Published : 12 Apr 2017 10:46 AM
Last Updated : 12 Apr 2017 10:46 AM

திசையில்லாப் பயணம் 1: படைப்பாளி வெறும் கருவி!

‘பத்தி’ எழுவது ஒரு சுகானுபவம். குறிப்பிட்ட தலைப்பைக் குறித்த ஒரு கட்டுரையைப் போல், ஒரு வழிப் பாதையில் தளையிட்டுக்கொள்ளாமல், சிந்தனை செல்லும் வழியில் நடை தொடரலாம். எடுப்பு, தொடுப்பு, முடிப்பு போன்ற பத்தாம்பசலி விவகாரங்களைப் பற்றி அக்கறை கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

அண்மையில் ஓர் அனுபவம். நண் பரைப் பனிப் பெட்டியில் பார்த்துவிட்டு கனத்த நினைவுகளுடன் அவர் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தேன். திடீரென்று கேமராவுடன் இரண்டு இளைஞர்கள் என் முன் முளைத்தார்கள்.

‘‘அவரைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல முடியுமா?’’ என்றார் ஒருவர்.

கேமரா என்னை உற்றுப் பார்த்தது. தொலைக்காட்சி சேனல் பெயரைச் சொன்னார் இன்னொரு இளைஞர்.

முதலில் மறுத்துவிடலாம் என்ற எண்ணம் தலைத் தூக்கியது. இது நான் என் நண்பருக்குச் செய்யும் தர்மம் அன்று என்ற எண்ணம் அதைத் தடுத்தது. நான் யாரென்று தெரிந்து கேட்கிறார்கள் என்ற லேசான பெருமையும் என் முகத் தில் புன்னகையாக அடையாளம் கொண்டது.

நான் அவரைப் பற்றி இரண்டு நிமிடங் கள் என் கருத்துகளைச் சொன்னேன்.

கேமரா கண் மூடியது. என்னைப் பேசச் சொன்ன இளைஞர் மிகவும் இயல்பான, யதார்த்தமான குரலில் என்னைக் கேட்டார்:

“உங்கள் பெயர் என்ன?”

நான் யாரென்று தெரியாமலா என் னைப் பேசச் சொன்னார்கள்? புதிதாக வெளியிடப்படும் திரைப்படத்தின் முதல் ‘ஷோ’ முடிந்தவுடன் வெளியே வரும் ரசிக மக்களைத் தொலைக்காட்சி விமர்ச கர்கள் கேட்பது போன்ற கேள்வியா என்று எனக்குத் தோன்றிற்று.

அவர்களுக்கு யாரோ சொல்லி யிருக்க வேண்டும். என் பெயரைச் சொல்லி, ‘‘அவர் அதோ போகிறார். கேளுங்கள்’’ என்று கூறியிருக்கக்கூடும். ஒன்று, கேமரா இளைஞர்கள் அந்தப் பெயரை மறந்திருக்கக்கூடும். அல்லது, அந்தக் குறிப்பிட்ட பெயரை உடை யவர் நான்தானா என்று உறுதிப்படுத் திக்கொள்வதற்காகக் கேட்ட கேள்வி யாகவும் இருக்கலாம்.

நான் என் பெயரைச் சொன்னதற்கு, ‘‘தேங்க்ஸ்’’ சொல்லிவிட்டுப் போய்விட் டார்கள். அவர்கள் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை.

இந்த அனுபவம் எனக்குத் தேவை யென்று எனக்குத் தோன்றிற்று. என்னைப் பற்றி நானே மிகைப்பட நினைத்துக் கொண்டிருந்தால், என்னை பூமியின் தளத்துக்குக் கொண்டுவரும் அனுபவம்.

என் பெயர் அவர்களுக்குத் தெரிந் திருக்க வேண்டுமென்ற அவசியமும் இல்லை. இக்காலத்து இளைஞர்கள் நிகழ்காலத்தில் வாழ்பவர்கள். ‘நிகழ்ந்து கொண்டிருக்கும் கணம், கடந்து போன கணத்தை நோக்கி ‘யார் இந்த அயலான்?’ என்று கேட்கிறது’ என்ற பர்ஸியக் கவிதை வரிகள் என் நினைவுக்கு வந்தன.

பல ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்ட னில், பள்ளிக்கூடங்களில், செவ்வியல் இலக்கியங்கள் எப்படிக் கற்பிக்கப்படு கின்றன என்று அறியும் பொருட்டு, லண்டனில் ஒரு பள்ளியில் கல்விப் பரிசோதகர், ‘‘ஹாம்லெட் எழுதியவர் யார்?’’ என்று கேட்டாரம். ‘‘லாரென்ஸ் ஒலிவியர்’’ என்ற பதில் வந்ததாம் (’ஹாம்லெட்’டாக மேடையிலும் திரைப்படத்திலும் நடித்துப் பிரபல மானவர்).

’ரோஜாப்பூவை எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் அது மணக்கத்தான் செய்யும்’ என்று கூறியிருக்கிற ஷேக்ஸ் பியர், அந்த மாணவனை மன்னித் திருப்பாரென்றுதான் என்று எனக்குப் படுகிறது.

