Published : 11 Jan 2023 04:27 AM
Last Updated : 11 Jan 2023 04:27 AM

விழுப்புரம் அருகே பல்லவர் கால மூத்ததேவி சிற்பம் கண்டறிவு

தி.எடையார் கிராமத்தில் விவசாய நிலத்தில் கண்டறியப்பட்ட புடைப்புச் சிற்பம்.

விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லூர் அருகே தி.எடையார் கிராமத்தில் திருக்கோவிலூர் சாலை வீரன் கோயில் எதிரில் கல்வியியல் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் விஸ்வநாதன் என்பவரின் நிலத்தை சீர் செய்தபோது புடைப்புச் சிற்பம் கண்டறியப்பட்டது.

அவர் கூறிய தகவலின்படி விழுப்புரம் வரலாற்று பேராசிரிய ரான ரமேஷ் மற்றும் ரங்கநாதன் ஆகியோர் கொண்ட குழுவினர் நேரடியாக சென்று கள ஆய்வு செய்ததில் ஜேஷ்டா தேவி என்னும் மூத்ததேவி சிற்பம் என கண்டறிந்தனர்.

இது தொடர்பாக பேராசிரியர் ரமேஷ் கூறியதாவது: இச்சிற்பம் 100 சென்டிமீட்டர் உயரமும் 76 சென்டிமீட்டர் அகலமும் கொண்ட மென்கூட்டு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. மூத்ததேவி இரண்டு கால்களையும் பக்கவாட்டில் அகற்றிய நிலையில் இரண்டு கரங்களை தொங்கவிட்டவாறு வலது கரத்தில் மலரை கீழ் நோக்கி பிடித்த நிலையில் இடது கரத்தில் தொங்கவிட்டவாரும் உள்ளன.

காதில் தடித்த குண்டலம் உள்ளன. கழுத்தில் தடித்த அணிகலன் காணப்படுகிறது. மூத்ததேவியின் வலது புறம் மகள் மாந்தினியும், இடது புறம் மகன் மாந்தன் எருமை தலையுடன் காணப்படுகிறார்கள். வலப்புறத்தில் கீழ் அவளது வாகனம் கழுதையும் அதன் கீழ் சக்கரம் போன்ற அமைப்பும், வலது புறம் காக்கை கொடியும் இடது புறம் கீழ் ஒரு ஆண் உருவம் நின்ற நிலையில் உள்ளது.

இதன் கீழ் கலசம் காணப்படுகிறது. மூத்ததேவியின் இடை முதல் பாதம் வரை நீண்ட ஆடை முடிச்சுடன் தொங்குகிறது. கிராமிய கலை பாணியில் அமைந்துள்ள இதன் காலம் கிபி 8-ம் நூற்றாண்டு பல்லவர் காலமாகும். தென்பெண்ணை ஆற்றின் கரையில் அமைந்துள்ள சித்தலிங்க மடம், திருவெண்ணெய்நல்லூர் போன்ற ஊர்கள் சோழர் காலத்தில் சிறந்து விளங்கியதை அங்குள்ள கோயில்களும் சிற்பங்களும் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x