Published : 15 Feb 2024 01:01 AM
Last Updated : 15 Feb 2024 01:01 AM

20 போன்களை பயன்படுத்தும் சுந்தர் பிச்சை: கூகுள் சிஇஓ பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்

கலிபோர்னியா: கூகுள் நிறுவனத்தின் சிஇஓ-வாக இயங்கி வரும் சுந்தர் பிச்சை அண்மையில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்று இருந்தார். அதில் தனது டெக் பழக்கம், குழந்தை வளர்ப்பு, ஏஐ என பல விஷயங்கள் குறித்து பேசியுள்ளார்.

தொழில்நுட்ப உலகின் சாம்ராட்டாக இயங்கி வருகிறது கூகுள். அதன் தலைமை செயல் அதிகாரியாக இயங்கி வருகிறார் தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை. 51 வயதான அவர் படித்து, வளர்ந்தது தமிழகத்தில்தான். பள்ளிப் படிப்பை தமிழகத்திலும், பட்டப்படிப்பை கரக்பூர் ஐஐடி-யிலும், மேற்படிப்பை அமெரிக்காவிலும் முடித்தவர். கடந்த 2004-இல் கூகுள் நிறுவனத்தில் இணைந்தார். கடந்த 2015 முதல் சிஇஓ பொறுப்பை கவனித்து வருகிறார். இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் சுவாரஸ்ய தகவல்களை அவர் பகிர்ந்துள்ளார்.

பெரும்பாலான உலக மக்கள் தங்களது வசம் உள்ள ஒற்றை மொபைல்போனை கையாளவே பல்வேறு இடையூறுகளை எதிர்கொண்டு வரும் நிலையில் ஒரே நேரத்தில் சுமார் 20 போன்களை தான் பயன்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார். தனது பணி நிமித்தமாக இத்தனை மொபைல்போன்களை பயன்படுத்த வேண்டி இருப்பதாக குறிப்பிடுகிறார். பல்வேறு சாதனங்களில் கூகுள் புராடெக்ட்களின் இயக்கம் எப்படி என்பதை சோதிக்கவும், அப்டேட்டில் இருக்கவும் இதை செய்வதாக தெரிவித்துள்ளார். அப்போது தான் பயனர்களுக்கு தேவையான புதிய அம்சங்கள் மற்றும் கூகுள் நிறுவனம் புதுமையை கொண்டு வரவும் முடியும் என நம்புகிறார்.

அதேநேரத்தில் பொறுப்புள்ள தந்தையாக தனது பிள்ளைகளின் ஸ்க்ரீன் டைமை கண்காணிப்பதும் அவசியம் என்கிறார். அது கண்டிக்கத்தக்கும் வகையில் இல்லாமல் கட்டுப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும், பொறுப்புடன் டெக் கேட்ஜெட் பயன்பாடு இருக்க வேண்டும் என சொல்லியுள்ளார். இந்திய பாரம்பரியத்தின் ஊடாக உலகத்தை பார்ப்பதால் அது பல்வேறு வகையில் தனக்கு உதவுவதாகவும் தெரிவித்துள்ளார்.

பாஸ்வேர்ட் மாற்றும் வழக்கமில்லை: பல்வேறு கணக்குகளை கையாளும் அவர், அதன் பாஸ்வேர்டை அடிக்கடி மாற்றுவது இல்லை என தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் தனது கணக்கை பாதுகாப்பான வகையில் பயன்படுத்த ‘டூ ஃபேக்டர் ஆத்தென்டிகேஷன்’ முறையை பின்பற்றி வருவதாக தெரிவித்துள்ளார். பயனர்கள், ஆன்லைனில் இயங்கும் போது அவர்களது பாதுக்காப்புக்கு அவர்களே பொறுப்பும் எனவும் நம்புகிறார்.

மனிதகுலம் உருவாக்கிய மிக முக்கிய தொழில்நுட்பமாக செயற்கை நுண்ணறிவு (ஏஐ) இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். எப்படி நெருப்பும், மின்சாரமும் மனித வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தியதோ அது போன்ற தாக்கத்தை ஏஐ ஏற்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x