Last Updated : 02 Sep, 2017 08:57 AM

 

Published : 02 Sep 2017 08:57 AM
Last Updated : 02 Sep 2017 08:57 AM

எடியூரப்பா மகனின் கார் மோதி ஒருவர் பலி

கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகனும் பாஜக எம்எல்ஏ.வுமான ராகவேந்திராவின் சொகுசு கார் மோதி ஒருவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக முன்னாள் முதல்வரும், மாநில பாஜக தலைவருமான எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா (பாஜக) ஷிகாரிப்புரா எம்எல்ஏவாக உள்ளார். நேற்று முன்தினம் இரவு ராகவேந்திரா தாவண்கெரேவில் இருந்து ஷிமோகாவுக்கு தனது சொகுசு காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது ஷிகாரிப்புராவை சேர்ந்த ரவிந்திரா காரை ஓட்டியதாக தெரிகிறது. ஷிமோகா அருகேயுள்ள மடாப்புரா அருகே சென்றபோது சாலையில் நடந்து சென்ற சுரேஷ் (24) என்ற இளைஞர் மீது ராகவேந்திராவின் கார் வேகமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஓட்டுநர் கைது

இந்நிலையில் விபத்து நடந்த பகுதியில் திரண்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் ராகவேந்திராவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த பாஜகவினர் ராகவேந்திராவை அங்கிருந்து மீட்டு, பத்திரமான இடத்துக்கு அனுப்பி வைத்தனர்.

முன்னாள் பாஜக அமைச்சர் ரேணுகாச்சார்யா சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களை சமாதானப்படுத்தினார். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் சுரேஷின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ராகவேந்திராவின் ஓட்டுநர் ரவிந்திராவை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x