியப் பயிற்சி முகாம்களுக்கும் வனப் பகுதி களுக்கும் பிற இடங்களுக்கும் எங்களுடன் எப்போதும் பயணித்துக் கொண்டே இருப்பவர்.


லீலா கணபதி

பரிசோதனை முயற்சிகள்

மூன்று தலைமுறை மாணவர் களை வழிநடத்தியவர். கதகளி, பரத நாட்டியத்தில் பல பரிசோதனை முயற்சிகளைச் செய்தவர். தமிழ்ப் பாடல்களுக்குத் தன்முனைப்பாகப் பல நாட்டிய வடிவமைப்புகளை (choreography) செய்துபார்த்தவர். பிராமணர் அல்லாதார் சபாவுக்குள் செல்ல முடியாது என்ற அவலத்தால் தனது நாட்டியத் தேடல்களை நிறுத்திக்கொண்டதாகக் கூறுகிறார்.

கலை வரலாற்று ஆசிரியராக 1970-ல் பணியேற்றது முதல் ஓவியம் குறித்த மறு மதிப்பீடு, நுண்கலை குறித்த ஆய்வு ஆகிய வற்றுக்குள் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். ஓவியக் கல்லூரியின் சுற்றுச்சூழல், வகுப்பறைச் சூழல்தான் அதற்குக் காரணம் என்பார். மரங்கள் சூழ்ந்த ரம்மியமான கல்லூரி வளாகம் நம்மை அறியாமலேயே வேறு ஒரு தளத்துக்கு நம்மைக் கடத்திவிடும் வல்லமை கொண்டது என்று சொல்லும் இவர், “வளாகத்துக்குள் நுழைந்தவுடன் உற்சாகம் என்னில் ஊற்றெடுக்கும்” என்பார்.

மரங்கள் தந்த பாடம்

“என்னுடைய ஓவியத் தூண்டலுக்குக் கல்லூரியில் உள்ள மரங்களின் ஆளுமை முக்கியப் பங்காற்றியது. கோடுகளும் வண் ணங்களும் மேலோட்டமான கீறல்களோ அல்லது வெறும் பூச்சோ அல்ல. அது வேறு ஒரு தரிசனம் என்பதை மரங்கள்தான் எனக்கு முதலில் கற்றுத் தந்தன” எனச் சொல்லும் லீலா கணபதி மரத்தின் அடிப்பகுதியின் இருப்பும் மேல்பகுதியின் அசைவும் தன்னைத் தொடர்ச்சியாகப் பல மணி நேரம் பார்க்கத் தூண்டியவை என்கிறார்.

அதன் வெவ்வேறு வடிவங்கள் நிறங்கள் என்னை மனித உடல் - ஆன்மாவுடன் தொடர்புகொள்ளத் தூண்டின. இதிலிருந்துதான் எனது முதல் முயற்சி, கலைக்கான தேடல் ஆரம்பமானது என்கிறார். வகுப்பு நேரம் போக மற்ற நேரங்களில் அந்தோணி தாஸிடம் வண்ணக் கலையும் கல்யாணசுந்தரத்திடம் அவர்களிடன் பதிப்போவியமும் சுரேந்திரநாத்திடம் டெக்ஸ்டைல் பதிப்பும் கற்றுக்கொண்டுள்ளார். எனது மாணவன் சந்ரு தொடர்ச்சியான விவாதங்கள் மூலம் வேறு வகையான புரிதலையும் தூண்டுதலையும் உருவாக்கினார் எனச் சொல்லும் அவர் அமைதி, கவனிப்பு எனத் தனது படைப்பு குறித்த பார்வையை எளிமையாக முன்வைப்பவர்.

இவரது படைப்புகள் பெரும்பாலும் கோட்டோவியங்கள். மிகவும் இலகுவாக உள்வாங்கிக்கொள்ளும் தன்மையுடனே அவை அமைந் துள்ளன. கோட்டோவியம், ஓவியம் மற்றும் சிற்பம் என பல தளங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட இவரது படைப்புகள் பெரும்பாலும் பரிசோதனை முயற்சிகளைக் கொண்டவை. பல கண்காட்சிகளை நடத்தியிருக்கும் லீலா கணபதி தனது பரிசோதனைகளைத் தொடர்ந்து கொண்டே இருக்கிறார்.

- க.நடராஜன், ஓவியர், சிற்பி
தொடர்புக்கு: natsviolet@yahoo.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x