Last Updated : 20 Jul, 2023 05:46 PM

 

Published : 20 Jul 2023 05:46 PM
Last Updated : 20 Jul 2023 05:46 PM

இசையில் அசத்தும் மதுரை மத்திய சிறைவாசிகள் - சீர்திருத்த நடவடிக்கைகளால் உற்சாகம்!

மதுரை: தமிழ்நாடு சிறைத் துறை டிஜிபியாக அமரேஷ் பூஜாரி பொறுப்பேற்ற பிறகு, சிறைத்துறையில் பல்வேறு வகை சீர்திருத்த பணிகளை மேற்கொண்டுவருவதை அடுத்து, மதுரை மத்திய சிறைக் கைதிகள் இசையில் அசத்தத் தொடங்கியுள்ளனர்.

தமிழ்நாடு சிறைத் துறை டிஜிபியாக அமரேஷ் பூஜாரி பொறுப்பேற்ற பிறகு, சிறைத் துறையில் பல்வேறு வகை சீர்திருத்த பணிகளை மேற்கொண்டுள்ளார். கால சூழலுக்கேற்ப கைதிகளுக்கு தேவையான நடவடிக்கை எடுப்பது, அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் விதமாகவும், குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சமுதாயத்தில் அவர்கள் எப்போதும் போன்று இணைவது முக்கியம் என்ற அடிப்படையில் விதவிதமான தொழில் பயிற்சிகளும் சட்டத்திற்கு உட்பட்டு அளிக்கப்படுகின்றன. அந்த வகையில் தற்போது கல்வி, ஓவியம், இசை போன்ற துறைகளிலும் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் கைதிகளை ஊக்கப்படுத்துகின்றனர். சமீப காலமாக ஒரு குழுவினர் இசை கருவிகளை வாசிக்க கற்றுக்கொண்டு அதில் அசத்துகின்றனர்.

இது குறித்து சிறைத் துறை டிஐஜி பழனி, கண்காணிப்பாளர் பரசுராமன் கூறியது: ''சிறைச் சாலை என்பது தண்டனை அளிக்கும் இடமாக இன்றி மறுவாழ்வு மையமாக இருக்கவேண்டும் என்பதில் டிஜிபி அமரேஷ் பூஜாரி மிக முனைப்புடன் பல்வேறு செயல்திட்டங்களை செயல்படுத்துகிறார். கல்லூரி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து சான்றிழுடன் கூடிய கணினி பயிற்சி, ரெடிமேட் ஆடைகள் தயாரித்தல், மரம், இரும்பு வேலைபாடுகள், வீட்டு உபயோககம், உணவுப் பொருட்கள் தயாரித்தல் போன்ற தொழிற்பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

இதன் மூலம் சிறையில் இருந்து வெளியே சென்ற பின் கைதிகளின் வாழ்வாதாரத்திற்கு உதவிகரமாக இருக்கும். பெண்கள் சிறையிலுள்ள சிறைவாசிகளுக்கு இஞ்சி ஊறுகாய் பூண்டு ஊறுகாய் தக்காளி ஊறுகாய் நார்த்தங்காய் ஊறுகாய், நெல்லிக் காய் ஊறுகாய், எலுமிச்சை ஊறுகாய், மாங்காய் ஊறுகாய், இட்லி பொடி, சுக்கு பொடி, வெண்டைக்காய் வத்தல், பொட்டுக்கடலை மாவு உருண்டை, நிலக்கடலை உருண்டை, மோர் வத்தல், குலோப் ஜாமூன், இட்லி மாவு தயாரித்தல், இனிப்பு வகைகள் தயாரித்தல் போன்ற குடிசைத் தொழிலுக்கான பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது.

இதனிடையே, சிறைக்குள் இருக்கும்போது, அவர்களது மனநிலையை ஒருநிலைப்படுத்தி மாற்றும் வகையில் இசை , விளையாட்டு பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. இதற்காக அனைத்து மத்திய சிறைகளுக்கும் போதிய இசைக் கருவிகள், விளையாட்டு உபகரணங்களும் கொள்முதல் செய்வதற்கு ஆணை பிறக்கப்பட்டது.

மதுரை மத்திய சிறை கைதிகளுக்கென சுமார் ரூ.2 லட்சம் மதிப்பில் இசைக் கருவிகள் வாங்கப்பட்டுள்ளன. விருப்பமுள்ள தகுதியான சிறைவாசிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் இசைப்பயிற்சி வழங்கப்படுகிறது. தலைமைக் காவலர் ஜெரால்ட் அலோசியஸ், இசை பயிற்றுனர் சாமுவேல் இலவச இசை பயிற்சி அளிக்கின்றனர்.

சமீபத்தில் மதுரை மத்திய சிறைக்கு 'ஆப்கா' என்ற பயிற்சி மையத்தில் இருந்து வந்த அகில இந்திய சிறைதுறை குழுவினர் சிறைவாசிகளின் இசை பயிற்சி மற்றும் வாசிப்பு, பாடுவதை கேட்டு குழுவினர் பாராட்டினர்.

மேலும், மத்திய சிறைகளுக்குள் இசை, ஓவியம், விளையாட்டு போட்டிகளும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கைதிகள் தயாரிக்கும் பொருட்கள் சிறைக்கான அங்காடியிலும், ஆர்டர் அடிப்படையில் வெளியிலும் விற்கப்படுகின்றன, தேவையைப் பொறுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு மர சேர், மேசைகள், இரும்பு தளவாடங்களும் தயாரித்து வழங்கப்படுகிறோம்'' என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x