Published : 03 Apr 2023 04:43 AM
Last Updated : 03 Apr 2023 04:43 AM

டெல்லியில் இன்று சமூக நீதிக்கான தேசிய மாநாடு - திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 24 கட்சிகள் பங்கேற்பு

சென்னை: சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாடு இன்று (ஏப். 3) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் டெல்லியில் நடைபெறஉள்ளது. அவர் சென்னையில் இருந்து காணொலி வாயிலாக மாநாட்டில் உரையாற்றுகிறார்.

டெல்லி இந்தியா கேட் அருகில் இன்று மாலை 4.30 முதல் 7 மணிவரை நடைபெறும் இந்த மாநாட்டில், பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏ-க்கள் மற்றும் 24 கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் உள்ளிட்டோர் நேரிலும், காணொலி வாயிலாகவும் பங்கேற்க உள்ளனர்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சமூக நீதிக்கான போராட்டத்தையும், சமூக நீதி இயக்கத்துக்கான தேசியக் கூட்டுத் திட்டத்தையும் முன்னெடுத்துச் செல்வது தொடர்பாக இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

சமூக நீதியை நிலைநாட்ட வலிமையான அரசியல் இயக்கம் அவசியம் என்பதை உணர்ந்த அண்ணா 1949-ல் திமுக-வைத் தொடங்கினார். அப்போதிலிருந்து 74 ஆண்டுகளுக்கும் மேலாக, சமூக நீதி, திராவிட இனம், மொழி, கலை, பண்பாடு, நாகரிகத்தின் பெருமைகள், பாரம்பரியத்தைப் பாதுகாத்து வருகிறது திமுக. அண்ணாவைத் தொடர்ந்து, கருணாநிதியும் நவீன தமிழ்நாட்டை உருவாக்கவும், விளிம்புநிலை மக்களும் சமூக,பொருளாதார ரீதியாக மேம்பாடு அடையவும் பல திட்டங்களை செயல்படுத்தினார்.

அவரது வழியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத்து துறைகளின் வளர்ச்சி, அனைத்து மாவட்டங்களின் மேம்பாடு, அனைத்து சமூகமும் உயர்வு என்ற நோக்குடன் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறார்.

தமிழகத்தில் சமூகநீதி முழுமையாகச் செயல்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க அரசால் சமூகநீதிக் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு, கல்வி, வேலைவாய்ப்பு, பதவி, பதவி உயர்வு, நியமனங்கள் ஆகியவற்றில் சமூகநீதி முறையாகவும், முழுமையாகவும் பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணித்து வருகிறது.

சமூகம், அரசியல், பொருளாதாரம், மக்கள் மேம்பாடு, அனைத்திலும் நவீனமயம் உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய திராவிட மாடல் ஆட்சியை தமிழக அரசு நடத்தி வரும் நிலையில், இந்த மாநாடு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த மாநாட்டில் சமூக நீதிக்கான அகில இந்தியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் அமைப்பாளரும், ஓய்வுபெற்ற நீதிபதியுமான வி.ஈஸ்வரய்யா வரவேற்கிறார். ஒருங்கிணைப்பாளரும், எம்.பி.யுமான பி.வில்சன் முதன்மை உரையாற்றுகிறார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணாலி வாயிலாக தலைமை உரையாற்றுகிறார்.

சிறப்பு விருந்தினர்களாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், பிஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் டி.ராஜா, சமாஜ்வாதி கட்சித் தலைவரும், உத்தர பிரதேச மாநில எதிர்கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ், ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான ஃபரூக்அப்துல்லா, அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை குழுத் தலைவர் டெரிக் ஓ பிரைன், தேசிய காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் மகாராஷ்டிரா துணை முதல்வருமான சஜன் சந்திரகாந்த் புஜ்பால், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங், பிஹார்ராஷ்ட்ரிய ஜனதா தள நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ் குமார் ஜா, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் அமைப்புச் செயலாளரும், எம்.பி.யுமாந இ.டி.முகமது பஷீர், பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் டாக்டர் கே.கேசவ ராவ், ராஷ்ட்ரிய சமாஜ்பக் தேசியத் தலைவரும், மகாராஷ்டிரா மாநில முன்னாள் அமைச்சருமான மகாதேவ் ஜன்கர், அசாமைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் நபா குமார் சாரானியா, ஹரியானா லோக்தந்திர சுரக் ஷா கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. ராஜ்குமார் சயினி ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.

மேலும், இந்த மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்.பி., விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி., மனிதநேய மக்கள்கட்சித் தலைவர் எம்.எச். ஜவஹிருல்லா எம்எல்ஏ, கொமதேக பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் எம்எல்ஏ, தவாக தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொள்கின்றனர்.

மூத்த பத்திரிகையாளர் திலிப் மண்டல், பிஏஎம்சிஇஎஃப் தேசிய தலைவர் வாமன் மேஷ்ராம், பிஏஜிஏஏஎம் தேசிய அழைப்பாளர் பி.என்.வாங், இந்திய மக்கள் கட்சியின் முன்னாள் தலைவர் பி.டி.போர்கார், சம்விதான் பச்சாவோ சங்கர்ஷ் சமிதி அழைப்பாளர் அனில் ஜெயிந்த், டெல்லி பல்கலை.பேராசிரியர்கள் லஷ்மன் யாதவ், சுராஜ் மண்டல், ரத்தன் லால், மத்திய பிரதேச பிச்சுடா வர்க் சம்யுக்த் சங்கர்ஷ் மோர்ச்சா முதன்மைஒருங்கிணைப்பாளர் பகதூர் சிங்லோடி ஆகியோர் அறிமுக உரையாற்றுகின்றனர். சமாஜிக் சேட்னா அறக்கட்டளை நிறுவனரும், அலாகாபாத் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான வீரேந்திர சிங் யாதவ் நன்றி கூறுகிறார். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x