Published : 13 Jan 2024 06:16 AM
Last Updated : 13 Jan 2024 06:16 AM

கண்கவர் அரங்கம்

சென்னை புத்தகக் காட்சியில் அமைக்கப்பட்டிருக்கும் ‘சால்ட்’ பதிப்பகத்தின் அரங்கம் (எண்-60) தனித்துவமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. செங்கல், மரப்பலகை மீது புத்தகங்கள் வைக்கப்பட்டிருப்பதோடு, வண்ணத் திரைகளால் அரங்கின் உட்புறம் அழகுபடுத்தப்பட்டுள்ளது. பழைய டெலிபோன், டைப்ரைட்டர், சங்கு, கருங்கல், மண் கலயங்கள் போன்ற பழைமையும் கலைநயமும் கொண்ட பொருள்களும் அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

சுயமரியாதை இயக்கத்தை அறிய.. ‘நீதிக்கட்சி வரலாறு’ (2 பாகங்கள்), ‘திமுக வரலாறு’ (3 பாகங்கள்) உள்ளிட்ட நூல்களுடன் திராவிட இயக்க வரலாற்று எழுத்தியலுக்கு முக்கியப் பங்களிப்பை வழங்கிவரும் மூத்த திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசின் புதிய நூல், ‘சுயமரியாதை இயக்க வரலாறு’. சமத்துவ சமுதாயத்தை லட்சியமாகக் கொண்டு சுயமரியாதை இயக்கத்தைப் பெரியார் கட்டமைத்த வரலாற்றை, ‘குடிஅரசு’ இதழ் தொடங்கப்பட்ட காலம் முதல், 1938ஆம் ஆண்டு முதலாம் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பெரியார் கைது செய்யப்பட்டது வரையிலான காலகட்டம் வரை சுமார் 600 பக்கங்களுக்கு மேல் இந்த முதல் பாகத்தில் விரிவாகப் பதிவுசெய்திருக்கிறார் திருநாவுக்கரசு.

சுயமரியாதை இயக்க வரலாறு - பாகம் 1 (1925-1944)
க.திருநாவுக்கரசு
நக்கீரன் பதிப்பகம்
விலை: ரூ.800
அரங்கு எண்: F50

தனிச் சிறப்பான ஓவியங்களின் ஆவணம்: தமிழக ஓவியங்களின் நெடிய வரலாற்றில் திருப்புடைமருதூர் ஓவியங்கள் தனிச்சிறப்பு மிக்கவை. திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றுடன் கடனாநதி என்னும் சிற்றாறு கலக்கும் இடத்தில் திருப்புடைமருதூர் அமைந்துள்ளது. கலை வரலாற்று அறிஞரும் சுவரோவிய ஆய்வு வல்லுநருமான சா.பாலுசாமி திருப்புடைமருதூர் ஓவியங்களை இந்நூலில் ஆவணப்படுத்தியுள்ளார்.

திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயில் ஓவியங்கள் அனைத்தைப் பற்றியும் இதில் விவரித்துள்ளார். ஓவியங்கள் குறித்த தன் கருத்துகளுக்குப் போதுமான சான்றுகளையும் கொடுத்துள்ளார். திருப்புடைமருதூர் கோயில் கோபுரத்தின் இரண்டாம் தளச் சுவர்கள் முழுவதும் தீட்டப்பட்டுள்ள ஓவியங்கள் மூலமாக பொ.ஆ.(கி.பி.)1532ஆம் ஆண்டு விஜயநகர அரசுக்கும் திருவிதாங்கூர் அரசுக்கும் இடையே நடந்த தாமிரபரணி போரை அடையாளம் கண்டு வெளிப்படுத்தியிருப்பது இந்நூலாசிரியரின் முக்கியமான வரலாற்றுப் பங்களிப்பாகும். பெரிய அளவு, கெட்டி அட்டை, வண்ணக் காகிதத்துடன், ஓவியங்களால் நிறைந்த இந்நூல் கலை ஆர்வலர்கள் தவறவிடக் கூடாதது.

திருப்புடைமருதூர் ஓவியங்கள்
சா.பாலுசாமி
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை
விலை: ரூ.3,000
அரங்கு எண்: 440, 441

இந்து தமிழ் திசை வெளியீடு: பிரதமர்களின் உரைகள்: சுதந்திர இந்தியா கடந்து வந்திருக்கும் பிரச்சினைகளையும் சோதனைகளையும் இந்தியாவின் பிரதமர்கள் எப்படி எதிர்கொண்டார்கள், தடைக்கற்களைப் படிக்கற்களாக்கி இந்தியாவை முன்னேற்றுவதற்கு எப்படிப் பாதை அமைத்தார்கள் என்பதை அந்தந்தக் காலகட்டத்தில் பதவி வகித்த பிரதமர்கள் தங்களின் சுதந்திர நாள் உரைகளின் வழியாக மக்களிடம் சேர்த்தார்கள் என்பதைப் பதிவுசெய்கிறது இப்புத்தகம்.

செங்கோட்டையில் சுதந்திர நாளில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு முதல் பி.வி.நரசிம்ம ராவ் வரை, வெவ்வேறு காலகட்டத்தில் முதல் 50 ஆண்டுகளில் பிரதமர்கள் ஆற்றிய உரைகளைத் தொகுத்திருக்கிறார் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி.

செங்கோட்டை முழக்கங்கள்
பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி
விலை: ரூ.350

முத்துகள் 10

மூன்றாவது கண்:
மொழிபெயர்ப்பின் சிக்கல்கள், நுட்பங்கள், அரசியல் குறித்த பார்வைகள்
ஜி.குப்புசாமி
காலச்சுவடு பதிப்பகம், விலை: ரூ.250

வள்ளலார் காட்டும் வாழ்வியல் நெறி
ப.பாலசுப்பிரமணியன்
அழகு பதிப்பகம், விலை: ரூ.250

தமிழ்நாட்டு விளையாட்டுகள்
தேவநேயப் பாவாணர்
நடைவண்டி பதிப்பகம், விலை: ரூ.150

கலைஞர் மு.கருணாநிதி
ம.இராசேந்திரன்
சாகித்திய அகாதெமி, விலை: ரூ.50

நறுமணப் புகையின் தனிமை
இரா.கவியரசு
தேநீர் பதிப்பகம், விலை: ரூ.120

பாரம்பரிய கராத்தே
கோபுடோ ஏ.எஸ்.கிருஷ்ணமூர்த்தி
ஜெயம் பப்ளிகேஷன்ஸ், விலை: ரூ.250

சீட்டுக்கட்டில் சிறுவர்களுக்கான கணிதம்
விழியன், சரண்யா
புக்ஸ் ஃபார் சில்ரன், விலை: ரூ.150

திராவிட சினிமா
வீ.மா.ச.சுபகுணராஜன்
முத்தமிழறிஞர் பதிப்பகம், விலை: ரூ.200

எது நடந்ததோ அது நன்றாக நடக்கவில்லை
ஜெயராணி
ஹெர் ஸ்டோரீஸ், விலை: ரூ.400

யாழ்ப்பாணம் பொது நூலகம்
வரலாற்றுத் தொகுப்பு
என்.செல்வராஜா
குமரன் புத்தக நிலையம், விலை: ரூ.300

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x