Published : 01 Sep 2017 08:30 AM
Last Updated : 01 Sep 2017 08:30 AM

தேரா சச்சா சவுதா ஆன்மிக அமைப்பின் புதிய தலைவராகிறார் குர்மீத் ராம் மகன் ஜஸ்மீத்

குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் மகன் ஜஸ்மீத் இன்சான், தேரா சச்சா சவுதா அமைப்பின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது.

ஹரியாணா மாநிலம் சிர்ஸாவில் தேரா சச்சா அமைப்பின் தலைமை ஆசிரமம் உள்ளது. இதன் தலைவராக இருந்த குர்மீத் ராம் மீது பாலியல் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில், குர்மீத் ராமுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

இதையடுத்து குர்மீத் ராம் சிறையில் அடைக்கப்பட்டதால், அவரது வளர்ப்பு மகளும் பெண் துறவியுமான ஹனிபிரீத், மற்றொரு பெண் துறவியான விபாசனா ஆகிய இருவரில் ஒருவர் ஆசிரமத்தின் அடுத்த தலைவராக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியானது. இதனிடையே, குர்மீத் ராமுக்கு தண்டனை அறிவிக்கப்பட்டதும் அவரது தாய் நசிப் கவுர், தேரா அமைப்பின் மையக் குழு கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதன்படி மையக் குழு கூட்டம் சிர்ஸாவில் புதன்கிழமை நடைபெற்றது. 45 உறுப்பினர்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், குர்மீத் ராமின் மகன் ஜஸ்மீத் இன்சானை புதிய தலைவராக முறைப்படி தேர்ந்தெடுப்பது என முடிவு செய்யப்பட்டதாக நசிப் கவுர் தெரிவித்தார்.

தேரா அமைப்பின் ஆதரவாளர்கள் ஜஸ்மீத்தை ஆன்மிக குருவாக ஏற்றுக் கொள்ள வாய்ப்பில்லை என்றும் ஆனால், அவர் நிர்வாகத்தை கவனித்துக் கொள்வார் என்றும் கவுர் தெரிவித்தார். மேலும் குர்மீத் மீதான வழக்கு விசாரணையின்போது அலட்சியமாக இருந்ததாக தேரா உறுப்பினர்களை கவுர் கடிந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் பாலியல் வழக்கில் குர்மீத் ராம் மீது கடந்த 2007-ம் ஆண்டு குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. அப்போதே, அவர் தனது மகன் ஜஸ்மீத் இன்சானை அடுத்த தலைவராக அறிவித்ததாக கூறப்படுகிறது.

கடந்த 1948-ம் ஆண்டு ஷா மஸ்தானா பலுசிஸ்தானி தேரா சச்சா சவுதா ஆன்மிக அமைப்பைத் தொடங்கினார். அவருக்குப் பிறகு தலைமை பொறுப்பேற்ற ஷா ஜி சத்னம், குர்மீத் ராம் அடுத்த தலைவராக நியமித்தார்.

இந்நிலையில், தேரா அமைப்பின் அடுத்த தலைவராக ஜஸ்மீத் பொறுப்பேற்றால், ரத்த வழியில் பொறுப்பேற்ற முதல் நபராக இருப்பார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x