

மம்தா பானர்ஜி | கோப்புப் படம்
கொல்கத்தா: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் அமல்படுத்தப்படாதிருந்தால் மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டிருக்கும் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
வாக்காளர் பட்டியல் சிறப்ப தீவிர திருத்தத்தை (எஸ்ஐஆர்) தொடக்கத்தில் கடுமையாக எதிர்த்தவர் மம்தா பானர்ஜி. எனினும், பின்னர் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு எதிர்ப்பைக் கைவிட்டார்.
இந்நிலையில், முர்ஷிதாபாத் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய முதல்வர் மம்தா பானர்ஜி, “எஸ்ஐஆர் அமல்படுத்தப்படாதிருந்தால் மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டிருக்கும். வாக்களிப்பு இல்லாமல் இதைச் செய்திருப்பார்கள். அமித் ஷாவின் தந்திரம் உங்களுக்குப் புரிகிறதா?. நாங்கள் அவ்வளவு முட்டாள்கள் இல்லை. நாங்கள் அதைச் செய்வோம், போராடுவோம், வெற்றி பெறுவோம். எஸ்ஐஆர் குறித்து நீங்கள் (மக்கள்) அச்சம் கொள்ள வேண்டாம். நீங்கள் உங்கள் ஆவணங்களைச் சமர்ப்பியுங்கள்.” என தெரிவித்தார்.
அதேநேரத்தில், தேசிய குடிமக்கள் பதிவேட்டை மேற்கு வங்கத்தில் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்றும் அவர் கூறினார். “தேசிய குடிமக்கள் பதிவேட்டை (என்ஆர்சி) நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். அதிர்ஷ்டவசமாக நான் மேற்கு வங்கத்தின் பிர்பும்மில் பிறந்தேன். இல்லாவிட்டால், என்னையும் அவர்கள் வங்கதேசத்தவர் எனக் கூறி இருப்பார்கள். என்ஆர்சி-யை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். அவர்கள் என் கழுத்தை அறுத்தாலும், இங்கே எந்த தடுப்பு முகாமையும் உருவாக்க நான் விடமாட்டேன். யாரையும் நான் வெளியேற்றவும் மாட்டேன்.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6ம் தேதி மத நல்லிணக்க நாளாகக் கொண்டாடப்படுகிறது. இதில், அனைத்து மத மக்களும் பங்கேற்கிறார்கள். பெரும்பான்மையினர், சிறுபான்மையினரைப் பாதுகாப்பார்கள். அதுதான் விதி. வங்கம் அனைத்து மதங்களையும் மதிக்கிறது. அதேநேரத்தில், அது வகுப்புவாத சக்திகளை ஏற்றுக்கொள்ளாது.” எனத் தெரிவித்தார்.
முர்ஷிதாபாத்தில் பாபர் மசூதி கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்படும் என அறிவித்திருந்த திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ ஹூமாயுன் கபிர், கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதை சுட்டிக்காட்டிப் பேசிய மம்தா பானர்ஜி, “ஒவ்வொரு மதத்திலும் துரோகிகள் இருக்கிறார்கள். சில துரோகிகள், பாஜகவின் பணத்தைப் பயன்படுத்தி வகுப்புவாத பதற்றங்களைத் தூண்டுகிறார்கள். கலவர அரசியலை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என தெரிவித்தார்.