Published : 10 Jun 2023 02:32 PM
Last Updated : 10 Jun 2023 02:32 PM

நெல்லையப்பர் கோயிலில் தேவாரப் பாடல்கள் இடம்பெற்ற அரிய ஓலைச் சுவடிகள் கண்டுபிடிப்பு

நெல்லையப்பர் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறையின் சுவடிகள் நூலாக்கத் திட்டப்பணிக் குழுவினர் கண்டறிந்த 13 அரிய ஓலைச்சுவடி கட்டுகள்

மதுரை: கோயில்கள், மடங்களில் இருக்கும் அரிய ஓலைச் சுவடிகளைத் தேடித் திரட்டி, பராமரித்து பாதுகாக்கும் பணியோடு நூலாக்கும் வகையில் ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு பராமரிப்பு நூலாக்கத் திட்டப் பணி குழுவை தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை அமைத்துள்ளது.

இத்திட்டப்பணி ஒருங்கிணைப்பாளராக சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவன சுவடியியல் துறை பேராசிரியர் சு.தாமரைப்பாண்டியன் தலைமையில் 12 பேர் கொண்ட சுவடிக்குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். இக்குழுவினர் இந்து சமய அறநிலையத் துறையின் கீழுள்ள 46,020 கோயில்களில், கடந்த 11 மாதங்களில் 232 கோயில்களில் கள ஆய்வு செய்து முடித்துள்ளனர். இதன் மூலம் சுருணை ஏடுகள் சுமார் 1,80,612-ம், இலக்கியச் சுவடிக்கட்டுகள் 348 (ஏடுகள் சுமார் 33,000), தாள் சுவடிகள் 5-ம் கண்டறிந்துள்ளனர்.

இந்நிலையில் இச்சுவடித் திட்டப் பணிக் குழுவினர் சு.தாமரைப்பாண்டியன் தலைமையில் சுவடியியலாளர்கள் ரா.சண்முகம், க.சந்தியா, நா. நீலகண்டன், மா.பாலசுப்பிரமணியன் ஆகியோர் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் கள ஆய்வு செய்தபோது, சில அரிய ஓலைச்சுவடிகளைக் கண்டறிந்தனர்.

நெல்லையப்பர் கோயிலில் திருஞானசம்பந்தரின் அரிய ஓலைச்சுவடிகளை கண்டறிந்த இந்து சமய அறநிலையத்துறையின் சுவடிகள் நூலாக்கத் திட்டப்பணிக்குழுவினர்.

இதுகுறித்து திட்டப் பணியின் ஒருங்கிணைப்பாளர் சு.தாமரைப்பாண்டியன் கூறியது: “திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலில் கோயில் நிர்வாகம் பாதுகாத்து வந்த 10 செப்புப் பட்டயங்களைக் கண்டறிந்தோம். பின்னர் கிரந்த எழுத்து வடிவில் அமைந்த வேணுவ நாத ஸ்தல புராணம், சைவ அக்னி காரியம், ஸ்ரீ சக்கர பிரஷ்டா விதி, அபஸ்தம்ப அமரம், ஸ்ரீ சக்ர பூஜை, சைவ சந்நியாசி விசயம், வேணுவ நாத லீலா, வைசாக புராணம், சங்காபிஷேக விதி, நித்திய பூஜாவிதி, க்‌ஷிரா அபிஷேக விதி, சகஸ்த நபணம் ஆகிய 12 ஓலைச்சுவடிக் கட்டுகள் கிடைத்தன.

மேலும் 2 அரிய தாள் சுவடிகள் கிடைத்தன. அதில் திருஞானசம்பந்தர் அருளிச் செய்த முதல் மூன்று திருமுறைகள் அடங்கிய தேவாரப் பாடல்கள் இருந்தன. சுவடியின் தொடக்கப் பக்கத்தில் ‘தோடுடைய செவியன்...’ எனும் பாடல் எழுதப்பட்டுள்ளது. சுவடியில் சுவடியைப் பிரதி செய்தவர், பிரதி செய்யப்பட்ட காலம் பற்றிய குறிப்புகள் இல்லை. சுவடியின் எழுத்தமைதி மூலம் சுவடிப் பிரதி செய்யப்பட்ட காலம் சுமார் 200 ஆண்டுகள் இருக்கலாம் என்று அறிய முடிகிறது. சுவடியில் மொத்தம் 281 ஏடுகள் உள்ளன. சுவடியின் இறுதியில் ‘திருஞானசம்பந்தரான ஆளுடைய பண்டாரத்தின் மூன்றாம் திருமுறை முற்றும் ஆக திருக்கடைக்காப்பு 383, பூமிநாத சுவாமி பாதாரவிந்தமே கெதி, நமச்சிவாய மூர்த்தி என்ற குறிப்பு உள்ளது. சுவடியைப் பூச்சிகள் ஏதும் அரிக்கவில்லை.

நல்ல நிலையில் உள்ளன. சுவடியை முழுமையாக ஆய்வு செய்தால் திருஞானசம்பந்தரின் பாடல்களை ஒப்பு நோக்கிப் பாடபேதம் நீக்கிச் செம்பதிப்பு நூல் கொண்டு வர துணை செய்யும். இக்கோயிலில் கண்டறியப்பட்ட பட்டயங்களை ஆராயும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் கோயிலில் உள்ள சுவடிகளைப் பராமரித்து, அட்டவணைப்படுத்தும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x