Published : 01 Mar 2023 06:19 AM
Last Updated : 01 Mar 2023 06:19 AM

2047-க்குள் வளர்ந்த தேசமாக மாற தொழில்நுட்பம் பேருதவி புரியும் - பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை

புதுடெல்லி: வரும் 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த தேசமாக உருவெடுக்க தொழில்நுட்பம் பேருதவியாக இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

திறன் வெளிப்படுத்தல்; தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வாழ்வை எளிமையாக்கல் என்ற தலைப்பில் பட்ஜெட்டுக்கு பிந்தைய வெப்பினாரில் கலந்து கொண்ட பிரதமர் இதுகுறித்து மேலும் கூறியது:

சிறு நிறுவனங்கள் தொழில் விதிமுறைகளை கடைபிடிக்கச் செய்யும் செலவினங்களை குறைக்க அரசு விரும்புகிறது. எந்தவிதமான செலவினங்களை குறைக்க வேண்டும் என்பதை பட்டியலிட்டுத் தருமாறு தொழில் நிறுவனங்களிடம் கேட்டுள்ளோம். இதுவரை இதுபோன்ற 40,000 பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

வரும் 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த தேசம் என்ற அந்தஸ்தை அடைவதற்கு தொழில்நுட்பம் மிகப் பெரிய அளவில் உதவும். டிஜிட்டல் புரட்சி அனைத்து மக்களையும் சென்றடைவதை உறுதி செய்வதற்காக டிஜிட்டல் உள்கட்டமைப்பை நவீனமான முறையிலும், பரந்த வகையிலும் உருவாக்கி வருகிறோம்.

வரி செலுத்துவோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நேரடி தொடர்பில்லா வரி செலுத்தும் முறையை தொழில்நுட்பத்தின் உதவி கொண்டு உருவாக்கி செயல்படுத்தியுள்ளோம்.

5ஜி மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) போன்ற தொழில்நுட்பங்கள் மருத்துவம், கல்வி, விவசாயம் உள்ளிட்ட பல துறைகளில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்த தயாராக உள்ளன. சாமானியர்கள் எதிர்கொள்ளும் 10 சிக்கல்களை அடையாளம் கண்டு அதற்கு செயற்கை நுண்ணறிவு முறையில் தீர்வு காண சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் முற்சிக்க வேண்டும்.

தொழில்நுட்பம்தான் ‘‘ஒரே நாடு, ஒரே ரேஷன்’’ என்ற அடிப்படை திட்டத்தின் முயற்சியை உருவாக்கியது. ஜன்தன் யோஜனா, ஆதார், மொபைல் நம்பர் ஆகிய மூன்றும் சேர்ந்து ஏழைகளுக்கு நன்மைகளை வழங்க பல வழிகளில் உதவியுள்ளது. இவ்வாறு பிரதமர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x