Published : 08 Aug 2023 03:54 PM
Last Updated : 08 Aug 2023 03:54 PM

இந்தியாவிலேயே அசத்தல் முன்முயற்சி: 2,000 பரோட்டா மாஸ்டர்களை உருவாக்கிய மதுரை பயிற்சி மையம்!

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.

மதுரை: நாட்டிலேயே முதல் முறையாக 'பரோட்டா' செய்வதற்கு பயிற்சி மையம் மதுரையில் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஐந்து ஆண்டுகளாக சத்தமில்லாமல் 2,000 பரோட்டா மாஸ்டர்கள் உருவாகி இருக்கிறார்கள்.

காணும்போதே நாவில் உமிழ்நீர் வர வைக்கும் மண் மனம் மாறாத தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளுக்கு உள்ளூர் முதல் உலக நாடுகள் வரை வரவேற்பு உண்டு. அதனாலேயே, சுற்றுலா முக்கியத்துவம் பெற்ற சிங்கப்பூர், மலேசியா போன்ற ஆசியா நாடுகள் முதல் ஐரோப்பா நாடுகள் வரை, தமிழர்களுடைய ஹோட்டல்கள் கொடிக்கட்டி பறக்கின்றன. தமிழர்கள் உலகம் முழுவதும் நிரம்பியிருப்பதுபோல் அவர்கள் விரும்பி சாப்பிடும் உணவுகளும் தற்போது விரும்பும் நாடுகளில் கிடைக்கிறது. விரும்தோம்பலுக்கு சிறப்பு பெற்ற தமிழகத்தில் உணவுக்கு சிறப்பான ஊராக மதுரை திகழ்கிறது.

நான்கு வழிச்சாலைகளில் ஒவ்வொரு ஊரையும் கடந்து செல்லும் வெளியூர் வாசிகள் சாப்பிட வண்டியை மதுரை நகருக்குள் விட்டு விரும்பிய உணவுகளை சாப்பிட்டுச் செல்லும் பழக்கம் அதிகரித்துள்ளது. அதனால், மதுரை உணவு சுற்றுலாவுக்கு தற்போது பிரபலமாகி வருகிறது. அப்படி மதுரைக்கு சாப்பிட வரும் உணவுப் பிரியர்கள் மத்தியில் தற்போது பிரபலமான உணவாக மாறியிருக்கிறது பரோட்டா. பரோட்டா அதிகமாக சாப்பிடுவது உடல் நலத்துக்குக் கெடுதல் என்று கூறப்பட்டு வந்தாலும், பரோட்டா பிரியர்களின் எண்ணிக்கை குறையவில்லை.

கரோனாவுக்குப் பிறகு மக்களுடைய அன்றாட உணவுப்பழக்கத்தில் நிறைய மாற்றங்கள் வந்துள்ளன. ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே எங்குமே செல்ல முடியாமல் இருந்த சூழலில், பலரும் பல்வேறு உணவுகளை வீட்டிலேயே முயற்சி செய்து பார்த்தனர். அதில், பாரம்பரிய உணவுகள் முதல் நவீன பாஸ்ட் புட் உணவுகள் வரை இடம்பெற்றன. அவற்றில், முக்கிய உணவு பரோட்டா. முன்னொரு காலத்தில் பரோட்டாவுக்கு கேரளாவுக்கும், அதனை ஒட்டி இருக்கும் தென்காசி மாவட்டமும்தான் பிரபலமாக இருந்தது. தற்போது அவர்களுக்கு சவாலாக மதுரையில் பன் பரோட்டா, மலபார் பரோட்டா, கொத்து பரோட்டா, வீச்சு ப்ரோட்டா, முட்டை பரோட்டா, எண்ணெய் பரோட்டா, சிலோன் பரோட்டா, நூல் பரோட்டா, வாழை இலை பரோட்டா, சில்லி பரோட்டா, ரோல் பரோட்டா போன்ற நாக்கை நாட்டியமாட வைக்கம் பல் வகை பரோட்டாக்களுக்கு மதுரை பிரபலமாகி வருகிறது.