‘பிக்மெலியன்’ என்ற பெர்னார்ட் ஷாவின் நாடகம் நடந்துகொண்டிருந்தது (அதுதான் ‘மை ஃபேர் லேடி’ என்ற பெயரில் திரைப்படமாகச் சக்கை போடு போட்டது). நாடகத்துக்கு நல்ல கூட்டம். நாடகம் முடிந்ததும். ஷா மகிழ்ச்சியுடன், தலை நிமிர்ந்த நடையில் ஹாட்டை யும், மேல்கோட்டையும் பெற்றுக்கொள் வதற்காகச் சென்றார்.

‘‘அங்கிருந்த பணியாளை ‘நாடகம் பார்த்தாயா?’’ என்று பெருமிதத்துடன் கேட்டார். ‘‘பார்த்தேன். நன்றாக இருந் தது’’ என்றார் பணியாள்.

ஹாட்டைப் போட்டுக்கொண்டபோது, அவருடைய ‘ஹாட்’தானா என்ற சந்தேகம் அவருக்கு வந்தது. ‘‘நான் யாரென்று தெரியுமா? இது என்னுடைய ‘ஹாட்’டா?’’ என்று கேட்டார்.

பணியாள் கூறினார்: ‘‘நீங்கள் யாரென்று எனக்குத் தெரியாது. இது உங்களுடைய ‘ஹாட்’டா என்றும் எனக் குத் தெரியாது. ஆனால் இந்த ‘ஹாட்’ டைப் போட்டுக்கொண்டுதான் நீங்கள் இங்கு வந்தீர்கள்’ என்றார். ஷா ஒரு பேட்டியில் ‘‘இந்தப் பதில் என்னைத் தரையில் இறக்கியது’’ என்கிறார்.

நமது இந்திய இலக்கிய மரபில், படைப்பாளிகளைக் காட்டிலும், படைப்புக்களுக்குத்தான் அதிக மதிப்பு. வால்மீகி, வியாசர், அகஸ்தியர், தொல்காப்பியர் ஆகியவர்களைப் பற்றி நமக்கு என்ன வரலாற்று ஆவணங்கள் கிடைத்திருக்கின்றன? ஷேக்ஸ்பியர் பிறந்த நாள், இறந்த நாள், அவருடைய நாடகங்கள் ஒவ்வொன்றும் அரசாங்கப் பதிவகத்தில் எப்போது ஆவணப்படுத்தப்படுத்தப்பட்டது என் பனவற்றுக்கெல்லாம் வரலாற்று ஆதாரங்கள் இருக்கும்போது, நம் புலவர்களைப் பற்றி என்ன சரித்திரக் குறிப்புகள் நமக்குக் கிடைக்கின்றன? படைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, அவை எந்தப் பின்னணியில் உருவாகின என்பதற்கு அற்புதமான, கற்பனை மிகுந்த கதைகள் இருக்கின்றன.

குறுந்தொகை செய்யுள் ஒன்று இறை யனார் என்பவர் பெயரில் காணப்படு கிறது. இதை வைத்துக்கொண்டு ஓர் அழகான கதையை உருவாக்கிவிட் டார்கள். ‘கொங்குதேர் வாழ்க்கை’ என்ற இந்தப் பாடலை நாம் படிக்கும்போது, அதை இயற்றியவராகக் கூறப்படும் இறையனார் நினைவுக்கு வருவதில்லை. இதைப் பற்றிய கதைதான் நம் நினைவுக்கு வருகிறது. சிவபெருமானும் நக்கீரரும் வாதாடிய கதை. ’நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே’ என்கிற தமிழ்ப் புலவனின் புலமைச் செருக்கு!

இச்செய்யுளும் அற்புதமான கவிதை. நம்மாழ்வார் இயற்றிய ‘திருவருட்பா’ விலும் இச்செய்யுள் வேறு வடிவத்தில் இடம் பெறுகிறது. படைப்புதான் நம்ம வர்க்கு முக்கியமாகப் பட்டிருக்கிறதே யன்றிப், படைப்பாளி இல்லை.வால்மீகி, வியாசர், இளங்கோ அடிகள் ஆகிய மூவ ருமே அவர்கள் படைத்த இலக்கியங் களிலேயே கதாபாத்திரங்களாக வரு கிறார்கள். (பின்நவீனத்துவ பாணி!). மகாபாரதத்தில் வரும் சில கதாபாத் திரங்களின் உண்மையான தந்தை அக்காவியத்தை இயற்றியதாகச் சொல் லப்படும் வியாசர்! (பின் பின் நவீனத்துவ பாணி!).

இந்திய மரபைப் பொறுத்தவரை யில் சரித்திரம், புராணம் ஆகியவற்றுக் கிடையில் வித்தியாசம் ஏதுமில்லை. நம் புராணங்களே நம் சரித்திரங்கள். கற்பனையையும், யதார்த்தத்தையும் பிரிக்கும் இடைவெளி நீங்கி அனைத்தும் ஒருங்கே நடக்கும் நிகழ்வினையாகத் தோற்றம்கொள்ளுகின்றன. படைப்பாளி ஒரு கருவி, அவ்வளவுதான்!

இந்திரா பார்த்தசாரதி...

தமிழின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர். ‘சாகித்ய அகாடமி’, ‘சம்ஸ்கிருதி சம்மான்’ விருதுகளைப் பெற்றவர். சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம் ஆகிய படைப்புத்துறைகளில் சிறந்து விளங்குபவர். ‘குருதிப்புனல்’ நாவல், ஒளரங்கசீப்’, ‘ ராமானுஜர்’ நாடகங்கள் போன்றவை, இவரது படைப்புகளில் குறிப்பிடத்தக்கவை.

- பயணம் தொடரும்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x