Published : 10 Jun 2023 01:08 PM
Last Updated : 10 Jun 2023 01:08 PM

‘சங்கீதா போகத்தை பிரிஜ் பூஷன் வீட்டுக்கு அழைத்துச் சென்றது அதிர்ச்சி அளிக்கிறது...’ - விசாரணை கோரும் திரிணமூல் காங்கிரஸ்

சங்கீதா போகத் | கோப்புப்படம்

புதுடெல்லி: பாலியல் துன்புறுத்தல் குற்றத்தை எப்படிச் செய்தார் என்பதை விவரித்துக் காட்டும் பொருட்டு வீராங்கனை சங்கீதா போகத்தை குற்றம்சாட்டப்படுள்ள பிரிஜ் பூஷன் வீட்டிற்கு டெல்லி போலீஸ் அழைத்துச் சென்ற சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

போலீஸாரின் இந்த நடவடிக்கை அதிர்ச்சி அளிப்பதாகவும், புரிந்துகொள்ள முடியாததாகவும் இருப்பதாக திரிணமூல் காங்கிரஸ் சனிக்கிழமை குற்றம்சாட்டியுள்ளது.

டெல்லி போலீஸாரின் இந்த நடவடிக்கை குறித்தும், இதில் தொடர்புடைய அதிகாரிகள் மீதும் உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவி ஸ்வாதி மாலிவாலை திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சாகேத் கோகலே வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், "பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி பாதிக்கப்பட்டுள்ள ஒரு நபரை, குற்றஞ்சாட்டப்பட்டவரின் வீட்டிற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றிருக்கும் டெல்லி போலீஸாரின் நடவடிக்கை புரிந்துகொள்ள முடியாததாகவும், அதிர்ச்சி அளிப்பதாகவும் உள்ளது. நடந்த நிகழ்வுகளை மீண்டும் நடித்துக் காட்டச் சொல்வதற்கு இது ஒரு கொலை குற்றச் சம்பவம் இல்லை. அதுபோன்ற நிழ்வுகளுக்குத் தான் இதுபோன்ற நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.

மேலும், பாலியல் சீண்டலை எப்படிச் செய்தார் என்பதை மீண்டும் விவரித்துக் காட்டச் சொல்லிய இந்த நடவடிக்கையின் மூலம், டெல்லி காவல்துறை சங்கீதா போகத்தின் மனதில் அவருக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல் அதிர்ச்சியை மீள்உருவாக்கம் செய்துள்ளது. இது பாலியல் துன்புறுத்தலினால் பாதிக்கப்பட்ட அவரின் அடிப்படை உரிமைகளை மீறும் ஒரு செயலாகும்.

இதன் மூலமாக, புகார்தாரர், துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டவரின் மனதில் ஓர் அச்ச உணர்வினை ஏற்படுத்தும் ஒரு செயலை டெல்லி போலீஸ் உருவாக்க முயற்சி செய்வது தெளிவாகிறது. பாலியல் துன்புறுத்தல் குற்றம்சாட்டப்பட்டு அதற்காக இன்னும் கைது செய்யப்படாத ஒருவரின் வீட்டிற்கு அவரால் பாதிக்கப்பட்ட ஒருவரை அழைத்துச் சென்றிருப்பதன் மூலம் இந்த உண்மை உறுதியாகியிருக்கிறது". இவ்வாறு சாகேத் கோகலே தெரிவித்துள்ளார்.

பிரிஜ் பூஷன் மறுப்பு: முன்னதாக, பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு சம்பவ நிகழ்வுகள் மீண்டும் விவரித்துக் காட்டுவதற்தாக இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷனின் டெல்லி வீட்டிற்கு, வீராங்கனை சங்கீதா போகத் வெள்ளிக்கிழமை மதியம் அழைத்துச் செல்லப்பட்டார் என இதுகுறித்து விபரம் அறிந்தவர்கள் தெரிவித்ததாக செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்திருந்தது.

அதில், வெள்ளிக்கிழமை மதியம் 1.30 மணியளவில் பெண் போலீஸ் அதிகாரிகள் சங்கீதா போகத்தை பிரிஜ் பூஷன் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அவர்கள் அங்கு அரை மணிநேரம் இருந்தனர். அப்போது சங்கீதாவுக்கு செய்யப்பட்ட துன்புறுத்தல்களை விவரிக்குமாறு பிரிஜ் பூஷனை போலீஸார் கேட்டுக்கொண்டனர் என்று தெரிவித்திருந்தது.

ஆனால் இந்த செய்திக் குறிப்பை பாஜக எம்பியும், மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சிங் மறுத்துள்ளார். அவர், "நான் என் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தேன். அப்போது யாரும் என் வீட்டிற்கு வரவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x