பரோட்டா யார் வேண்டுமன்றாலும் தயார் செய்யலாம். ஆனால், அதற்கான ரெசிபி (செயற்முறை) முக்கியமானது. மென்மையாகவும், அதேநேரத்தில் சுவையாகவும் இருக்க வேண்டும். அதனால், அதை வீட்டிலேயே செய்வது சவாலானது. அதனால், பரோட்டாவைத் தயாரிக்கும் சமையல்காரர்களை பரோட்டா மாஸ்டர்கள் என்று அழைக்கிறோம். சிறந்த பரோட்டாவைச் செம்மைப்படுத்துவதற்கு பயிற்சி தேவைப்படுகிறது. மதுரை தபால் தந்தி நகரின் கலை நகரில் பரோட்டா தயாரிப்பதற்கு, இந்தியாவிலே முதல் முறையாக சத்தமில்லாமல் கடந்த 5 ஆண்டுகளாக ‘செல்ஃபி பரோட்டா ட்ரெயினிங் சென்டர்’ என்ற பயிற்சி மையத்தை உருவாக்கி நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

முகம்மது காசிம்

இந்தப் பயிற்சி மையத்தை நடத்தும் முகம்மது காசிம் கூறுகையில், ''தாத்தா காலத்தில் இருந்து ஹோட்டல் நடத்தி வருகிறோம். நான் பிஏ தமிழ் படித்துவிட்டு வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்றுவிட்டேன். மாஸ்டர்கள் கிடைக்காமல் எங்கள் ஹோட்டலை நடத்த முடியவில்லை. பிறகு நான் ஊருக்கு வந்து ஹோட்டலை எடுத்து நடத்த ஆரம்பித்தேன். ஒரு புறம் வேலைவாய்ப்பு இல்லை என்கிறார்கள், மற்றொரு புறம், மாஸ்டர்கள் இல்லாமல் ஹோட்டல்கள் தள்ளாடுகின்றன. தினசரி நாளிழ்களில் பரோட்டா மாஸ்டர்கள் தேவை என்ற விளம்பரங்களைப் பார்த்துள்ளேன்.

பொதுவாக சப்ளையர், சிறுசிறு வேலைகளை பார்த்துவிட்டு 2, 3 ஆண்டுகளுக்கு பிறகே ஹோட்டல்களில், கடைகளில் பரோட்டா மாஸ்டராக முடியும். எங்கே நம்முடைய வேலை போய்விடுமோ என்று எண்ணி, பரோட்டா எப்படி செய்ய வேண்டும் என்று மாஸ்டர்கள் கற்றுக் கொடுக்கமாட்டார்கள். கூடவே இருந்து சொல்கிற வேலையையெல்லாம் செய்து அவர்களாகவே பார்த்துக் கற்றுக் கொண்டால் உண்டு. அதனால், நாமே ஏன் மாஸ்டர்களை உருவாக்கக்கூடாது என்று முதலில் பரோட்டா மாஸ்டர்களை உருவாக்கும் பயிற்சி மையத்தை நடத்த ஆரம்பித்தேன்.

என்னுடைய இந்த மையத்தில் தமிழகம் முழுவதும் இருந்து மட்டுமில்லாது கேரளா, ஆந்திரா, உத்தரப் பிரதேசம் போன்ற வெளிமாநிலங்களில் இருந்தெல்லாம் கற்றுக்கொள்ள வருகிறார்கள். எம்பிஏ பட்டதாரிகள் முதல் பரோட்டா மாஸ்டர் பயிற்சிக்கு வருகிறார்கள். சிறப்பாக கற்றுக் கொள்வோருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுகிறோம். எனென்றால் இன்று உள்ளூர் ஹோட்டல்கள் முதல் வெளிநாடுகளில் உள்ள ஹோட்டல்கள் வரை மாஸ்டர்களுக்கு அவ்வளவு வாய்ப்புள்ளது. வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கு ஆன்லைன் வகுப்பும் எடுக்கிறோம். பரோட்டாவுடன் அதற்கான மதுரை ஸ்டைலில் கிரேவி, சால்னாவும் செய்ய கற்றுக் கொடுக்கிறோம்.

ஆரம்பத்தில் என்னுடைய இந்த முயற்சியை நண்பர்களே பரோட்டாவுக்கு கோச்சிங் சென்டரா என்றார்கள். தற்போது என்னிடம் கற்றுக் கொண்டவர்கள், பெரிய ஹோட்டல்களில் வேலைப்பார்ப்பதைப் பார்த்து கேலி செய்தவர்கள் பாராட்டுகிறார்கள். தற்போது பரோட்டா முதல் மற்ற பல்வகை தோசைகளையும், சப்பாத்திகளையும் செய்ய கற்றுக் கொடுக்கிறோம். இதுவரை 2,000 பரோட்டா மாஸ்டர்களை உருவாக்கி உள்ளோம். தற்போதைய பேட்ஜில் 25 பேர் கற்று வருகிறார்கள். பரோட்டா செய்வதற்கு எவ்வளவு நேரம் மாவை ஊற வைத்தாலும் நல்லா வீசினால் மட்டுமே மென்மையாக வரும். கிழியாமல் நல்லா வீச வேண்டும். மாவு எக்காரணம் கொண்டு ஒதுங்கவிடக்கூடாது. தேவையான அளவு முட்டை, பால் சேர்க்க வேண்டும். சோடா சேர்க்கவே கூடாது'' என்றார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x