புதுடெல்லி: லடாக்கின் அமைதி, ஸ்திரத்தன்மை, பரஸ்பர நம்பிக்கை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு சோனம் வாங்சுக்கின் தடுப்புக் காவல் உடனடியாக ரத்து செய்யப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘‘லடாக்கின் லே நகரில் செப்டம்பர் 24, 2025 அன்று எழுந்த கடுமையான சட்டம் ஒழுங்கு சூழலின் பின்னணியில், பொது ஒழுங்கைப் பராமரிக்கும் நோக்கில், லே மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவின்படி, தேசிய பாதுகாப்புச் சட்ட விதிகளின் கீழ் சோனம் வாங்சுக் செப்டம்பர் 26, 2025 அன்று கைது செய்யப்பட்டார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, இதன் முழு சிறைவாச காலத்தில் கிட்டத்தட்ட பாதியை சோனம் வாங்சுக் ஏற்கெனவே அனுபவித்துவிட்டார்.
லடாக் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றி கவலைகளை நிவர்த்தி செய்யும் நோக்கில், லடாக்கில் உள்ள பல்வேறு தரப்பினருடனும், சமூகத் தலைவர்களுடனும் அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இருப்பினும், கடுமையான போராட்டங்கள் சமூகத்தின் அமைதியை குலைப்பதோடு, மாணவர்கள், வேலை தேடுபவர்கள், வணிகங்கள், சுற்றுலாப் பயணிகள் உட்பட ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் மோசமாக பாதிக்கிறது.
லடாக்கில் அமைதி, நிலைத்தன்மை, பரஸ்பர நம்பிக்கை நிறைந்த சூழல் ஆகியவற்றை வளர்ப்பதற்கு அரசு உறுதிபூண்டுள்ளது. இது அனைத்து தரப்பினருடனும் ஆக்கபூர்வமான அர்த்தமுள்ள உரையாடலை எளிதாக்குகிறது. இந்த நோக்கத்தை மேம்படுத்தும் விதமாகவும், உரிய பரிசீலனைக்குப் பிறகும், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி சோனம் வாங்சுக்கின் காவலை உடனடியாக ரத்து செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
லடாக்கிற்கு தேவையான அனைத்து பாதுகாப்பையும் வழங்குவதற்கான தனது உறுதிப்பாட்டை அரசு மீண்டும் உறுதிப்படுத்துகிறது. உயர் அதிகாரக் குழுவின் வழிமுறைகள், பிற பொருத்தமான தளங்கள் உட்பட, ஆக்கபூர்வமான உரையாடல்கள் மூலம் லடாக் பிராந்தியம் தொடர்பான பிரச்சினைகள் தீர்க்கப்படும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.