“துர்கா பூஜை காலத்தில் அசைவம் உண்பது சர்ச்சைக்குரியது அல்ல” - மேற்கு வங்க அமைச்சர்

“துர்கா பூஜை காலத்தில் அசைவம் உண்பது சர்ச்சைக்குரியது அல்ல” - மேற்கு வங்க அமைச்சர்
Updated on
1 min read

கொல்கத்தா: துர்கா பூஜை காலத்தில் அசைவ உணவு உண்பது சர்ச்சைக்குரிய விஷயம் அல்ல என்று மேற்கு வங்க அமைச்சர் திலிப் கோஷ் தெரிவித்துள்ளார்.

துர்கா பூஜையின்போது அசைவ உணவை மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் தவிர்க்க வேண்டும் என்று பாகேஷ்வர் கோயிலின் தலைமை அர்ச்சகர் தீரேந்திர சாஸ்திரி கூறி இருந்த நிலையில், அமைச்சரின் இந்த கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.

பாகேஷ்வர் பாபா என்று பிரபலமாக அறியப்படும் சாமியார் தீரேந்திர சாஸ்திரி, ‘துர்கா பூஜை கொண்டாட்டங்களின்போது மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் அசைவ உணவைத் தவிர்க்க வேண்டும். மத நிகழ்வுகளின்போது இறைச்சி உண்பவர்கள் பாசாங்கு செய்பவர்கள்’ என்று விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், தீரேந்திர சாஸ்திரியின் கருத்து குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த மேற்கு வங்க அமைச்சர் திலிப் கோஷ், “துர்கா பூஜையின்போது ஆடு பலி கொடுக்கும் பாரம்பரியம் மேற்கு வங்கத்தில் உள்ளது. அது பிரசாதமாக உட்கொள்ளப்படுகிறது.

இங்கு ஆட்டு இறைச்சி என்பது சர்ச்சைக்குரிய விஷயமல்ல. நான் மீன் சாப்பிடுகிறேன். வேறு இறைச்சி சாப்பிடுவதில்லை. ஆனால், யார் எதைச் சாப்பிட விரும்புகிறார்களோ அவர்கள் அதைச் சாப்பிடுவது அனுமதிக்கப்பட வேண்டும்.

தீரேந்திர சாஸ்திரி கூறியது அவரது கருத்து. துறவிகள் தங்கள் சொந்தக் கண்ணோட்டத்தில் பேசுகிறார்கள். சைவ உணவு ஆரோக்கியத்துக்கு நல்லது என்று கூறுகிறார்கள். ஆனால், மேற்கு வங்கத்தில் பல வகையான வழிபாட்டு முறைகளுடன் அசைவ உணவு நீண்ட காலமாக இருந்து வருகிறது.

நாடு இருக்கும் வரை அன்னை காளி ஆட்டு இறைச்சியை உண்பார் என்றும் சிவன் உடுக்கையை வாசிப்பார் என்றும் சுவாமி விவேகானந்தர் கூறி இருக்கிறார்.

மக்களின் உணவுத் தேர்வை கட்டுப்படுத்த முந்தைய திரிணமூல் காங்கிரஸ் அரசு முயன்றது. வங்கத்தில் இப்போது உண்மையான துர்கா பூஜை என்று எதுவும் இல்லை. கருப்பொருள்கள் (themes) மற்றும் பிற விஷயங்களின் பெயரால் அனைத்தும் பாழாக்கப்பட்டுவிட்டன. வங்கத்து மக்கள் தங்கள் சொந்த கலாச்சாரத்தையே மறந்துவிட்டார்கள்.

அரசுப் பணத்தைக் கொண்டு பூஜை நடத்த வேண்டும் என்றால், அப்படி ஒரு பூஜையே நடத்த வேண்டாம். சமூகமே பூஜையை நடத்திக்கொள்ளும். நாட்டு மக்களிடம் பணத்துக்கு பஞ்சமில்லை. மக்களிடம் நல்லெண்ணம் இருக்கிறது. அரசியல்வாதிகள்தான் பிரச்சினைகளை உருவாக்குகிறார்கள்.” என தெரிவித்தார்.

“துர்கா பூஜை காலத்தில் அசைவம் உண்பது சர்ச்சைக்குரியது அல்ல” - மேற்கு வங்க அமைச்சர்
விநாயகர் சதுர்த்திக்காக இடைத்தேர்தலை ஒத்திவைக்க இந்து முன்னணி கோரிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in