Last Updated : 02 Sep, 2023 08:00 AM

 

Published : 02 Sep 2023 08:00 AM
Last Updated : 02 Sep 2023 08:00 AM

இறுதிப் பயணத்தில் கைகொடுக்கும் இலவச அமரர் ஊர்தி!

கோவை: அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று உயிரிழப்பவர்கள், திடீர் விபத்து காரணமாக உயிரிழந்து, அரசு மருத்துவமனைகளுக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டுவரப்படும் உடல்களை, உயிரிழந்தவர்களின் சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்ல, 24 மணி நேரமும் செயல்படும் இலவச ஆம்புலன்ஸ் சேவையை தமிழக அரசு கடந்த 2011-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. தங்களின் அன்பானவர்களை இழந்து வாடும், ஏழை மக்களுக்கு இக்கட்டான நேரத்தில் கைகொடுத்து உதவி வருகிறது அரசின் இந்த இலவச அமரர் ஊர்தி சேவை.

தமிழகத்தில் தற்போது 38 மாவட்டங்களில் 200-க்கும் மேற்பட்ட இலவச அமரர்ஊர்திகள் இயக்கப்பட்டு வருகின்றன.இதில், கோவையில் மட்டும் 11 வாகனங்கள் இயக்கப்படுகின்றன. அதோடு,இயற்கை பேரிடர்கள், பெரிய விபத்துகள் போன்றவற்றின் போதும் இந்த சேவை முக்கிய பங்காற்றி வருகிறது.

இதுதொடர்பாக தமிழ்நாடு சுகாதாரத் திட்ட அதிகாரிகள் கூறியதாவது: ஆம்புலன்ஸ் தேவை குறித்து தகவல் தெரிவிக்க 155377 என்ற இலவச எண்ணுக்கு வந்த அழைப்புகள் மூலம் பெரும்பாலானோரின் (99.9 சதவீதம்) உடல்களை எடுத்துச் சென்றதில், கோவையில் செயல்படும் இலவச அமரர் ஊர்தி வாகனங்கள் தமிழகத்தில் முதல் இடத்தில் உள்ளன. கோவை அரசு மருத்துவமனை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், சிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவமனை ஆகிய இடங்களில் இருந்து உடல்கள் எடுத்துச் செல்லப்பட்டு வருகின்றன.

அரசு மருத்துவமனைகளில் இறந்தவர்களின் உடல்களை தமிழகத்தின் எந்தப்பகுதிக்கு வேண்டுமானாலும் இந்த சேவையைபயன்படுத்தி கொண்டு செல்ல முடியும்.இறந்தவரின் பெயர், வயது, கொண்டுசெல்ல வேண்டிய இடம் போன்ற தகவல்களை அளித்தால் போதுமானது.

அதேபோல, தனியார் மருத்துவமனைகளில் முதல்வரின்விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின்கீழ் சிகிச்சை பெற்று, உயிரிழந்தவர்களின் உடல்களையும் இலவசமாக ஏற்றிச்செல்கிறோம். சடலத்துடன் பயணிக்க இருவருக்குமட்டுமே அனுமதியுள்ளது.

ஒரே ஓட்டுநரே நெடுந்தூரம் வாகனத்தை ஓட்ட முடியாது. எனவே, எந்த மாவட்டத்துக்கு செல்ல வேண்டுமோ, அந்த மாவட்டத்தில்உள்ள வாகனத்துக்கு தகவல் தெரிவித்துவிடுவோம். அவர்கள் பாதி வழியில் வந்துஉடலை அந்த வாகனத்துக்கு மாற்றிஎடுத்துச்சென்றுவிடுவார்கள்.

அனைத்துஇலவச அமரர் ஊர்தி வாகனங்களிலும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு, கண்காணிக்கப்படுகின்றன. இதில் எந்த முறைகேடும் செய்ய முடியாது. கோவையில் மட்டும் மாதந்தோறும் சுமார் 800 உடல்களைபல்வேறு ஊர்களுக்கு இலவசமாக எடுத்துச் செல்ல உதவி வருகிறோம். சாலை விபத்துகள், ரயில் மோதி நடைபெறும் விபத்துகளில் உயிரிழப்பவர்களை எடுத்துச்செல்ல உதவுவதில் அரசின் அமரர் ஊர்தி ஓட்டுநர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது.

அடையாளம் தெரியாத உடல்களை பெற்றுக்கொள்ள யாரும் இல்லாதபோது, அரசு மருத்துவமனைகளில் இருந்துமயானத்துக்கு கொண்டு செல்ல மருத்துவமனை நிர்வாகம், காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்தால் அந்த உடல்களும் இலவசஅமரர் ஊர்திகளில் கொண்டு செல்லப்படுகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

தனியாரில் கட்டணம் அதிகம்: அரசின் இந்த இலவச அமரர் ஊர்தி சேவையின் பயன் குறித்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சிலர் கூறும்போது, “வாழ்வாதாரத்துக்காக சொந்த ஊர்களைவிட்டு மக்கள் தொழில் நகரங்களுக்கு இடம்பெயர்கின்றனர்.

அவ்வாறு இடம்பெயர்ந்து வசித்து வரும் நகரத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்து உயிரிழப்போரை சொந்த மாவட்டத்துக்கு கொண்டு செல்ல தனியார் ஆம்புலன்ஸ்களை அணுகினால், ஆயிரக்கணக்கில் கட்டணம் கேட்கின்றனர். அன்றாடம் கூலி வேலைக்கு சென்றுவருவோரால் இதை அளிக்க இயலாது. அந்த இக்கட்டான நேரத்தில் அரசின் இலவச அமரர் ஊர்தி சேவை மிகவும் உதவியாக இருந்தது” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x