Published : 11 May 2023 04:27 PM
Last Updated : 11 May 2023 04:27 PM

தமிழகத்தைச் சேர்ந்த டிஎஸ் சிவஞானம் கொல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்பு

கொல்கத்தா: தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி டிஎஸ் சிவஞானம் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இன்று பதவியேற்றார்.

தமிழகத்தைச் சேர்ந்த டிஎஸ் சுப்பையா - நளினி தம்பதியரின் மகனான டிஎஸ் சிவஞானம் சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பிஎஸ்சி பட்டமும் மெட்ராஸ் சட்டக் கல்லூரியில் பிஎல் சட்டப் படிப்பும் முடித்தவர். சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியைத் தொடங்கிய சிவஞானம், கடந்த 2009ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். பின்னர் 2011-ம் ஆண்டு நிரந்தர நீதிபதியாக பொறுப்பேற்ற அவர், கடந்த 2021ம் ஆண்டு கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், நாட்டின் மிகப் பழமையான உயர் நீதிமன்றமான கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக டிஎஸ் சிவஞானம் இன்று(மே 11) பதவியேற்றார். முதல்வர் மம்தா பானர்ஜி முன்னிலையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆளுநர் ஆனந்த போஸ், அவருக்குப் பதிவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி, சபாநாயகர் பீமன் பேனர்ஜி, மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில், கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதிகள், டிஎஸ் சிவஞானத்தின் குடும்ப உறுப்பினர்கள், மெட்ராஸ் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். பதவியேற்புக்குப் பிறகு உரையாற்றிய தலைமை நீதிபதி டிஎஸ் சிவஞானம், "மேற்கு வங்க மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கும் உறுதியுடன் பாடுபடுவேன்" என தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x