Published : 30 Apr 2023 04:00 AM
Last Updated : 30 Apr 2023 04:00 AM

ஆரோக்கியமான இந்தியாவுக்கு நாட்டுப்புற இசை அனைவரையும் சென்றடைய வேண்டும்: டெட்டால் பனேகா ஸ்வஸ்த் இந்தியா - இந்து தமிழ் திசை இணைந்து நடத்திய விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் விருப்பம்

அமைச்சர் மா.சுப்பிரமணியன் | கோப்புப் படம்

சென்னை: ‘ஆரோக்கியமான இந்தியாவுக்கு நாட்டுப்புற இசை தொகுப்பு அனைத்துத் தரப்பினரையும் சென்றடைய வேண்டும்’ எனசுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பல மாநிலங்களிலும், தமிழகத்திலும் கரோனா வைரஸ் தொற்று பரவி வரும் சூழலில், மக்களிடையே சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ‘ஆரோக்கியமான இந்தியாவுக்கு நாட்டுப்புற இசை‘ என்னும் தலைப்பில் 5 நாட்டுப்புற பாடல்கள் இசையமைக்கப்பட்டுள்ளன. ‘டெட்டால் பனேகா ஸ்வஸ்த் இந்தியா’வின் இந்த முன்னெடுப்பில், ‘இந்து தமிழ் திசை‘ நாளிதழ் மற்றும் கிராமாலயா தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்துள்ளன. இதில் உள்ள 5 பாடல்களையும்பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்துள்ளார்.

‘தமிழ்நாட்டை மேலும் நலமாக்க வாரீர்...’ என்றபாடலை பாடகர் அசல் கோலார், ‘பள்ளியில் சுகாதாரம்’ என்ற பாடலை பாடகர் வேல்முருகன், ‘சுற்றுச்சூழல் சுகாதாரம்’ என்ற பாடலை அந்தோணிதாசன், ‘கை கழுவுதலின் முக்கியத்துவம்’ என்ற பாடலை இசைவாணி, ‘வீட்டில் சுகாதாரம்’ என்ற பாடலை கிரிஷாங் ஆகியோர் பாடியுள்ளனர்.

இந்த பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள கஸ்தூரி னிவாசன் அரங்கத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில் சிறப்புவிருந்தினராகப் பங்கேற்ற சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாடல்களை வெளியிட்டார். தொடர்ந்து‘அன்பாசிரியர் விருது’ பெற்ற ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கினார்.

மேலும், பாடல்களுக்கு பங்களிப்பு செய்த மாணவர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு ‘இந்து தமிழ் திசை‘ தலைவர் விஜயாஅருண், ரெக்கிட் (எஸ்ஓஏ) நிறுவன வெளிவிவகாரங்கள் மற்றும் கூட்டாண்மைக்கான இயக்குநர் ரவி பட்னாகர், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

இவ்விழாவில் கலந்து கொண்ட ஆளுமைகள் பேசியதாவது

சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்: சுத்தம் - சுகாதாரம் என்ற வகையில் நடைபெறும் இந்நிகழ்ச்சி தமிழகம் முழுமைக்கும் சென்றுசேர வேண்டும். திரைத்துறைக்கு இணையாக முக்கியகருத்துகளுடன் பாடல்களை சிறப்பாகஉருவாக்கியிருப்பது பாராட்டுதலுக்குரி யது. ‘இந்து தமிழ் திசை’ குழுமத்தினர், சுகாதாரத் துறையோடு இணைந்து பலபணிகளை சிறப்பாக செய்து வருகின்றனர்.

நாளிதழ் என்ற முறையில், நாள்தோறும் நடக்கும் செய்திகளை மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதோடு நின்றுவிடாது, இன்றுள்ள சூழலில் மக்கள்அச்சமின்றி வாழ்வதற்கான விழிப்புணர்வையும் அவர்கள் ஏற்படுத்துகின்றனர். பேரிடர் காலங்களில் தடுப்பூசியை செலுத்தி, எதிர்ப்பு சக்திகளை அதிகரிப்பது குறித்து அழுத்தமான விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்நாளிதழில் வரும்பெரும்பாலான கட்டுரைகள் வாழ்வாதாரத்துக்கு தேவையானது என்பதை யாரும் மறுக்க முடியாது.

இந்த பாடல்கள் குழந்தைகள் முதல்பெரியவர் வரை அனைத்து தரப்பினரையும் சென்றடைய வேண்டும். இதன்மூலம் விழிப்புணர்வடைந்து ஆரோக்கியமான வாழ்வை அனைவரும் வாழ வழிவகுக்கப்பட வேண்டும்.

ரெக்கிட் (எஸ்ஓஏ) நிறுவன வெளிவிவகாரங்கள் மற்றும் கூட்டாண்மைக்கான இயக்குநர் ரவி பட்னாகர்: என் ரத்தத்தில் ‘இந்து’ நாளிதழ் கலந்திருக்கிறது என பெருமிதத்துடன் கூறுவேன். ஏனெனில் எங்கள் கிராமத்துக்கு வாரம் ஒரு முறையேஇந்த நாளிதழ் வரும். இதன் சிறப்பை எனது பெற்றோர் உணர்த்தியுள்ளனர்.

