Published : 28 Apr 2023 05:47 PM
Last Updated : 28 Apr 2023 05:47 PM

தொழில்நுட்பத்தை ஜனநாயகப்படுத்த அரசு தொடர்ந்து பாடுபடுகிறது: பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி

புதுடெல்லி: தொழில்நுட்பத்தை ஜனநாயகப்படுத்த மத்திய அரசு தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நாட்டில் பண்பலை இணைப்பை மேம்படுத்துவதற்காக 91 புதிய 100 வாட்ஸ் பண்பலை டிரான்ஸ்மிட்டர்களை பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், "அகில இந்திய வானொலியின் 91 பண்பலை டிரான்ஸ்மிட்டர்கள் தொடங்கப்பட்டிருப்பது, 85 மாவட்டங்களில் உள்ள 2 கோடி மக்களுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய பரிசு. மனதின் குரல் நிகழ்ச்சி தனது 100-வது அத்தியாயத்தை வரும் ஞாயிற்றுக்கிழமை எட்ட உள்ளது.

அந்த வகையில், வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர் என்பதில் நான் கூடுதல் மகிழ்ச்சி அடைகிறேன். நாட்டு மக்களுடனான இத்தகைய உணர்வுபூர்வமான இணைப்பு வானொலியால் மட்டுமே சாத்தியமானது. வானொலி மற்றும் மனதின் குரல் வாயிலாக நாட்டின் ஆற்றலுடனும், நாட்டு மக்களிடையே கடமையின் கூட்டு சக்தியுடனும் என்னால் இணைய முடிந்தது.

தூய்மை இந்தியா, பெண் குழந்தைகளைக் காப்போம்; பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் மற்றும் அனைத்து வீடுகளிலும் மூவர்ணக் கொடி போன்ற முன்முயற்சிகளில் இந்த நிகழ்ச்சியின் பங்களிப்பு மிக முக்கியமானது. ஒரு வகையில், அகில இந்திய வானொலி குழுவில் நானும் அங்கம் வகிக்கிறேன். இதுவரை இந்த வசதி மறுக்கப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் அரசின் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதில் 91 பண்பலை டிரான்ஸ்மிட்டர்களின் துவக்கம் முக்கிய இடம் வகிக்கும். தொலைதூரத்தில் இருப்பதாக கருதப்பட்டவர்கள், பெரிய அளவில் ஒன்றிணைவதற்கான வாய்ப்பை தற்போது பெறுவார்கள். முக்கியமான தகவல்களை உரிய நேரத்தில் தருவது, வேளாண் நடைமுறைகளுடன் தொடர்புடைய வானிலை அறிவிப்புகள், விவசாயிகளுக்கு உணவு மற்றும் காய்கறிகளின் விலை குறித்த தகவல்கள், வேளாண்மையில் ரசாயனங்களின் பயன்பாட்டால் ஏற்படும் இழப்பு குறித்த விவாதங்கள், விவசாயத்திற்கான மேம்பட்ட இயந்திரங்களை சேர்த்தல், புதிய சந்தை நிலவரங்கள் பற்றி மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தெரிவித்தல், இயற்கை பேரிடரின் போது ஒட்டுமொத்த சமூகத்திற்கும் உதவுதல் போன்றவற்றோடு, பொழுதுபோக்கு அம்சங்களையும் பண்பலைகள் வழங்கி வருகின்றன.

