Published : 05 Feb 2024 03:49 PM
Last Updated : 05 Feb 2024 03:49 PM

“மூலிகை குடிநீர் மட்டுமே உணவு” - திருப்பூரில் கவனம் ஈர்க்கும் பெரியவரின் வாழ்வியல் முறை

வீட்டின் உட்பகுதியில் காலியிடத்தை நிரப்பியுள்ள மரங்கள்.

உடுமலை: திருப்பூர் மாவட்டம் உடுமலை ஜீவா நகர் கண்ணுச்செட்டியார் வீதியில் வசிப்பவர் ஆர்.திருமூர்த்தி (51). திருமணமாகாதவர். வாரி சுருட்டப்பட்ட குடுமியும், ஷேவ் செய்யப்படாத முகமும் இவரது அடையாளம். இருசக்கர வாகனம் பழுதுபார்ப்பதில் தனக்கென தனி திறமையை கொண்டவர்.

இவரது சொந்த முயற்சியில் இரண்டரை அடி உயரமுள்ள இருசக்கர வாகனத்தை உருவாக்கியுள்ளார். ஆன்மிகத்திலும், பாரம்பரிய சித்த வைத்திய முறைகள் மீதும் நம்பிக்கையும், ஈடுபாடும் கொண்டவர். அடிக்கடி காசிக்கு விஜயம் செய்வது, மலையேற்றங்களில் ஈடுபடுவதை பொழுதுபோக்காக கொண்டுள்ளார்.

ஆர்.திருமூர்த்தி

பழமையும், தனித்துவமும் கொண்ட இருசக்கர வாகனங்களை பாதுகாத்து வருகிறார். இவருக்கு சொந்தமான ஓட்டுவில்லை வீட்டுடன் கூடிய 6 சென்ட் இடத்தில் வசித்து வருகிறார். இவரது வீட்டுக்கு வருவோரை நீண்டு நெடிந்து வளர்ந்த மரங்கள்தான் முதலில் வரவேற்கும். வில்வ மரம், யூகலிப்டஸ் மரம், மூங்கில், கொடிக்காய் மரம், மா, கொய்யா, மருதாணி, சீதா, மாதுளை உள்ளிட்ட பழ வகை மரங்களும், செடிகளும் நிறைந்து காணப்படுகின்றன.

அது மட்டுமின்றி வீட்டுக்குள் 30 வகையான பதப்படுத்தப்பட்ட மூலிகை வகைகள் கண்ணாடி ஜார்களை நிறைத்திருப்பதை காண முடிகிறது. கடந்த 20 ஆண்டுகளாகவே பாரம்பரிய சித்த வைத்திய முறைகள், திருமூலர் அருளிய உணவு முறைகளை பின்பற்றுவதில் ஆர்வம் கொண்டுள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளாகவே சமைத்த உணவு வகைகளுக்கு விடை கொடுத்துவிட்டு, பழ உணவுகளை, அதுவும் அவரது வீட்டில் வளரும் பழங்களை மட்டுமே உணவாக உட்கொள்ள தொடங்கினார். கடந்த சில ஆண்டுகளாக பழ உணவுகளையும் குறைத்துக்கொண்டு மூலிகை கசாயத்தை மட்டுமே உணவாக உட்கொண்டு வருவதாக கூறுகிறார்.

கண்ணாடி ஜார்களில் தொகுக்கப்பட்டுள்ள 30 வகை மூலிகைகள்.

மூலிகைகளின் மேல் அலாதி பிரியம் கொண்ட இவர் தான் உணர்ந்ததை மற்றவர்களுக்கு பகிர வேண்டி இயற்கை உணவகம் ஒன்றை செயல்படுத்த தொடங்கி, லட்சங்களில் இழப்பு ஏற்பட்ட வேகத்தில் அதனை மூடிவிட்டு, தான் கண்ட மாற்றத்தை தனக்கு மட்டுமே பயன்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

இதுகுறித்து 'இந்து தமிழ் திசை' செய்தியாளரிடம் அவர் கூறியதாவது: நமக்கு வரும் வியாதிகளுக்கு பெரும்பாலும் உண்ணும் உணவுதான் காரணம். இதை பல சித்தர்களும், ஞானிகளும் கண்டறிந்து, அதில் இருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதையும் தெரிவித்துள்ளனர்.

இன்றைய நவீனத்தின் வரவால் மக்களின் உணவுப் பழக்கம் முற்றிலும் மாறிவிட்டது. அதனால்தான், நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. உணவு மோகத்தை அகற்றி, ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொண்டால் ஆயுள் காலம் முழுவதும் அச்சமின்றி, ஆரோக்கியமாக வாழலாம்.

உடுமலையை சேர்ந்த மெக்கானிக் திருமூர்த்தி
வீட்டின் முன்ப குதியில் காணப்படும் மரங்கள்.

நான் தினமும் 3 மணி நேரம் யோகாசனம் செய்கிறேன். பல வகையான மூலிகை கசாயத்தை மட்டுமே உணவாக உட்கொள்கிறேன். செல்போன் பயன்படுத்துவதில்லை. வழக்கமான எனது மெக்கானிக் தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். எனது உடலில் எவ்வித சோர்வும், அசதியும் ஏற்படுவதில்லை.

என்னைப்போல வாழ விரும்பி பலரும் ஆலோசனை கேட்டுச் செல்கின்றனர். இதற்கான முறைகளை சில நாட்களே பின்பற்றி, பிறகு வழக்கம்போல உணவு முறைக்கு மாறிவிடுகின்றனர். தொடர் முயற்சியும், பயிற்சியும்தான் ஆரோக்கிய பாதைக்கு திரும்ப வழியாகும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x