‘டெட்டால் பனேகா ஸ்வஸ்த் இந்தியா’வைப் பொறுத்தவரை 10 நிலைகளாக நடத்தி வருகிறோம். வரும் அக்.2-ம் தேதி மகாத்மா காந்தி பிறந்த நாளன்று 10-வது நிலை நிகழ்ச்சிகள் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இதன் ஒருபகுதியாக தமிழக குழந்தைகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தபோது பலர் ஊக்கமளித்தனர். அதன் தொடர்ச்சியாக இந்த 5 பாடல்களும் மிக சிறப்பாக உரு வாக்கப்பட்டுள்ளது.

இவற்றை தமிழ் தெரியாத பல்வேறு முக்கிய பிரமுகர்களுக்கு அனுப்பினேன். அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் பாராட்டினர். குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் ரசித்ததோடு, அவர்களது மொழியிலும் மொழிபெயர்க்க வேண்டும்என விரும்பினர். குழந்தைகளே நமது எதிர்காலம். அவர்களுக்காகவே இந்தமுயற்சி.

‘இந்து தமிழ் திசை‘ ஆசிரியர் கே.அசோகன்: நல்ல விஷயங்களை குழந்தைகள் மனதில் விதைக்க வேண்டும் என ரவி பட்னாகர் விரும்பினார். அவர் எண்ணத்தில் உதித்ததுதான் இத்திட்டம். ‘இந்து தமிழை’ப் பொறுத்தவரை 10-வது ஆண்டை நிறைவு செய்ய உள்ளோம். ஒரு காலத்தில் நாளிதழ்களை படிப்பதே ஆபத்து என்றிருந்தது. எனவே செய்திகளை கொடுப்பதோடு நல்ல எண்ணங்களை விதைக்க வேண்டும், நேர்மறையான சிந்தனையை உருவாக்க வேண்டும்என வரையறுத்து பணியாற்றி வருகிறோம்.

அந்த வகையில் மக்களுடன் நேரடித்தொடர்பு கொள்ளும் நிகழ்வை நடத்துவோருடன் இணைந்து ஆத்மார்த்தமாக நற்பணியைச் செய்து வருகிறோம். கை சுத்தம் குறித்த ‘டெட்டால் பனேகா ஸ்வஸ்த் இந்தியா’வின் முன்னெடுப்பு, நல்ல முறையில் மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அமைச்சர் உள்ளிட்ட அனைவரும் ஆதரவை வழங்கியுள்ளனர். இவ்வாறு மக்களுக்கு நன்மை செய்யும் நிகழ்வுகளில் என்றும் நாங்கள் இருப்போம்.

‘இந்து தமிழ் திசை‘ தலைமைச் செயல் அலுவலர் சங்கர் வி.சுப்பிரமணியம்: குடும்பத்தில் நல்ல பழக்கங்களைச் சொல்லி கொடுக்க கூடிய ஆட்கள் குறைந்து கொண்டே வருகின்றனர். தற்போது சுத்தத்தின் அவசியத்தை அழுத்தமாக எடுத்துரைக்கும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக குழந்தைகளுக்கு அதிகளவு செல்லம் கொடுக்க தொடங்கிவிட்டதால், அவர்கள் கை, கால் கழுவாமல் இருந்தால்கூட பெற்றோர்களால் கோபப்பட முடிவதில்லை.

இவ்வாறு படிப்படியாக சுத்தத்தை மறந்ததால் கரோனா காலத்தில் மருந்து சாப்பிடும் நிலைக்கு தள்ளப்பட்டோம். இதுபோன்றவற்றை மனதில் வைத்து சமூக கலாச்சார விஷயங்களை மக்களிடையே கொண்டு சேர்ப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்தோம். அதன் தொடர்ச்சியாக பாடல் மூலமாக சுத்தம் பற்றியபோதனைகளை செய்ய முடிவெடுத்தோம். அது மாணவர்களுக்கு சோதனையாக அல்லாமல், நல்ல முறையில் அவர்களைச் சென்றடைந்து எங்களது சாதனையாக இருக்கும் வகையிலான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறோம். இதைபோன்று சமூகத்துக்கு நற்கருத்தை சொல்ல வேண்டும் என்ற விருப்பமே எங்களை இயக்கிக் கொண்டிருக்கிறது.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

இந்நிகழ்வில், கிராமாலயா நிறுவனர் பத்ம சாய்தாமோதரன், பாடகர்கள் வேல்முருகன், கிரிஷாங், இந்திய மருத்துவ சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தப் பாடல்களை அருகில் உள்ள க்யூஆர்கோடைப் பயன்படுத்தி ஸ்பாடிஃபையில் கேட்டு ரசிப்பதோடு, விழிப்புணர்வையும் ஏற்படுத் தலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x