Published : 28 Apr 2023 03:12 PM
Last Updated : 28 Apr 2023 03:12 PM

6 ஆண்டுகளில் 183 என்கவுன்ட்டர்கள்: உ.பி. அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

உச்ச நீதிமன்றம்

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு தொடங்கி இதுவரை நடந்த 183 என்கவுன்ட்டர்கள் தொடர்பான வழக்கு விசாரணையின்போது, அம்மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரியாகக் கேள்விகளை முன்வைத்துள்ளது. ரவுடி அத்தீக் அகமது கொலை தொடர்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. மற்றும் பிரபல ரவுடியான அத்தீக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது இருவரையும் 3 பேர் கும்பல் சுட்டுக் கொன்றது. கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி இச்சம்பவம் நடந்தது. இருவரையும் மருத்துவப் பரிசோதனைக்காக போலீஸார் அழைத்துச் சென்றபோது ஊடகவியலாளர்கள் போல் நின்றிருந்த 3 மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அத்தீக் அகமதுவின் மகன் ஆசாத் அகமதுவும் அவரது கூட்டாளியும் உ.பி. போலீஸாரால் ஜான்சி நகரில் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட சில நாட்களிலேயே அத்தீக், அஷ்ரப் படுகொலையும் நடந்தது. இது பல்வேறு அரசியல் கட்சிகளாலும் கண்டிக்கப்பட்டது. உ.பி மாநிலம் என்கவுன்ட்டர் பிரதேசமாகிவிட்டது என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி சாடியிருந்தார்.

இந்நிலையில், இன்று (ஏப்.28) உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் விஷால் திவாரி தாக்கல் செய்த அத்தீக் அகமது கொலை உட்பட உ.பி. என்கவுன்ட்டர்கள் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் எஸ்.ரவீந்திர பட் மற்றும் திபாங்கர் தத்தா அடங்கிய அமர்வு, உ.பி மாநில அரசுக்கு பல்வேறு கேள்விகளை முன்வைத்தது.

உச்ச நீதிமன்றம் எழுப்பிய கேள்விகள்: 1. அத்தீக் அகமதுவும், அவரது சகோதரர் அஷ்ரப் அகமதுவும் ஏன் அனைவரும் காணும்படி மருத்துவமனைக்கு நடத்தி அழைத்துவரப்பட்டனர். மருத்துவப் பரிசோதனைக்கு அவர்களை ஏன் ஆம்புலன்ஸில் கூட்டிச் செல்லவில்லை?

2. ஜான்சி நகரில் அத்தீக் அகமது மகன் ஆசாத் அகமது என்கவுன்ட்டர் செய்யப்பட்டது தொடர்பாக மாநில அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

3. விகாஸ் துபே என்கவுன்ட்டருக்குப் பின்னர் அமைக்கப்பட்ட நீதிபதி பிஎஸ் சவுகான் கமிட்டியின் காவல்துறை செயல்பாடு குறித்த பரிந்துரைகள் மீது மாநில அரசு இதுவரை என்ன மாதிரியான நடவடிக்கை எடுத்து அமல்படுத்தியுள்ளது?

இவ்வாறாக நீதிபதிகள் வினவினர். இதற்கிடையில், மனுதாரர் விஷால் திவாரி, உத்தரப் பிரதேச என்கவுன்ட்டர்கள் தொடர்பாக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் சுதந்திரமான விசாரணை கமிஷன் ஒன்றை அமைக்க வேண்டும் என்றார்.

அப்போது உ.பி. அரசு தரப்பில், மாநில அரசு ஏற்கெனவே நீதி விசாரணைக் குழு அமைத்துள்ளது என்றார். ஆனால், அதற்கு மனுதாரர் ‘இதில் மாநில அரசின் பங்கு சந்தேகத்துக்குரியது’ என்றார்.

இரு தரப்பு வாதத்தையும் கேட்ட உச்ச நீதிமன்றம், அத்தீக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது கொலை செய்யப்பட்டது தொடர்பாக மாநில அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது.

எந்தச் சூழ்நிலையில் அந்தச் சம்பவம் நடந்தது மற்றும் அது தொடர்பான விசாரணைக்கு மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடுமாறு வலியுறுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x