Published : 06 Apr 2023 06:47 AM
Last Updated : 06 Apr 2023 06:47 AM

ராகுல் காந்தி தகுதியிழப்பு - மத்திய அரசு இரட்டை நிலை என கார்கே குற்றச்சாட்டு

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: குஜராத்தை சேர்ந்த பாஜக எம்.பி. ஒருவருக்கு உள்ளூர் நீதிமன்றம், செஷன்ஸ் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தாலும் 16 நாட்கள் வரை அவர் தகுதியிழப்பு செய்யப்படவில்லை.

ஆனால் ராகுல் காந்தி மின்னல் வேகத்தில் தகுதியிழப்பு செய்யப்பட்டுள்ளார். இதுமோடி அரசின் கபட நாடகம் மற்றும் இரட்டை நிலைப்பாடுகளின் உச்சம். மோடி ஆட்சியில் யாருக்கு நிவாரணம் கிடைக்கிறது, யார் தண்டிக்கப்படுகிறார்கள் என்பதை பார்க்க முடிகிறது. குஜராத் எம்.பி. நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டார். ஆனால் உண்மையை பேசும் ஒருவர் நாடாளுன்றத்துக்கு வெளியில் வைக்கப்பட்டுள்ளார். இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.

குஜராத்தில் அரசு மருத்துவர் தாக்கப்பட்ட வழக்கில் பாஜகவின் அம்ரேலி எம்.பி. நாரன்பாய் பிகாபாய் கச்சாடியாவுக்கு ராஜ்கோட் நீதிமன்றம் கடந்த 2016 ஏப்ரலில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. பிறகு இந்த தண்டனை உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. இதையே மல்லிகார்ஜுன கார்கே தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி யும், ராகுல் காந்தி தகுதி இழப்பு குறித்து விவாதிக்கக் கோரி சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x