Published : 05 Apr 2023 03:39 PM
Last Updated : 05 Apr 2023 03:39 PM

அமைதியான முறையில் அனுமன் ஜெயந்தி: மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

புதுடெல்லி: நாடு முழுவதும் நாளை (ஏப்.6) அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படவுள்ள நிலையில் மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் விழா அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்யுமாறு மத்திய உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் ட்விட்டரில் வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. அது தொடர்பாக உள்துறை அமைச்சகம் பகிர்ந்துள்ள ட்வீட்டில், "மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அனுமன் ஜெயந்தி விழா அமைதியாக கொண்டாடப்படுவதை உறுதி செய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக, ராம நவமி திருவிழாவின்போது பிஹார், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா மாநிலங்களில் வன்முறை வெடித்தது. இதனைத் தொடர்ந்தே அனுமன் ஜெயந்தி விழாவை அமைதியாக நடத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், இன்று, டெல்லி ஜஹாங்கிர்புரி பகுதியில் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். ஜஹாங்கிர்பூர் பகுதியில் விஷ்வ இந்து பரிஷத் மற்றும் இன்னும் பிற அமைப்புகள் அனுமன் ஜெயந்தியை ஒட்டி பேரணி நடத்த அனுமதி கேட்டிருந்த நிலையில் போலீஸார் அனுமதி மறுத்துள்ளனர். ஏனெனில், கடந்த ஆண்டு இதே பகுதியில் அனுமன் ஜெயந்தியன்று இரு பிரிவினருக்கு இடையே நடந்த மோதலில் 8 போலீஸார் உள்பட சிலர் காயமடைந்தனர். இதனால் பதற்றத்தைத் தணிக்க போலீஸார் கொடி அணிவகுப்பு நடத்தினர். அந்தப் பகுதியில் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது,

பாதுகாப்பு வளையத்தில் ஹவுரா: கடந்த மார்ச் 30 ஆம் தேதி நாடு முழுவதும் ஸ்ரீ ராம நவமி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. அப்போது, மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் நடைபெற்ற ராம நவமி ஊர்வலத்தில் வன்முறை வெடித்தது. இதனால் சம்பவ இடத்தில் வாகனங்கள் மீது கற்கள் வீசியும், வாகனங்களுக்கு தீ வைத்தும் சிலர் வன்முறையில் ஈடுபட்டனர். இதைச் செய்தவர்கள் தேச விரோதிகள் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்திருந்தார். வன்முறையை தடுக்கும் நோக்கில் அந்த இடத்தில் இன்றளவு போலீஸ் படை அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படவுள்ள நிலையில் மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் விழா அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்யுமாறு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x