Published : 09 May 2023 07:21 AM
Last Updated : 09 May 2023 07:21 AM

ராஜஸ்தானில் வீட்டின் மீது விமானம் விழுந்து நொறுங்கி 2 பெண் உட்பட 3 பேர் உயிரிழப்பு

கோப்புப்படம்

ஹனுமன்கர்: ராஜஸ்தான் மாநிலம் சூரத்கர் விமானப் படை தளத்தில் இருந்து வழக்கம்போல் பயிற்சிக்காக நேற்று காலை விமானப் படைக்கு சொந்தமான மிக்-21 ரக போர் விமானம் புறப்பட்டு சென்றது.

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் விமானத்தைத் தரையிறக்க முடியாமல் பைலட், பாராசூட் மூலம் விமானத்தில் இருந்து கீழே குதித்து லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

கட்டுப்பாட்டை இழந்த அந்த விமானம் ஹனுமன்கர் மாவட்டம் பக்லோக்நகர் என்ற கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் மீது பயங்கர சத்தத்துடன் விழுந்து நொறுங்கியது. இதில் அந்த வீட்டின் அருகே இருந்த 2 பெண்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.

பயங்கர சத்தம் கேட்டு அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு சம்பவ இடத்துக்கு ஓடி வந்தனர். சம்பவம் அறிந்ததும், போலீஸாரும், தீயணைப்புப் படை வீரர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வீட்டுக்கு அருகே சிதறிய விமானத்தின் பாகங்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த விமானப் படை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x