தொழில்நுட்பத்தை ஜனநாயகப்படுத்துவதற்காக அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது. இந்தியா தனது முழு திறனையும் வெளிப்படுத்தி வளர வேண்டும் என்றால் வாய்ப்பு குறைவாக உள்ளது என்று இந்தியர் ஒருவரும் கருதாமல் இருப்பது அவசியம். நவீன தொழில்நுட்பத்தை மலிவான விலையில், அணுகக் கூடியதாகச் செய்வது இதற்கு அவசியம். இதை கருத்தில் கொண்டே, அனைத்து கிராமங்களிலும் ஒளியிழை வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அதோடு, தகவல்களை சுலபமாகப் பெறுவதற்கு தரவு கட்டணம் குறைக்கப்பட்டிருக்கிறது. கிராமங்களில் டிஜிட்டல் தொழில்முனைவிற்கு இது புதிய உத்வேகத்தை அளித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக நாட்டில் ஏற்பட்டு வரும் தொழில்நுட்ப புரட்சி, வானொலியை, குறிப்பாக பண்பலையை புதிய வடிவத்தில் உருமாற்றியிருக்கிறது. பாட்காஸ்ட் மற்றும் இணைய வழி பண்பலை சேவை வாயிலாக வானொலி புத்துயிர் பெற்றிருக்கிறது. டிஜிட்டல் இந்தியா, வானொலிக்கு புதிய நேயர்களை ஏற்படுத்தித் தந்திருப்பதோடு, புதிய சிந்தனையையும் புகுத்தியுள்ளது. இதே புரட்சியை காணொளியின் ஒவ்வொரு ஊடகத்திலும் காண முடிகிறது. உலகம் பற்றிய நிகழ் நேர தகவல்களை கோடிக்கணக்கான கிராமப்புற மற்றும் எல்லைப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு அளிக்கும் நாட்டின் மிகப்பெரிய டிடிஹெச் தளமான தூர்தர்ஷன் இலவச டிஷ் சேவை, 4 கோடியே 30 லட்சம் வீடுகளுக்கு வழங்கப்படுகிறது.

பல தசாப்தங்களாக வசதி மறுக்கப்பட்ட பிரிவினருக்கு கல்வியும், பொழுதுபோக்கும் தற்போது சென்றடைகிறது. சமூகத்தின் பல்வேறு பிரிவினரிடையே உள்ள ஏற்றத்தாழ்வுகளை நீக்கி அனைவருக்கும் தரமான தகவல்களை வழங்க இது வழிவகை செய்துள்ளது. ஒன்றுக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களின் கல்வி படிப்புகளை நேரடியாக இல்லங்களுக்கு கொண்டு செல்வதற்கு ஏதுவாக டிடிஹச் சேனல்களில் பல்வேறு வகையான பாடப் பிரிவுகள் இடம்பெற்றுள்ளன. நாட்டிலுள்ள கோடிக்கணக்கான மாணவர்களுக்கு, குறிப்பாக கோவிட் காலகட்டத்தில் இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

பண்பலை ஒலிபரப்பு அனைத்து மொழிகளிலும், குறிப்பாக 27 கிளை மொழிகள் உள்ள பிராந்தியங்களில் ஒலிபரப்பப்படும். இந்த இணைப்பு, தொலைத்தொடர்பு கருவிகளை மட்டுமல்லாது, மக்களையும் இணைக்கிறது. இந்த அரசின் பணி கலாச்சாரத்தை இது பிரதிபலிக்கிறது. கலாச்சார இணைப்பையும், அறிவுசார் இணைப்பையும் நமது அரசு வலுப்படுத்தி வருகிறது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள புனித மற்றும் ஆன்மிக தலங்கள் புதுப்பிக்கப்பட்ட பிறகு அங்கு சுற்றுலா அதிகரித்திருக்கிறது. இது கலாச்சார இணைப்பு மேம்பட்டிருப்பதை உணர்த்துகிறது. பழங்குடி சுதந்திரப் போராட்ட வீரர்களை மையமாகக் கொண்ட அருங்காட்சியகங்கள், பாபாசாகேப் அம்பேத்கரின் பஞ்சதீர்த்தங்கள், பிரதமர்கள் அருங்காட்சியகம் மற்றும் தேசிய போர் நினைவுச் சின்னம் ஆகியவை, அறிவுசார் மற்றும் உணர்வுப் பூர்வ இணைப்பிற்கு புதிய பரிமாணங்களை வழங்குகிறது.

140 கோடி குடிமக்களையும், நாட்டையும் இணைப்பதுதான் எந்த வகையான இணைப்பின் நோக்கமாகவும் இருக்க வேண்டும்" என தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x