Published : 13 Mar 2024 02:24 PM
Last Updated : 13 Mar 2024 02:24 PM

சத்தமில்லாமல் பார்வையை பறிக்கும் ‘திருடன்’ - கண் அழுத்த நோய் ‘கிளாகோமா’ அலர்ட்

மதுரை: கண் அழுத்த நோயான `கிளாகோமா' குறித்த விழிப்புணர்வு போதிய அளவு இல்லாததால் சத்தமில்லாமல் பார்வை பாதிக்கப்படும் சூழல் ஏற்படுகிறது. கண் அழுத்த நோயான `கிளாகோமா' குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் மார்ச் 10 முதல் 16-ம் தேதி வரை உலக `கிளாகோமா' வாரம் ( World Glaucoma Week ) கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து கண் மருத்துவ உதவியாளர் ( வி.ஓ ) மற்றும் தேசிய கண் மருத்துவ சங்க முன்னாள் தேசிய ஒருங்கிணைப்பாளர் மு.வீராசாமி கூறியதாவது: ரத்த அழுத்தம் 120/80 என்றால் பிரச்சினை இல்லை. கூடினால் பிரஷர் அதாவது பி.பி.கூடிருச்சு என்கிறார்கள். இதைப் போல் கண்ணிலும் ஓர் அழுத்தம் பராமரிக்கப்படுகிறது. இந்த அழுத்தம் 10 - 20 க்குள் இருந்தால் நல்லது. உடம்பில் பிரஷர் அதிகமானால் எப்படி பி.பி.-உயர் ரத்த அழுத்தம் என்கிறோமோ அதே போல் கண்ணில் அழுத்தம் உயர்ந்தால் அதுதான் `கிளாகோமா'.

`கிளாகோமா' பிரச்சினை வருவதற்கு முன் எந்த விதமான அறிகுறிகளும் தெரியாது. அமைதியாக வந்து தாக்கும். வந்ததே தெரியாது. சத்தமில்லாமல் வந்து தாக்கும். நன்றாக கால் ஊன்றிய பிறகு அதாவது பக்கவிளைவுகள் ஏற்பட்ட பிறகே கண்ணில் ஏதோ பிரச்சினையாக இருக்கிறது போலிருக்கிறதே என்று உணர முடியும். அதுவரையில் தெரியாது. கண்ணில் அழுத்தம் அதிகரித்தது கண்டறியப்படாமல் தொடக்க நிலையில் சிகிச்சை செய்யவில்லை என்றால் அழுத்த அதிகரிப்பால் பார்வை நரம்புகள் ( Optic Nerve ) பாதித்துவிடும். இதனால் பார்வையும் கடுமையாக பாதித்துவிடும்.

ஒருமுறை பாதித்தால் பாதித்ததுதான். மீண்டும் சரி செய்ய முடியாது. பட்டுப்போன செடியை மீண்டும் துளிர்க்க வைக்க முடியாதோ அதைப் போன்று பாதித்த பார்வை நரம்புகளை மீண்டும் சரி செய்ய முடியாது. மேற்கொண்டு சிகிச்சை செய்து அழுத்தத்தை கட்டுப்படுத்தி இருக்கின்ற பார்வையை மட்டுமே காப்பாற்றலாம். இதற்கு மருத்துவமனையில் 40 வயதுக்கு மேல் எப்படி ரத்த அழுத்தச் சோதனை செய்து கொள்கிறார்களோ அதைப் போன்று கண் மருத்துவமனையில் கண்ணில் அழுத்த சோதனையையும் ( Eye Pressure Test ) பார்த்துக் கொள்ள வேண்டும்.

நாமே போய் பார்த்துக் கொள்ள வேண்டும். 40 வயதில் இதை வழக்கமாக்கிக் கொள்வது நல்லது. ஒரு வேளை இருந்தால் தொடக்க நிலையிலேயே கண்டறிந்து சரியான சிகிச்சை செய்து கட்டுக்குள் வைக்க முடியும். மருத்துவமனையில் கண்ணில் மருந்து போட்டு `சிலிட் லேம்ப்' சோதனை, `ஆப்தால்மாஸ்கோப்' சோதனை செய்தும் `கிளாகோமா' பாதிப்புக்கான வெளிப்பாடுகள் இருக்கிறதா என்று மருத்துவர் பார்ப்பார். 40 வயதில் ஒருவருக்கு வெள்ளெழுத்துப் பிரச்சினைக்கு கண்ணாடி தேவைப்பட்டால் மருத்துவமனைக்குச் சென்றால்தான் இந்த சோதனைகளை எல்லாம் பார்த்துக் கொள்ள முடியும்.

சிலர் என்ன நினைக்கி றார்கள் என்றால் மருத்துவ மனைக்குச் சென்றால் அரை நாள் ஆகிறது. கண்ணில் மருந்து ஊற்றி தேவையில்லாமல் உட்கார வைத்து விடுகிறார்கள். அன்றைக்கு நாள் முழுவதும் வேலை கெட்டுப் போய்விடுகிறது என்று நினைத்து கண்ணாடிக் கடைக்குச் சென்று வயதைச் சொல்லி வெள்ளெழுத்துக் கண்ணாடியை வாங்குகிறார்கள். அப்படி வாங்கினால் ஒருவேளை `கிளாகோமா'வுக்கான பாதிப்புகள் தொடக்க நிலையில் இருந்தால் அதைக் கண்டறியும் வாய்ப்பை இழந்து விடுவார்கள். தொடக்க நிலையில் கண்டறியாமல் சிகிச்சை செய்யா விட்டால் நாட்கள் செல்லச்செல்ல பக்கப்பார்வை வெகுவாக குறையும்.

பக்கத்தில் யார் வருகிறார்கள், போகிறார்கள் என்பதே தெரியாது. குழாய் வழியாக பார்ப்பதுபோல் கூட பார்வை அளவு வெகுவாகக் குறைந்து பார்வை கடுமையாகப் பாதித்து விடலாம்.மருத்துவமனைக்குச் செல்லும் போதே பார்வை பாதிப்போடு செல்லும் நிலையில்தான் `கிளாகோமா' இருக்கிறது.

பார்வையைக் காக்க `கிளாகோமா'-வுக்கு தேவையெல்லாம் தொடக்க நிலை கண்டுபிடிப்பு. அதற்கு கண் அழுத்த சோதனையை 40 வயதுக்கு மேல் ஆண்டு தோறும் செய்துகொள்ள வேண்டும். நல்ல சொட்டு மருந்துகள் இருக்கின்றன. தேவைப்பட்டால் லேசர் மருத்துவமும், அறுவை சிகிச்சையும் செய்வார்கள். தொடர் சிகிச்சையும் தொடர் கவனிப்பும் பார்வையை நிச்சயமாக பாதுகாக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x