Published : 12 Jan 2018 09:38 AM
Last Updated : 12 Jan 2018 09:38 AM

5 கேள்விகள் பதில்கள்! அம்பேத்கர் என்றும் தேவை!- ‘விடியல்’ ராஜராஜன் பேட்டி

கடந்த ஆண்டு சென்னை புத்தகக் காட்சிக்கு ‘பெரியார் இன்றும் என்றும்’ என்ற புத்தகத்தை வெளியிட்ட விடியல் பதிப்பகம், இந்த ஆண்டு ‘அம்பேத்கர் இன்றும் என்றும்’ என்ற புத்தகத்தை வெளியிட்டிருக்கிறது. விடியல் பதிப்பகத்தின் ராஜராஜனிடம் பேசியதிலிருந்து…

இந்தப் புத்தகத்தின் சிறப்பு என்ன?

இந்து சமயம், தீண்டாமை பற்றிய அம்பேத்கரின் முக்கியமான கட்டுரைகளை மூன்று பகுதிகளில் சுமார் 50 தலைப்புகளில் தொகுத்துள்ளோம். இதன் மூலம், இந்தியாவின் சமூக, பொருளாதாரத்தைப் பற்றிய அம்பேத்கரின் பார்வையை வாசகர்கள் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். மேலும், 594 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தின் அடக்க விலை ரூ.300 மட்டுமே.

‘அம்பேத்கர் இன்றும் என்றும்’ புத்தகத்தை வெளியிடுவதற்கான உந்துதல் என்ன?அம்பேத்கரைப் பற்றி ‘இந்துத்துவ அம்பேத்கர்’ என்றெல்லாம் புத்தகம் போடுகிறார்கள். ஆனால், அவர் இந்துத்துவத்துக்கு எதிராகத்தான் எழுதியிருக்கிறார். பெரியாரும் அம்பேத்கரும் இணைந்தே தமிழ் சமூகத்தினரால் புரிந்துகொள்ளப்பட வேண்டும். அதற்காகத்தான் ‘அம்பேத்கர் இன்றும் என்றும்’ தொகுப்பு எதிர்ப்பாயுதமாக வைக்கப்படுகிறது.

இந்துத்துவத்தை எதிர்ப்பதில் அம்பேத்கர் குறித்த வாசிப்பு எந்த அளவுக்கு முக்கியம் என்று நினைக்கிறீர்கள்?

தேர்ந்த அறிவியல் அணுகுமுறையுடன் மனு ஸ்மிருதியை முழுக்க அலசி ஆராய்ந்து எழுதியிருக்கிறார். இதுவே இந்துத்துவத்தை எதிர்கொள்ளப் பெரிதும் உதவும் என்று நினைக்கிறேன். அவரைச் சட்ட மேதை என்று சட்டத்துக்குள்ளேயே அவரைக் கொண்டுபோய் நிறுத்துகிறார்களே தவிர, சமூகம் சார்ந்து அவருடைய செயல்பாடுகளைத் திட்டமிட்டு மறைக்கிறார்கள். இந்த மாதிரி விஷயங்கள் பற்றிய புரிதல்களைத் தமிழக மக்களிடம் கொண்டுசேர்க்க வேண்டும் என்ற நோக்கில்தான் இந்தத் தொகுப்பைக் கொண்டுவந்திருக்கிறோம்.

கட்டுரைகளை எந்த அடிப்படையில் தேர்ந்தெடுத்தீர்கள்?

அம்பேத்கர் இந்துத்துவம் பற்றி எழுதியவை, சாதி பற்றி எழுதியவை ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்தோம். அதுதவிர பகுத்தறிவு சார்ந்து, நாத்திகம் போன்றவை பற்றி அவர் எழுதியவற்றையும் சேர்த்துள்ளோம். மகாராஷ்டிர அரசு அம்பேத்கரின் எழுத்துகளை 32 தொகுதிகளாக ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளது. அவற்றைப் பலர் தமிழில் மொழியெர்த்துள்ளார்கள். அவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்புதான் இந்தப் புத்தகம்.

இந்தப் புத்தகத்துக்கு சென்னை புத்தகக் காட்சியில் ஏதேனும் சலுகை உண்டா?

இந்தத் தொகுப்பு பரவலாக மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதற்காகவே இதை சென்னை புத்தகக் காட்சியில் ரூ.200-க்கு விற்க இருக்கிறோம். தமிழகத்தின் மற்ற நகரங்களில் ரூ.250-க்குக் கிடைக்கும். அடுத்த பதிப்பில் விலை மாறலாம். பல தோழர்கள் இதற்குப் பங்களித்ததால்தான் இந்த விலை சாத்தியமானது. அவர்கள் அனைவருக்கும் நன்றி!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x