Published : 05 Sep 2017 08:54 AM
Last Updated : 05 Sep 2017 08:54 AM

காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் நேற்று இருவேறு சம்பவங்களில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

பாரமுல்லா மாவட்டம், சோப்போர் நகரின் செக்-இ-பிராத் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் பாதுகாப்பு படையினர் நேற்று காலை அப்பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது தீவிரவாதிகள் சுட்டதால் மோதல் ஏற்பட்டது. இதில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. இதற்கிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாரமுல்லா, குப்வாரா ஆகிய மாவட்டங்களில் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

ஊடுருவல் முயற்சி முறியடிப்பு

ஜம்மு காஷ்மீரில் நேற்று தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது. அப்போது தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஜம்மு பிராந்தியத்தின் ஆர்னியா செக்டார், சர்வதேச எல்லைப் பகுதியில் பிஎஸ்எப் வீரர்களின் கண்காணிப்புச் சாவடிகள் உள்ளன. இந்த கண்காணிப்புச் சாவடி ஒன்றின் மீது நேற்று பிற்பகல் 3.40 மணிக்கு எல்லைக்கு அப்பாலிருந்து தீவிரவாதிகள் சுடத் தொடங்கினர். அப்போது தீவிரவாதி ஒருவர் எல்லை வேலி மீது ஏறி, இந்தியப் பகுதிக்குள் குதித்தார். எல்லைக்கு அப்பால் உள்ள தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுத்த அதேவேளையில், ஊடுருவிய தீவிரவாதியை பிஎஸ்எப் வீரர்கள் சுட்டுக்கொன்றனர்.

அங்கு மோதல் நீடிப்பதாக பிஎஸ்எப் செய்தித் தொடர்பாளர் நேற்று மாலையில் கூறினார்.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x