Published : 13 Jan 2024 04:05 PM
Last Updated : 13 Jan 2024 04:05 PM

மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க மழைக்கால பராமரிப்புத் தொகை உயர்த்தப்படுமா?

சேத்தியாத்தோப்பு அருகே மண்பாண்டம் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்.

கடலூர்: மண்பாண்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் மழைக்கால பராமரிப்புத் தொகை உயர்த்தப்பட வேண்டும். சரியான நேரத்தில் இந்தத் தொகையை வழங்க வேண்டும் என்று நமது ‘இந்து தமிழ் திசை'யின் 'உங்கள் குரல்' பகுதியில் கடலூர் மாவட்ட வாசகர்கள் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக விசாரித்தபோது கிடைத்த தகவல்கள்: கடலூர் மாவட்டத்தில் சேத்தியாத்தோப்பு அருகே அள்ளூர், சாத்தமங்கலம், பரதூர்சாவடி, ஒரத்தூர், சித்தலூர், வடபாக்கம், வெய்யலூர், புவனகிரி, குமராட்சி அருகே உள்ள கீழப்பருத்திக்குடி, சிதம்பரம் அருகே உள்ள குமாரமங்கலம், காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள தெற்கிருப்பு, உடையார்குடி, பண்ருட்டி அருகே சிறுகிராமம், வையாபுரி பட்டினம், குயவன்மேடு, விருத்தாசலம் அருகே தர்மநல்லூர்,தேவன்குடி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் பேர் மண்பாண்டம் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

மழைக்காலங்களில் இவர்கள் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு, வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நிலை உள்ளது. மேலும் மண்பாண்டம் தயாரிப்பதில் சொற்ப வருமானமே கிடைப்பதால் மழைக்காலத்தில் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று தமிழக அரசை நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் இவர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ரூ.4 ஆயிரம் வழங்கப்பட்டது. அதன் பின்னர் ரூ.5 ஆயிரமாக இத்தொகை உயர்த்தி வழங்கப்பட்டது.

இவ்வாறு வழக்கப்படும் தொகை மழைக்காலத்தில் வழங்கப்படாமல் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் தொழிலாளர் நலத்துறையால் வழங்கப்படுகிறது. ‘இந்த தொகையை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்; பொங்கல் பண்டிகைக்கு முன்னரே இந்த மழைக்கால நிவாரணத் தொகையை வழங்க வேண்டும்’ என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தமிழக அரசும், தொழிலாளர் நலத்துறையும் இவர்களின் கோரிக்கையை ஏற்று, மழைக்கால நிவாரண தொகையை உயர்த்தி, உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் காக்கப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x