Published : 06 Oct 2017 04:39 PM
Last Updated : 06 Oct 2017 04:39 PM

ஒரே நேரத்தில் 3அரசுப் பணிகளில் இருந்து மோசடி செய்த பால்மீகி: விஜிலன்ஸ் விசாரணை

ஜிடிபி வீழ்ச்சியால் நாட்டில் பலர் வேலையிழந்து கொண்டிருக்க, புத்திசாலியான மனிதர்(!) ஒருவர்,  ஒன்றல்ல, மூன்று அரசு வேலைகளைக் கையில் வைத்திருந்தது உங்களுக்குத் தெரியுமா? தற்போது அவர் மோசடி செய்த குற்றத்தின் கீழ் விசாரணையில் இருக்கிறார்.

கொல்கத்தா துறைமுக அறக்கட்டளையின் ஊழியர் கோபால் பால்மீகி. தன்னுடைய 16 வருட வேலையில் இரண்டு முறை பதவி உயர்வு பெற்றவர். மார்ச் 2016-ல் 6 நாட்கள் விடுமுறையில் செல்வதாகக் கூறினார். அதுதான் அங்குள்ள ஊழியர்கள் அவரைக் கடைசியாகப் பார்த்தது. அதைத்தொடர்ந்து அவர், தன்னுடைய ராஜினாமாக் கடிதத்தை அனுப்பினார்.

கொல்கத்தா துறைமுக அறக்கட்டளையினர் அவரைத் தேடும் பணியை ஆரம்பித்தனர். தொடர்ச்சியான தேடுதலுக்குப் பிறகு, செப்.5, 2016-ல் பாதுகாப்பு அமைச்சகத்தில் பால்மீகி மற்றொரு பணியில் இருப்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து சிபிஐ அவரின் மேல் வழக்கு பதிவு செய்தது. அப்போது நடந்த விசாரணையில் கோபால் பால்மீகி என்பவர் உண்மையில் போபால் பால்மீகி என்பது தெரியவந்தது. கொல்கத்தா பணியின்போது அவர் தன்னுடைய பெயரை கோபால் என்று மாற்றிக் கொண்டது தெரியவந்தது.

பாதுகாப்புத் துறை அமைச்சகத்தில் இருந்த போபாலின் புகைப்படம், கொல்கத்தா துறைமுக அறக்கட்டளையில் பணிபுரிந்த கோபாலின் படத்தோடு ஒத்துப்போனது.

அத்துடன் கோபால், போபால் இருவரின் தந்தை பெயரும் ஒன்றாகவே இருந்தது. இருவரின் நிரந்தர முகவரியும் ஒரேபோல இருந்தது. இதையடுத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

விஜிலன்ஸ் விசாரணை நடந்துகொண்டிருந்தபோதே மற்றொரு கோபால் பால்மீகி இருந்தது தெரியவந்தது. அவர் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இருந்து 2016 டிசம்பரில் ஓய்வு பெற்றதாக ஆவணங்கள் கூறின. இதனால் பால்மீகி மீதான விசாரணை வளையம் இறுகியது. இதையடுத்து பால்மீகி ஒரு மோசடிப் பேர்வழி என்பது தெளிவானது.

இதுகுறித்து விஜிலன்ஸ் துறை அளித்துள்ள அறிக்கையில், ''ஒருவேளை கொல்கத்தா துறைமுக அறக்கட்டளை பால்மீகியின் ராஜினாமாக் கடிதத்தை ஏற்றுக் கொண்டிருந்தால், நிச்சயம் மூன்று அரசுத் துறைகளில் இருந்தும் அவருக்கு ஓய்வூதியப் பலன்கள் கிடைத்திருக்கும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x