Published : 15 Jan 2023 04:05 AM
Last Updated : 15 Jan 2023 04:05 AM

உதகையை அடுத்த பாலாடாவில் பழங்குடியினர் கலாச்சாரத்தை பறைசாட்டும் ஆய்வு மையம்: வரலாறு மட்டுமின்றி வாழ்வியலையும் அறியலாம்

பிரதிநிதித்துவப் படம்

உதகை: நீலகிரி மாவட்டத்திலுள்ள பழங்குடியினர் கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில், உதகையை அடுத்த பாலாடாவில் பழங்குடியினர் ஆய்வு மைய அருங்காட்சியகம் அமைந்துள்ளது. அங்கு வைக்கப்பட்டுள்ள தமிழகம் மற்றும் அந்தமான், நிக்கோபார் பழங்குடியினர் வீடுகள் மற்றும் பொருட்கள், பார்வையாளர்களுக்கு பழங்குடியினரின் வாழ்க்கையை பிரதிபலிக்கிறது.

தமிழகத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களிலும் பல்வேறு வகையான பழங்குடியின மக்கள் வாழ்கின்றனர். தற்போது இவர்களில் பெரும்பாலான மக்கள் நவீன உலகத்துக்கு வந்துவிட்டாலும் சில பழங்குடியினர் இன்றளவும் பழமை மாறாமல் வாழ்கின்றனர். தமிழகத்தில் உள்ள பழங்குடியின மக்களில் பெரும்பாலானவர்கள் வேட்டையாடுவதை விட்டுவிட்டனர்.

ஆனால் இவர்களின் மூதாதையர்கள் உணவுக்காக வேட்டையாடி வந்தனர். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அவர்கள் வேட்டையாடவும், சமைக்கவும் இயற்கை சார்ந்த பொருட்களையே அதிகம் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த பொருட்களை பெரும்பாலான பழங்குடியின மக்களின் வீடுகளில் தற்போது பார்க்க முடியுமா என்பது கேள்விக்குறியே.

நீலகிரி மாவட்டம் உதகை அருகே எம்.பாலாடா பழங்குடியினர் ஆராய்ச்சி மையம், பழங்குடியினர் கலாச்சாரத்தை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது. இந்த மையத்தில், தமிழகத்தில் உள்ள பல்வேறு வகையான பழங்குடியினர்கள் 100 ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்திய பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக இசைக் கருவிகள், விலங்குகளை வேட்டையாட பயன்படுத்திய கல்லால் ஆன அம்பு, வில், கோடாரிகள் உள்ளன. மேலும், சமையலுக்காக பயன்படுத்திய மண் பாண்டங்கள், கற்களால் ஆன பாண்டங்களும் வைக்கப்பட்டுள்ளன. பழங்குடியின பெண்கள், கடந்த 100 ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்திய அணிகலன்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் என பல்வேறு பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.

அவர்கள் குடியிருப்புகளுக்காக பயன்படுத்திய பொருட்கள், கலைநயமிக்க விளையாட்டு பொருட்கள், போர் கருவிகளும் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள பழங்குடியின மக்களின் கலைநயமிக்க பாரம்பரிய பொருட்கள் மட்டுமின்றி, அந்தமான் நிக்கோபார் தீவுகளில் வாழும் பழங்குடியின மக்கள் பயன்படுத்தும் பல்வேறு வகையான பொருட்களும் வைக்கப்பட்டுள்ளன.

இது தவிர ஒவ்வொரு பழங்குடியின மக்களும் 200 ஆண்டுகளுக்கு முன் தாங்கள் வாழ்வதற்காக பயன்படுத்திய குடியிருப்புகளின் மாதிரிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை காண பல்வேறு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் வந்து செல்கின்றனர். ஆய்வு மைய இயக்குநர் உதயகுமார் கூறும்போது, ‘‘இந்த ஆய்வு மையம் மூலமாக, பழங்குடியினரின் கலாச்சாரம் மற்றும் வாழ்வியலை அறிய முடியும்" என்றார்.

நீலகிரி மாவட்டத்துக்கு ஆண்டுதோறும் சுமார் 30 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்களை கவர பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அவர்களும் பார்த்த இடங்களை பார்த்துவிட்டு திரும்புகின்றன. இந்நிலையில், இந்த ஆராய்ச்சி மையத்துக்கு சுற்றுலா பயணிகள் வரவேற்கப்படுகின்றனர். ஆனால், பெரும்பாலானவர்களுக்கு இதுகுறித்து தெரிவதில்லை.

இதுதொடர்பாக சுற்றுலா ஆர்வலர் டி.வேணுகோபால் கூறும்போது, "சர்வதேச சுற்றுலா தலமான நீலகிரி மாவட்டத்துக்கு, பல நாடுகளிலிருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இவர்களுக்கு, சுற்றுலா தலங்கள் மட்டுமின்றி வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் மற்றும் பழங்குடியினர் ஆய்வு மையங்களை அறிய செய்வதன் மூலமாக, நீலகிரி மாவட்டத்தின் வரலாறு மட்டுமின்றி வாழ்வியல் குறித்தும் தெரியவரும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x