Published : 30 Oct 2022 04:40 AM
Last Updated : 30 Oct 2022 04:40 AM

இந்தியாவில் எங்கு சென்றாலும் பழமைக்கான சான்றுகள் உள்ளன: இந்தியத் தொல்லியல் துறை இயக்குநர் தகவல்

விழுப்புரத்தில் நடந்த கல்வெட்டு மற்றும் கோயிற்கலைப் பயிலரங்கத்தில் ஆட்சியர் மோகன் பேசுகிறார்.

விழுப்புரம்: இந்து சமய அறநிலையத் துறையின் விழுப்புரம் மண்டலம், விழுப்புரம் வரலாற்று ஆய்வு மையம் இணைந்து நடத்திய கல்வெட்டு மற்றும் கோயிற் கலைப்பயிலரங்கம் விழுப்புரத்தில் நேற்று நடைபெற்றது.

இப்பயிலரங்கத்திற்கு தலைமை வகித்து ஆட்சியர் மோகன் பேசியது:பல்லவர் காலத்து வரலாற்று சிறப்பு உடைய கோயில் விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் மண்டகப்பட்டு பகுதியில் அமைந்துள்ள கோயில்அழியா சிறப்புகளைக் கொண்டது.இக்கோயிலைதான் முதல் கற் கோயில் என்று குறிப்பிடுகிறோம். இன்றைய பொறியாளர்களுக்கு எல்லாம் சவால் விடும் வகையில், அக்காலத்திலேயே சிறப்பாக கட்டப்பட்டிருக்கிறது.

விழுப்புரம் - புதுச்சேரி சாலையில் வாக்குண்டார் ஈசுவரன் கோயில் உள்ளது. இந்தக் கோயில் தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு முன்மாதிரிக் கோயில் என்று கூறலாம். தமிழர்களின் தொன்மையை, வரலாற்றை பறைசாற்றும் வகையில் கோயில்களும், கல்வெட்டுகளும் உள்ளன. அதை எடுத்துரைக்கும் வகையில் இதுபோன்ற பயிலரங்கு நடத்தப்படுவது பாராட்டுக்குரியது என்றார்.

இப்பயிலரங்கில் பங்கேற்ற இந்தியத் தொல்லியல் துறை இயக்குநர் அருண்ராஜ் பேசியது: இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள் செய்த நல்ல காரியங்களாக ரயில்வேயை தொடங்கியது, இந்தியத் தொல்லியல்ஆய்வுத் துறையைத் தொடங்கியது போன்றவற்றை குறிப்பிடலாம். உலகில் மிகப் பழமையான அமைப்பாக இந்தியத் தொல்லியல் துறை திகழ்கிறது. 1861-ம் ஆண்டில் அமைப்பு தொடங்கப்பட்டு, 161 வது ஆண்டில் உள்ளது.

கல்வெட்டை படியெடுத்து படிப்பது மட்டுமல்ல, மொழியையும் படிக்க வேண்டும். இந்தியாவில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் பேச்சு வடிவில் மொழி இருந்தாலும் எழுத்து வடிவில் இல்லை. எனவே எழுத்தோடு மொழியையும் சேர்ந்துபடிக்க வேண்டும். சங்ககாலத்தை அடிப்படையாகக் கொண்டு. கீழடியில் அகழாய்வு மேற்கொள் ளப்பட்டன.

அதைத் தொடர்ந்து தற்போது ஆதிச்சநல்லூரிலும் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை என எந்த பகுதிக்குச் சென்றாலும் பழமைக்கான சான்றுகள் உள்ளன.

கோயில்களில் கிடைக்கும் கல்வெட்டுகளைக் கொண்டு அவை எந்த நூற்றாண்டை சேர்ந்தவை என்பது அறிவது போல, நாணயங்களைக் கொண்டு அவை எந்த காலத்தைச் சேர்ந் தவை என்பதையும், அதன் வரலாற்றையும் அறிய முடியும் என்றார்.

இவ்விழாவில் விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் பேசியது: கல்வெட்டுகள் இந்தியாவில் பல மாநிலங்களில் கிடைத்தன; கிடைத்துக் கொண்டிருக்கின்றன. அதில் 60 சதவீத கல்வெட்டுகள் தமிழகத்தைச் சேர்ந்தவை. கல்வெட்டு வளம் நிறைந்த மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது. கல்வெட்டு நிறைந்த மொழியாகத் தமிழ் உள்ளது.

கல்வெட்டு செய்திகள் மூலம் அந்த காலத்தின் சமூகச் சூழலை, பண்பாட்டை, வரலாற்றை, பொருளாதார சூழலை நாம் அறிந்து கொள்ள முடியும். கல்வெட்டுகள் அரிய பொக்கிஷங்களாக உள்ளன. எல்லா தரவுகளும் அதில் உள்ளன. ஆனால், அதைப் பற்றிய அக்கறை கொண்டவர்களாக, நுண்ணறிவுமிக்கவர்களாக இருக்கிறோமா என்றால் இல்லை. அதை பற்றிய படிப்பு நம்மிடம் இல்லை.

நமது சமூகத்தை, வரலாற்றை, மொழியைப் புரிந்து கொள்ள வேண்டும் எனில் அனைத்துத் துறை சார்ந்த வல்லுநர்களும் இணைந்து பணியாற்ற வேண்டும். அப்போதுதான் தமிழ் சமூகத்தின், உண்மையான கட்டமைப்பை, வரலாற்றை கண்டறிய முடியும் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x